RSS

Monthly Archives: பிப்ரவரி 2009

மோசடி சாமியார் சுதான்சு மகாராஜ்


இந்திய அரசின் வருமான வரித்துறை அவ்வப்போது முழித்துக் கொள்ளும். இதற்கு பல காரணம் உண்டு. பெரும்பாலும் இவை பழி வாங்கும் நோக்கத்ிற்காக ஆளும் அரசால் ஏவப்படும் ஏவல் நாய் போல் செயல்படுவது உண்டு. சில நேரம் தன்னை அறியாமல் கடமையை ஆற்றும். அப்படி கடமையை ஆற்றும் விஷயங்களை இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் எப்போதாவது வெளியிடும். அப்படி வெளியிடப்பட்ட செய்திதான் நீங்கள் கீழே படிக்க போவது.

இந்தியாவில் சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. இவர்களுக்கு தொழில் என்ன? வருமானம் என்ன? அது எங்கு இருந்து வருகிறது? இவர்கள் சொத்து என்ன? இவை எப்படி மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகிறது? போன்ற கேள்விகளை எவரும் எழுப்பவதில்லை. “தான் இந்த உலகத்தை இரட்சிக்க வந்த கடவுள்என்று கூறிக்கொள்ளும் இவர்கள் மனிதன் உருவாக்கிய சட்டத்திற்க்கு கட்டுப்படமாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு சாமியார் வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக வருமான வரித்துறை 2006 ஆம் ஆண்டே கண்டு பிடித்துள்ளது ஆனால் எவ்வளவு வரி ஏய்ப்பு என்ற விவரத்தை இது வரை வெளியிடவில்லை வருமான வரித்துறை. ஆனால், 16 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது என அம்பலப்படுத்துகிறது மெயில் டுடே நாளிதழ்.

34419671_1

மோசடி மன்னன்

பா.. ஆதரவு ஆன்மீக அமைப்பான விஸ்வ ஜாகுருதி மிஷன் 1991 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் என்று கூறிக் கொள்வது வழக்கம்.

மும்பையைச் சேர்ந்த மகாவீர் பிரசாத் என்ற தொழிலதிபர் இந்த அமைப்புக்கு 55 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு பெறுவதற்க்காக வருமான வரி சட்டத்தின் 80G பிரிவின் கீழ் சான்றிதழ்களையும் இவர் இந்த அமைப்பிலிருந்து பெற்றார். ஆனால், வரி விலக்குக்காக அவற்றை சமர்ப்பித்த போது, அவையனைத்தும் மோசடியாக தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்தது. இவர் அளித்த புகாரின் பேரில் டிச 31.2006 முதல் இந்த அமைப்பை தங்கள் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டுவந்தது வருமான வரித்துறை. இந்த ஆன்மீக அமைப்பு வைத்துள்ள வருமான வரிக்கணக்கு எண்ணே போலி என்ற அதிர்ச்சிதரும் மோசடி அம்பலமாகியுள்ளது. மோசடி செய்தற்க்காக அமைப்பின் பொருளாளரை 2007ஆம் ஆண்டே கைது செய்தது வருமான வரித்துறை.

இந்த விவகாரத்தை மெயில் டுடே அம்பலபடுத்தியவுடன் உடனே இந்த செய்தியை பிரசுரிக்கவேண்டாம் என இந்த அமைப்பின் போது செயலாளர் தேவ்ராஜ் கடாரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த அமைப்பின் நிறுவனர் சுதான்சு மகாராஜ் பா... உடன் நெருங்கிய தொடர்புடையவர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த மோசடி சாமியார் உடன் நின்று போஸ் கொடுக்க பாஜக தலைவர்கள் தவறமாட்டார்கள். தற்போது பொருளாளரையை பலிகாடவாக மாற்றிவிடலாமா என்று மோசடி அமைப்பினார் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. இது ஒன்றும் இவர்களுக்கு புதிது இல்லை. இது போன்ற அனுபவம் பல உண்டு பா...விற்க்கு.

Visit: http://epaper.mailtoday.in/epaperhome.aspx?issue=2422009

 

குறிச்சொற்கள்:

நீதி கடை சரக்கா?


rje0027l

இந்திய நீதித்துறை தனது தரத்திலிருந்து தாழ்ந்துபோய்விடாமல் இருக்க வேண்டுமென்றால், ஜனநாயகம் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நீதிபதிகளைப் போல போலிமுடி, உடைகள் ஆகியவற்றுடனான தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, திறந்த புத்தகமாக நீதிபதிகள் இருக்க வேண்டும்.

நீதிபதி ஜெரோம் பிராங்க் இவ்வாறு எழுதினார். “ஜனநாயகத்தில், அரசின் எந்த ஒரு கிளையின் செயல்பாடுகளை மக்களுக்கு பரிச்சயமாக்குவது அறிவுபூர்வமற்றதாக எப்போதுமே இருக்காது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் தவிர்க்க முடியாமல் ஏற்படக் கூடிய தவறுகளை, ஒப்புக்கொள்ளாத மக்களை குழந்தைகள் போன்று நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்க, இந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை மக்களுக்கு சொல்லுவதே சரியானதாக அமையும் என்று குறிப்பிட்டார்.

நீதித்துறை ஊழலால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது என்று எந்தவித நம்பத்தகாத கொள்கைகளையும் கண்டுபிடிக்க அனுமதிக்கக்கூடாது. நீதிமன்றங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், தவறுகளுக்கு பொறுப்பேற்பதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் தண்டிக்கும் அதிகாரமுள்ள ஆணையத்தின் வழிகாட்டுதலில் இவை இயங்க வேண்டும். நீதித்துறையின் புகழைக் குலைக்கும் வகையில் ஒரு நீதிபதி ஊழலில் ஈடுபட்டால் கூட அவரை வெளியேற்ற வேண்டும்.

தற்போது நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை என்னைப் பொறுத்தவரை அரசியல் சட்டரீதியாகத் தேவையற்றது. உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் சுயேட்சையான தன்மை வேண்டுமென்று 1998ல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியது. இதனடிப்படையில் இருப்பதில் மூத்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவே தேர்வை செய்ய வேண்டும் என்று முடிவானது. நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அமைச்சரவையிடமிருந்து பறிக்கப்பட்டு நீதிபதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கு நிபுணத்துவம் தேவை. இதில் மூத்த நீதிபதிகளாக இருக்கட்டும் அல்லது இளைய நீதிபதிகளாக இருக்கட்டும், அவர்களுக்கு போதிய பயிற்சி கிடையாது. சோசலிசமதச்சார்பற்றஜனநாயகக் கருத்துகளில் நம்பிக்கையற்றவர்களையும், வர்க்க ரீதியாக பாரபட்சம் காட்டக்கூடியவர்களையும் ஒருபோதும் நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது. நிர்வாகமும், சட்டமன்றங்களும் தங்கள் எல்லையைத் தாண்டும்போது நீதிபதிகள் அவர்களைத் திருத்துகின்றனர். ஆனால் நீதிபதிகள் தவறு செய்யும்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் சட்ட ரீதியான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்காக தெளிவான சட்ட வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும்.

சலுகைகளை மட்டுமே எதிர்நோக்கும் பூஷ்வா தொழிற்சங்கத்தைப் போல நீதித்துறை இயங்குகிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் 180 நாட்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 210 நாட்களும் மட்டுமே வேலை செய்கின்றனர். வழக்குகள் தேங்கிப்போய் மலைபோல் குவிந்து கிடக்கிறது. ஆனால் நீண்ட விடுமுறைகளை ஒழிக்க நீதிமன்றங்கள் அக்கறை கொள்வதில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாலை நேரங்களிலும் வழக்குகளை விசாரிக்க சில நீதிபதிகள் தயாராக உள்ளனர் என்பதும் உண்மையே.

வழக்கை விசாரிக்க பல நாட்களை சில நீதிபதிகள் எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்டால் வழக்கே முடிந்துவிடும் என்ற நிலையில், சில நீதிபதிகள் ஒத்திவைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். காலந்தாழ்த்துதல் மற்றும் யோசிக்காமலேயே அதிவிரைவில் செயல்படுதல் ஆகிய நீதிபதிகளுக்கு இருக்கக்கூடாத செயல்பாடுகள் அவர்களை தொற்றிக் கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளோ அல்லது மேற்பார்வை செய்வதற்கான ஏற்பாடுகளோ இல்லை.

உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க முடியும் என்பதில் நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக்கணக்கில் தள்ளிப் போடும் வழக்கம் உள்ளது. சில சமயங்களில் தீர்ப்பே வராத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவற்றை தணிக்கை செய்வதற்கோ அல்லது பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வதற்கோ எந்தவழிமுறையும் இல்லை. குறித்த நேரத்திற்குள் நீதிமன்றங்களே தங்கள் வேலைகளை செய்யாவிட்டால், நிர்வாகத்தின் பணிகளை குறித்த நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தால் எவ்வாறு கூற முடியும்?

தீர்ப்புகளை வழங்காமலேயே இருக்கும் நீதிபதிகள், அதற்கு பொறுப்பேற்காமல் இருப்பது மட்டுமல்ல, பதவி உயர்வும் பெற்று சென்று விடுகிறார்கள். இது குறித்தெல்லாம் தேர்வுக்குழு விசாரிக்காது. தேர்வு செய்யும் முறை வழக்கறிஞர்கள், மக்கள் மன்றங்கள் மற்றும் மக்களுக்கு தெரிந்து விடாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடிமகன்களிலிருந்து ஒருபடி மேலே தங்களை வைத்துக் கொள்ள, தங்களைப் பற்றிய விபரங்களை வெளியிடாமல் இருக்கும் உரிமையை நீதிபதிகள் கோருகிறார்கள். இரும்புத் திரை ஒன்றை விரித்துக் கொண்டு அமரவே அவர்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்றிருந்தாலும், நீதித்துறை கடமை தவறுவது மீதான கருத்துகளுக்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சியிலும் நீதிபதிகள் இறங்கிவிடுகிறார்கள்.

பேராசை பிடித்த காலத்தில், கலாச்சாரமும் வர்த்தகமயமாகியுள்ளது. சம்பள உயர்வு குறித்த தொழிலாளர்களின் கோரிக்கைகளெல்லாம் தேங்கிக்கிடக்கின்றன. பொருளாதாரம் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது. ஏராளமானோர் வேலையின்மையை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சலுகைகளை பெருமளவில் அதிகப்படுத்த வேண்டும் என்று சில நீதிபதிகள் கோருகிறார்கள். இல்லாதவர்களின் எண்ணிக்கையும், மனித உரிமைகளை பல வகைகளில் இழந்தவர்களும் இந்தியாவில் அதிகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஊழல்வாத செயல்களால், ஜனநாயகக் குடியரசில் சோசலிச ரீதியிலான நீதியை வழங்குவதிலிருந்து இவர்கள் தகுதியிழந்துவிடுகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளாத சுதந்திரம் என்பதால் பல நீதிபதிகள் தங்கள் மனச்சாட்சியையே இழந்துவிட்டார்கள் என்ற உண்மை அப்படியே தொக்கி நிற்கிறது. சலுகைகளை மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய பூஷ்வா தொழிற்சங்கங்களைப் போல நடந்து கொள்வது இப்பிரச்சனைகளைத் தீர்த்து விடாது. நீதி வழங்கும் தரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, முறையீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து சமூக ரீதியிலான தீர்ப்பை வழங்க வேண்டும்.

நீதித்துறை என்பது மக்கள் கையில் இருக்கும் பெரும் கருவியாகும். ஒரு சில தலைமை நீதிபதிகள், அதை மக்கள் கண்களிலிருந்து மறைக்க முயல்வதால் வெறும் கூடுகளாக மாறிவிடாது. இந்திரா காந்தியின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு நான் தடைவிதித்தபோதும் சரி, அல்லது முழுமையான தடையை விதிக்க மறுத்தபோதும் சரி, அச்சத்தாலோ அல்லது சலுகைகளைப் பெறுவதற்காகவோ நான் சரணாகதி அடைந்துவிடவில்லை. எனது கடமையை நான் நிறைவேற்றினேன். ஆனால் அதற்குப்பிறகு அவசர நிலை என்ற பெரும் பேரழிவு ஏற்பட்டு, அனைத்து மனித உரிமைகள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை பறிக்கப்பட்டன. நான் அளித்த தீர்ப்பு மூன்று பேர் கொண்ட பெஞ்சால் மாற்றிய மைக்கப்பட்டது.

நிறைவாக, நீதிமன்றம் என்பது மறைந்து கொண்டு இயங்கும் கோழை அல்ல. வெளிப்படையான மற்றும் அச்சமின்றித் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாகும். ரகசியம் என்பது நீதித்துறையைப் பொறுத்தமட்டில் பொருத்தமில்லாத ஒன்றாகும். இல்லையென்றால் ஜனநாயகமே கேலிக்குள்ளாகும். ஏழைகள் ஒரு சர்வாதிகார ஆட்சியை எதிர்கொள்ள நேரிடும். மக்களின் சக்தியால் உருவாகியுள்ள நமது குடியரசில், இப்படி ஒரு நிலையை அனுமதிக்கக் கூடாது. இந்திய நீதித்துறைக்கு இன்னும் மக்களிடத்தில் உள்ள மதிப்பை குலைக்கக்கூடிய வகையில், உச்சநீதிமன்றத் தில் ஏழு ஆண்டுகள் எனது வாழ்க்கையைக் கழித்த நான் சொல்லிவிடக் கூடாது. நமது சமூகத்தில் இந்திய நீதித் துறைக்கு என்று உயர்ந்த இடம் உள்ளது.

நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் என்று அனைத்து வகையான அம்சங்களையும் நிலைநிறுத்தும் வகையில் தீர்ப்புகளை வழங்கிட வேண்டும். நீதி வழங்குவது ஒன்றும் பல அடுக்குகளைக் கொண்ட பெரு வர்த்தகமோ அல்லது வணிகமயமாக்கலோ அல்ல. நாட்டின் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் பெரும் நம்பிக்கையே நீதி வழங்குதலாகும்.

-வி.ஆர்.கிருஷ்ணய்யர்
நன்றி : ‘தி இந்து (பிப்.19)

 

அமெரிக்காவின் ‘சத்யம்’


stanford

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பரப்பரப்பாக முணுமுணுக்கும் வார்த்தைசத்யம்“. ஆனால் அமெரிக்காவில் இப்போது பரப்பரப்பான வார்த்தைஆலன் ஸ்டான்போர்ட்“. இவருடைய தொழில் வங்கி தான். வங்கியின் பெயர் ஸ்டான்போர்ட். அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலும் கிளைகள் உள்ளன.அமெரிக்க செல்வந்தர்களில் ஒருவரும் அவர்.

திடிரென்று ஒருநாள் ஆலன் ஸ்டான்போர்ட் தலைமறைவு ஆகிவிட்டார். இவருடைய வங்கியில் பணம் எடுக்க மக்கள் சென்றால் வங்கி பூட்டப்பட்டுள்ளது. போன் செய்தால்இந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நாள் நன்னாளாகட்டும் என்ற பதிவு செய்யப்பட்ட செய்தியே பதிலாகக் கிடைக்கிறது. அவர் இருப்பிடம் தெரியவில்லை என்று இந்நிறுவனம் கூறுகிறது. அவருடைய வீடு பூட்டப்பட்டுள்ளது. அவர் தற்சமயம் வீட்டில் இல்லை என்று காவலாளி கூறுகிறார்.

அமெரிக்க கோடீஸ்வரர் ஆலன் ஸ்டான்போர்ட் அமெரிக்க காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். அவர் 5,000 கோடி டாலர் மோசடி செய்து வாங்கிய சொத்துக்களை அடையாளம் காண காவல்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பிரிட்டனில் அவருடைய முதலீடுகளையும் வைப்புகளையும் கண்டறிய நிதிச்சேவை ஆணையத்தின் உதவியை அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு நிறுவனம் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்சஸ் கமிஷன்(SEC) நாடியுள்ளது.

ஸ்டான்போர்ட் முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளார் என்று SEC நம்புகிறது. மற்றுமொரு மோசடிப் பேர்வழி மாடோப் உடன் உள்ள தொடர்புகள் பற்றி இவர் பொய் சொல்லியுள்ளார். இவருடைய வணிக நடவடிக்கைகளையும், தனிப்பட்ட லாபங்களையும், வரவுகளையும் டல்லாஸ் நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது

.stanford_bank-q

ஜனாதிபதி ஒபாமாவின் தேர்தல் நிதிக்கு இவர் நன்கொடை அளித்துள்ளார். வேல்ஸ் இளவரசர் சார்லஸ் நடத்திய வருடாந்திர நன்கொடை போலோ விளையாட்டுக்கு இவர் புரவலராக இருந்துள்ளார்.

பிரபல கால்பந்து வீரர் மைக்கேல் ஓவன் இவருடைய நிதி குழுமத்தின் விளம்பரத் தூதராக இருக்கிறார். இவருடைய நிதி வசீகரம் கோல்ப், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து எனப் பலவற்றை கவர்ந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட்டிலும், இவருடைய செல்வாக்கு ஆட்சி நடத்தியது.

stanford_10_350x435_489380a

stanford_06_585x435_489371a

 

இந்திய முதலாளிகள் மட்டும் இந்திய அரசை ஆட்டி வைக்கவில்லை. அமெரிக்காவை ஒபமா ஆண்டாலும் அவரை ஆட்டி வைப்பது அமெரிக்க முதலாளிகள் தான்.

pls visti:http://business.timesonline.co.uk/tol/business/industry_sectors/banking_and_finance/article5780591.ece

http://business.timesonline.co.uk/tol/business/industry_sectors/banking_and_finance/article5780591.ece

http://www.stanfordinternationalbank.com/contactus.cfm

 

இன்றைய கருத்துப் படம்


301208bjpfunds090209irr2104679259_b21335f2e6

 

குறிச்சொற்கள்:

கொள்ளை போக ஏதுவாய் கொல்லைக் கதவு திறப்பு


காட்டிக்கொடுப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்றுநேரடியாகக் காட்டிக் கொடுப்பது. மற்றொன்றுமறைமுகமாகக் காட்டிக் கொடுப்பது. இந்த இரண்டிலுமே முந்தைய பாஜக கூட்டணி அரசிலிருந்து தான் எவ்வகையிலும் மாறுபட்டுவிடவில்லை என்று மறுபடி காட்டியிருக்கிறது இன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசு.

ஏற்கெனவே இந்தியத் தொழில் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு கணிசமாக உயர்த்தப்பட்டு, கிட்டத்தட்ட அந்த அந்நிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் இந்திய நிறுவனங்கள் இயங்கும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. வாஜ்பாய் அரசாலும், பின்னர் மன்மோகன் சிங் அரசாலும் புறந்தள்ளப்பட்ட அந்த எச்சரிக்கைகளின் நியாயத்தை அண்மைக்கால நிகழ்ச்சிப் போக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.

இன்னும் சில மாதங்களில் இந்த அரசு விடைபெற இருக்கிற நிலையில், அவசர அவசரமாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய முதலீட்டு நிறுவனங்கள் மூலமாகச் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இனி உச்சவரம்பு கிடையாது!

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூடி இந்த கொள்கை மாற்றத்தைச் செய்துள்ளது. அதன் வழிகாட்டலின்படி, உள்நாட்டிலேயே இருக்கும் இந்தியர்களின்உடைமையாகவும்” அவர்களதுகட்டுப்பாட்டிலும்” இருக்கிற இந்திய நிறுவனங்களில் மறைமுகமாக வெளிநாட்டு முதலீடு எவ்வளவு இருக்கிறது என்பதை மதிப்பிட, இந்திய முதலீட்டு நிறுவனத்தின் மூலமாக வருகிற வெளிநாட்டு முதலீடுகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையை எளிமையானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றுவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக, அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் .சிதம்பரம் கூறியிருக்கிறார். வெளிப்படையானதாக கொள்கையை மாற்றுவதற்கான ஒரு முடிவை இவ்வளவு அவசரமாக, ரகசியமாக, நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்காமல்அதுவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடங்குவதற்கு ஒரே ஒரு நாள் இருக்கும்போதுமேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இந்த முடிவின் பின்னணியில் உள்ள நிர்ப்பந்தங்கள் என்ன? நாடாளுமன்றத்தில் அதைப் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலேயே இப்படி முதுகுக்குப் பின்னால் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாற்றத்தால் வெளிநாட்டு முதலீடுகள் வருவது பெருமளவுக்கு அதிகரிக்கும், இன்றைய சிக்கலான பொருளாதாரக்களத்தில் ஆக்கப் பூர்வமான சிக்னல்களை அனுப்பும் என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப்பின் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. ஆக, இதுவரை இதே காரணத்தைக் கூறி இவர்கள் கையாண்டகதவு திறப்பு’ நடவடிக்கைகளால் அப்படியொன்றும் வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொட்டவில்லை என்பது நிரூபணமாகிறது. அப்படியே வந்திருக்கக் கூடிய அந்நிய முதலீடுகளிலும் பெரும்பகுதி, தொழில் உற்பத்திக்கு உதவிடுவதாக இல்லாமல், பங்குச் சந்தைச் சூதாட்டத்திற்கான பந்தயத் தொகையாகவே வந்திருக்கிறது என்பதும் தெளிவாகிறது. அந்நிய முதலீட்டின் முழு ஆலிங்கனத்துக்குத் தோதாகத் திறக்கப்பட்டிருக்கும் இந்தக் கதவை இழுத்து மூடியாக வேண்டும்.

 

குறிச்சொற்கள்:

அத்வானி மாறவில்லை


ராமர் கோவிலை பாஜக மறக்கவில்லை என்று அக்கட்சியின் “பிரதமர் வேட்பாளர்” எல்.கே.அத்வானி கூறியுள்ளார். அந்தக் கால ராஜாக்கள், தாங்கள் மிகப் பெரிய சக்கரவர்த்தி என்று அறிவிக்க, அசுவமேத யாகம் நடத்துவார்களாம். அதாவது, ஒரு குதிரையை அவிழ்த்து விடுவார்களாம். அந்தக் குதிரை பல நாடுகளுக்கும் சென்று சுற்றி வருமாம். அந்தக் குதிரையை பிடித்து கட்டுபவர்களோடு மன்னர் சண்டைக்கு செல்வாராம்.

அது போல, எதிர்கால பிரதமர் என்று அத்வானி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குதிரைக்கு பதிலாக அவரே யாத்திரை நடத்தி வருகிறார். இதையொட்டி உ.பி.யில் நடை பெற்ற ராஷ்ட்ர ரக்ஷா பேரணியில் பேசும் போதுதான், அத்வானி இவ்வாறு கூறியிருக்கிறார். ஆனால், அத்வானியின் அசுவமேத குதிரை இப்பொழுதே வாயில் நுரை தள்ள தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமென்ற உறுதியான நிலைபாடு மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க பாஜகவுக்கு உதவியுள்ளது என்று அத்வானி வெளிப்படையாக கூறியுள்ளார். எனவே, இந்தத் தேர்தலிலும் ராமர் கோவில் கட்டுவோம் என்ற முழக்கத்தை பாஜகவினர் மீண்டும் எழுப்பத் துவங்கியுள்ளனர்.

பாஜகவை பொறுத்தவரை, ராமர் ஒரு தேர்தல் ஏஜெண்டை போன்றவர். தேர்தல் வந்தவுடன் பாஜக பரிவாரத்திற்கு ராமர் பக்தி பெருக்கெடுத்து ஓடத் துவங்கிவிடும். ஏற்கெனவே, ராமருக்கு கோவில் கட்டுவதாக கூறி பாபர் மசூதியை இடித்து, நாடு முழுவதும் பகையை தூண்டிவிட்டு, பல்லாயிரம் அப்பாவி மக்கள் பலியாவதற்கு காரணமான இந்தக் கூட்டம் மீண்டும் ராமநாமம் உச்சரிக்க துவங்கிவிட்டது.

மறுபுறத்தில், மதச்சார்பற்ற அணியின் மொத்தக் குத்தகையை தாங்கள் எடுத்துள்ளதாக காங்கிரஸ் தம்பட்டமடிக்கிறது. நாடாளுமன்றத்தில் மன்மோகன்சிங் அரசு தலைக்குப் புற கவிழ இருந்ததை காப்பாற்றி நிமிர்த்தி வைத்திருப்பது சமாஜ்வாதி கட்சிதான். பாபர் மசூதி இடிப்புக்கு, தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, சமாஜ்வாதி கட்சியுடன் கரைந்துள்ளார். இவரை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் மதச்சார் பின்மையை காப்பாற்ற போகிறார்களாம். நல்லக் கூத்து.

 

குறிச்சொற்கள்:

9200000000000000.00


 

மேலே உள்ள எண்களை பார்த்தால் உங்களுக்கு தலை கண்டிப்பாக சுற்றும். இந்த பணம் இந்திய நாட்டில் உள்ள குப்பனுக்கோ சுப்பனுக்கோ சொந்தம் இல்லை. வெறும் 80 ஆயிரம் இந்தியர்களுக்கு சொந்தமான பணம். பத்திரமாக உள்ள இடம் ஸ்விஸ் வங்கி தான். 

கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அந்நிய வங்கிகளில் இந்தியர்கள் ஒளித்து வைத்திருக்கும் கள்ளபணம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. 2006ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 64லட்சம் கோடி ரூபாயை இந்தியப் பெரும் பணக்காரர்கள் அங்கு பதிக்கி வைத்திருந்தனர். 2008ஆம் ஆண்டில் சுமார் 92 லட்சம் கோடியைத் தண்டிவிட்டது. இந்த புள்ளி விபரங்கள் எப்போதுமே உறுதிப்படுத்தப்படாதவையாகவே இருந்தாலும், எந்த நாட்டு அரசும் இந்தப் புள்ளி விபரங்களை மறுத்ததில்லை. ஸ்விஸ் வங்கிகளும் இது குறித்து எந்த மறுப்பு அறிக்கையையும் வெளியிட்டவில்லை.

இந்த பணம் எப்படி சேர்க்கப்பட்டது தெரியுமா? இந்திய நாட்டில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியை சுரண்டியும், முறைசார தொழிலாளிக்கு தெரியாமல் உழைப்பை சுரண்டியும், கமிஷன், லஞ்சம், வரி ஏய்ப்பு பல்வேறு முறைகேடுகள் மூலமாக சேர்க்கப்பட்டது.  இது வெறும் புள்ளி விபரம் தான்உண்மை கணக்கு வங்கி சொன்னால் மட்டுமே நாம் அறியமுடியும்.

நிலமை இவ்வாறு இருக்க, நமது ஆட்சியாளர்கள் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் போது கஜனா காலி என்று
ஏற்கனவே ஆட்சி செய்தவர்களை குறை சொல்லிவிட்டு உலக வாங்கியிடமோ அல்லது IMFயிடமோ, இல்லை வளர்ந்த நாடுகள் ஆனா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலிய நாடுகளிடம் பிச்சை பாத்திரத்தை நீட்டுவது.

பணத்தை எந்த நாடும் இலவசமாக தருவதில்லை. அவர்களுக்கு வட்டி மட்டும் குடுத்தால் போதும் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், இதுவரை கடன் குடுத்த எந்த நாடும் காரார்ராக கடனையும், வட்டியையும் கேட்டு மிரட்டியதில்லை. அவ்வப்போது அறிக்கைகளும், எச்சரிக்கைகளும் வெறும் காகித அம்புகள் வந்து விழும்.

வேற என்ன தான் அவர்கள் கேட்பார்கள்உங்கள் நாட்டில் வியாபாரம் செய்வதற்கு உள்ள தடையை நீக்குங்கள். தொழில் தொடங்குவதற்கு உண்டான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தாருங்கள். முடித்தால் நிலம், மின்சாரம், ஏற்றுமதிக்கு வரி விளக்கு, மூலதன வரி அறவே ரத்து, தொழிற்சங்க உரிமை மறுப்பு, குறைந்த கூலிக்கு ஆட்கள். இதுபோதாத கொள்ளை அடிப்பதற்கு. ஒருபுறம் கடனை காட்டி அரசு கூடுதலாக வரியை விதிக்கும் மறுபுறம் வெளிநாட்டு நிறுவங்கள் இந்தியர்களை சுரண்டிக் கொண்டு இருக்கும். பணக்காரன் மேலும் பணம் சேர்ப்பன், ஏழை இன்னும் ஏழையாக்கிக் கொண்டு இருப்பான்.

இந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதம் மூலம் பல சாதனைகளை நாம் நிகழ்த்த முடியும்.

நமது தலையில் சுமத்தபட்டிருக்கும் அந்நிய கடனை முழுவதும் அடைத்த பிறகும் கூடுதலாக 12 அல்லது 13 மடங்கு நிதி இருக்கும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 49 லட்சம் கோடி ரூபாய். இதை விட இருமடங்கு அதிகமான பணம் ஸ்விஸ் வங்கிகளில்.

இந்த இரண்டை மட்டும் நான் இங்கே எழுதியிருக்கிறேன்,

மீதியை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்

 

குறிச்சொற்கள்:

சார்லஸ் டார்வின்- 200


சார்லஸ் டார்வின்அந்த அசாத்தியமான மனிதர் பிறந்து 200 ஆண்டுகள் முடிந்துவிட்டதையொட்டி உலக அளவில் அவருக்கு புகழ்மாலை சூட்டும் நிகழ்ச்சிகள் பிப்ரவரி 12ம் நாள் நடைபெற இருக்கின்றன.

அவரை நியூட்டனுக்கு, ஐன்ஸ்டினுக்கு, கலிலியோவுக்கு ஈடாக புகழ்பாடி உலக விஞ்ஞானிகள் விழா எடுக்க இருக்கிறார்கள்.

டார்வின் கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மனித சிந்தனைக்கு ஒரு பெரும் ஒளியை வீசியது, மதகுருக்களுக்கு மருட்சியை, கோபத்தை உருவாக்கியது. பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பற்றி சனாதனவாதிகள் இரு நூற்றாண்டுகள் ஆன பின்னும் கூட சம்வாதம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆண்டவன் ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் முதன் முதலாகப் படைத்து அவர்கள் மூலம் மனித இனத்தைப் பெருகச் செய்தான் என கிட்டத்தட்ட எல்லா மதங்களும் மூவாயிரம் ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்த, மக்களை நம்ப வைத்துக் கொண்டிருந்த கோட்பாட்டை சார்லஸ் டார்வின் பரிணாம கோட்பாட்டின் மூலம் சுக்கு நூறாக உடைத்துவிட்டார். மனிதனும் மிருக இனத்தைச் சேர்ந்தவன் தான், அவனின் முன்னோர்கள் குரங்குகள்தான், பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து உதித்தவன்தான் மனிதன் என்பதை அரிய விஞ்ஞான ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டியவர். ஆகவே அவரை மத ஸ்தாபனம்நாத்திகர் எனப் பட்டம் சூட்டியது. அவர் மீது கடுமையான தூஷணைகள் வீசப்பட்டன. எதற்கும் அவர் அஞ்சவில்லை. ஓயாது ஆய்வுகளை நடத்திக் கொண்டே இருந்தார். அவருக்கு எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றாலும் மொத்தத்தில் பதினெட்டு நூல்களை எழுதித்தள்ளினார். அவர் கடைசியாக 1872 ஆம் ஆண்டு எழுதிய நூல்மனிதனும் மிருகங்களும் தம் உணர்ச்சி களை வெளியிடும் விதம் என்பதாகும். ஆனால் அவர் எழுதியஜீவராசிகளின் மூலம்’’ எனும் நூல் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்த நூல், மிகப் பிரபல்யமாகிவிட்ட நூல். அந்த நூல் ஹிப்ரு, ஸ்பானிஷ், போலிஷ், ஜப்பான், பொஹிமியன் போன்ற பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாயின. அந்த நூல் இங்கிலாந்தில் மட்டும் 5 ஆண்டு காலத்தில் பதினாயிரம் பிரதிகள் வரை விற்பனையாயிற்று என்றால் அதன் மகத்துவத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். 150 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வரலாறு இது.

அந்தப் புத்தகம் 1859ஆம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி வெளிவந்தது. அந்த நூலில் டார்வின் பரிணாம வளர்ச்சி இயற்கைத் தேர்வின் மூலம் நடைபெறுவதை பல ஆதாரங்கள் கொடுத்து விளக்குகிறார். எந்த ஒரு ஜீவராசியும் இயற்கைச் சூழலுக்கு ஏற்றாற்போல் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லையென்றால் அவை அழிந்து போகும், அப்படி அழிந்து விட்ட ஜீவராசி கோடானு கோடி! அவையெல்லாம் அப்படி அழியாமல் போயிருந்தால் இந்த பூமியில் அவைகளைக் கொண்டிருக்க இடமே இருந்திருக்காது! குளிர், பனி, மழை, கொடிய வெயில், நீர், நிலம் எங்கெங்கே எந்த ஜீவராசி எந்த புற சூழ்நிலையில் இருக்கிறதோ, அந்தச் சூழலை ஏற்று அவை வாழ தங்களைத் தயாரித்துக் கொள்ள பலம் தேவை, மாற்றிக் கொள்ள முயற்சி தேவை! இல்லாது போனால் அழிவுதான் மிச்சம்.

அதோடு ஜீவராசிகள் ஒன்றுக்கொன்று போராடி எவை வெற்றி பெறுகிறதோ அது நிலைக்கும், பலவீனமானவை அழியும். அதாவது இயற்கை தேர்வில் பால் உறவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கே இன விருத்தி செய்வதற்கான ஒரு தேர்வு முறை நடக்கிறது! தேவையான துணைகளைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் ஆண்களுக்கிடையே பெரும்பாலும் போட்டியும், போராட்டமும் நடக்கிறது. அதில் வெற்றி பெறும் ஆண் தன் துணையைபெண்ணை தேடிக் கொள்கிறது, தன்னைப் போன்ற வலுவான வாரிசை உருவாக்க முடிகிறது, தோல்வியுறும் ஆண் தன் இனத்தை விருத்தி செய்யாமல் பின் தங்கி விடுகிறது.

ஆக டார்வின் பரிணாம கோட்பாடு கீழ்வரும் மூன்று அம்சங்களைக் கொண்டது.

1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)

2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல்)

3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)

இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதைநவீன டார்வினியம் என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம், உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான்.

“வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது என்கிற இவரின் தத்துவத்தை சில அறிவு ஜீவிகள் அவர் காலத்திலேயே கிண்டல் செய்தார்கள்.

வர்க்க சமுதாயத்தில், திறமை உள்ளவன் வளமாக மூலதனத்துக்குச் சொந்தக் காரனாக வாழ்கிறான், வக்கற்றவன் வறுமையில் வீழ்கிறான்இதுவும் இயற்கை தேர்வுக்கு உட்பட்டது தானே என்று கேட்டார்கள்?. மனிதனின் செயற்கை ஏற்பட்டால் ஏற்றப்பட்ட இந்த ஏற்றத் தாழ்வை இப்படி வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் பாவப்பட்ட மக்களுக்காக எப்போதும் பரிதாபப்படும் குணம் கொண்டவர் டார்வின். அவரின் கப்பல் பயணத்தில் தென்அமெரிக்கா சென்ற போது, அக் காலக்கட்டத்தில் அங்கு நடைபெற்ற ஏழை மக்கள் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு மனம் நொந்து போனார், தன் மனக் கசப்பை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

அதேபோல் அவரின் இரண்டாவது புத்தகமானமனித பரம்பரை நூல் 1871ம் ஆண்டு வெளியானது. மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மிக விரிவாக எழுதுகிறார். நம் மூதாதையர் குரங்குகள் தான் என்று சொல்லுவதில் பெருமை அடைகிறார். கீழ் ஜீவராசியிலிருந்து மனிதன் எனும் உயர்ந்த ஜீவராசியை எட்டியதற்கு அடிப்படை பரிணாம வளர்ச்சியே என்கிறார். 25 ஆண்டுகளாக சதா நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டா லும் இதற்கான ஆய்வில் அவர் வெற்றி கண்டார்.

நாம் பார்க்கும் ஒவ்வொரு உயிரினமும் அந்த காலத்தில் ஏதோ ஒரு தோற்றத்திலிருந்து மாறி இப்போதுள்ள தோற்றத்தை அடைந்துள்ளன என்ற முடிவுக்கு வருகிறார். அதே போலத்தான் மனிதனும் கூட இன்றைய நிலையை அடைந்துள்ளான்.

உராங்குட்டன், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளுக்கு உள்ள நான்கு கைகளும், ரோமமயமாய் உள்ள ஒரு மிருக பாரம்பரியத்திலிருந்து, சீர் பெற்று, திருத்த முற்றுத் தோன்றியவனே மனிதன் எனத் தகுந்த ஆதாரங்களுடன் காட்டுகிறார்.

மனிதன் வலதுகால் அடியெடுத்து வைக்கும் போது அவனுடைய இடதுகை முன்னே செல்லுகிறது. வலது கை முன்னே வீசும் போது இடதுகால் அடி யெடுக்கிறது. குரங்கும் இதே ஸ்டைலில் தான் நடக்கிறது.

எல்லா ஜீவராசிகளும் உருவாவதற்கு முன்பாக நீரும், நிலமும் தழுவிக் கொள் ளும் கரைகளில் முதல் முதலாக உருவெடுத்த மூதாதையின் பெயர், அந்த உருவத்தின் பெயர்நீர்பாசிதான். ஜீவராசிக் கெல்லாம் மூலாதாரமாய் விளங்கியதும் அந்த நீர்பாசி தான். அது இன்றைய கொடி, செடி, மரங்களாகவும், மிருகமாகவும், மனித இனமாகவும் பரிணாமம் கொண்டது.

டார்வின் ஐந்தாண்டு காலம் அதாவது 1831ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி எச்.எம்.எஸ். பீகில் என்ற கப்பலில் பயணம் செய்து தென் அமெரிக்கா மற்றும் தென்கடல் பகுதிகளில் ஆராய்ச்சி செய்தார். உயிரியல், நிலஇயல் பற்றி ஆராய்ச்சி செய்தார். தாவரங்கள், பிராணிகள், பறவைகள், பாறைகள்என அவற்றைப் பற்றி பல விவரங்களைச் சேகரித்தது, அவரின் உச்சகட்ட பரிணாம தத்துவக் கோட்பாட்டுக்கு உதவி புரிந்தது.

அவரின் இந்த வினோதக் கண்டு பிடிப்பு பொருண்மைவாதிகளுக்கு, கடவுள் மறுப்பாளர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு தத்துவ ஆயுதமாகக் கிடைத்தது. ஆனால் டார்வின் நாஸ்திகர் அல்லர். ஆனால் ஆஸ்திகர்கள் அவரை அதிகமாக வெறுத்தார்கள். இது ஒரு வினோதம் தான். கிறிஸ்தவ மதத்தைத் துறந்து விட்டார். அவர் தன்னை அறியொணாமைக் கொள்கையாளர் என்றார். அப்படியானால் அவரின் மதக் கொள்கை தான் என்ன? அவர் மதகுருவாக ஆக மதக் கல்வி படிக்கச் சென்றவர்! ஆனால் மதக் கல்வி பிடிக்காது திரும்பி வந்து விட்டார். கடைசியாக எடின்பரோ பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டமும், கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயிரியல் பட்டமும் பெற்றார்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சனையில் அவர் ஈடுபட்டதே இல்லை. அப்படி ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்றார். மனிதன் பிறப்பது வாழ்வதற்காக, அது தேவை! அவரின் கண்டு பிடிப்பான பரிணாமத் தத்துவத்துக்கும், மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், ஏன் மதம் இதில் மூர்க்கமாகத் தலையிடுகிறது என்பதும் தான் அவரின் உரத்தக் கேள்வி.

கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறுவகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்.

மனித இன மூதாதையரின் முகவரியை உலகத்துக்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882 ஏப்ரல் 19ம் தேதி அடங்கிப் போனார்.

லண்டனில் விஞ்ஞானிகளின் கார்னர் என்று சொல்லப்படும் இடத்தில் உள்ள இடுகாட்டில் விஞ்ஞானிகள் புதைக்கப்படும் வெஸ்ட் மினிஸ்டர் அப்பீ எனும் இடத்தில் நியூட்டனின் கல்லறைக்கு சில அடிகள் தள்ளியும், வானஇயல் விஞ்ஞானி சர்ஜான் எர்ச்செட் கல்லறையின் அருகிலும் டார்வின் புதைக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலான செய்தியே. அதற்காக அவருடைய நெருங்கிய விஞ்ஞான நண்பர்கள் இதற்காகப் போராடித்தான் அந்த சலுகை பெற்றார்கள் என்ற தகவலும் உண்டு!

 

குறிச்சொற்கள்:

அன்புமணியின் ஊழல் – சோலை


இந்தியாவிற்கே தேவையான தடுப்பு ஊசி மருந்துக்கள் உற்பத்தி செய்த மூன்று நிறுவனங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி மூடினார்.

அந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்த மருந்துகளை கோடிக்கணக்கான ரூபாய்களுக்குத் தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்ய ஆரம்பித்தனர். இதனை அந்த நிறுவன ஊழியர்களும் எதிர்த்தனர். இடதுசாரி ஜனநாயக இயக்கங்களும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு ஏதோ காலிக்குட்டங்களின் சலசலப்பு என்றே அன்புமணி கருதினர்.

குன்னூர், சென்னைகிண்டி, இமாச்சலப் பிரதேசம்கஸொலி ஆகிய இடங்களில் இயங்கிய தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களைத் தான் மத்திய சுகாததாரத் துறை மூடியது. இவை மூன்றும் மக்களுக்குச் சொந்தமானஅரசுக்கு சொந்தமான போது துறை நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் மூடப்பட்டத்தைப் பற்றி ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

அந்த நிறுவனங்களின் ஊழியர்களும், பணியாளர்களும் அவர்களுக்காக அணி திரண்ட தொழிற்சங்க இயக்கங்களும் எழுப்பிய குரல் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிடுமோ என்ற கவலையும் பிறந்தது.

பொதுத்துறையின் மூன்று நிறுவனங்களையும் மூடியதுதனியார் கம்பெனிகளின் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மருந்துகள் வாங்குவதற்கான சதியே என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.கே. ராங்கராஜன் பிரதமரிடம் மனுக்கொடுத்தார். அந்த மனுவை பிரதமரை நேரடியாகச் சந்தித்தே கொடுத்தார். அதன் பின்னர் அசைவுகள் தெரிந்தன.

இப்போது அன்புமணிக்கு கேள்விப் பட்டியிலே பிரதமர் அலுவலகம் அனுப்பியிருக்கிறது. பட்டியலைத் தந்திபோல் பாவித்து தக்க பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

தடுப்புஊசி மருந்துகளைத் தனியாரிடம் வாங்குவதற்காக இதுவரை எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது?

அப்படி வாங்கப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டதா? அன்னிய நிறுவனங்ககள் தயார் செய்ததா? அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா?

மூடப்பட்ட மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் ISO 9002 தரச் சான்றிதழ் பெற்றவை. அப்படி இருக்கும் போது அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் அந்த நிறுவனங்களை ஏன் மூடினீர்கள்?

இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பு ஊசி மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் தர நிர்ணாயத்திற்கு உட்படாத நாடுகளிலிருந்தும் வாங்கப்பட்டிருக்கிறதா?

மூடப்பட்ட மூன்று அரசு நிறுவங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகள் தரக் குறைவானது என்றால் அதன் தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறதா? அத்தனை மத்திய சுகாதாரத் துறை செயல்படுத்தாமல் பகாசுரத் தனியார் நிறுவனங்களிடம் எப்படிக் கொள்முதல் செய்ய முன்வந்தீர்கள்? அதனால் ஏற்ப்பட்ட கூடுதல் செலவு எவ்வளவு?

படமெடுக்கும் இந்தக் கேள்விகெல்லாம் யாரும் எழுப்பிவிட்டதல்ல. மத்திய சுகாதார துரையிடம் பிரதமர் அலுவலகம் கேட்டிருக்கும் கேள்விகள்தான் இவை. தொடுக்கப்பட்ட கேள்விகளில் ஒரு சிலவற்றைத் தான் தொட்டுக் காட்டி இருக்கிறோம்.

நமது மூன்று தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களும் உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கும் தரத்தை அடைந்திட மத்திய சுகாதாரத் துறைக்கு வெறும் 50 கோடி ரூபாய் தான் செலவாகும். அதனை விடுத்து இன்னும் பலப்பல கோடிகள் அதிகச் செலவில் தனியாரிடம் மருந்துகள் வாங்குவது ஏன்? என்ற கேள்வி நியாயமாகவே எழுந்திருக்கிறது. எனவே, இதில் பெரிய சதி, ஊழல், மோசடி நடந்திருக்கிறது. என்று மார்க்ஸிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன் சுட்டிக் காட்டியிருப்பது பொருள் பொதிந்தாகும்.

இதிலிருந்து ஓர் உண்மை தெரிகிறது. தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி நிலையங்களை மூடியது மத்திய அமைச்சரவையின் முடிவல்ல. பிரதமர் அலுவலகத்திற்க்கே தெரியாமல் நடந்த காரியம். மூடுவது என்பது சுகாதாரத் துறை எடுத்த தன்னிச்சிசையான முடிவுதான். அந்த முடிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இப்போது அமைச்சருக்குத் தெரிந்திருக்கும். இதுவரை எத்தனை கோடி இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது இனி வெளிச்சத்திற்கு வரும்.

இலங்கைப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏற்றுக் கொண்ட குறைந்தபட்ச செயல்திட்டங்களில் ஒன்றாகும். அதனை ஏன் மையஅரசு செயல்படுத்த மறுக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்கிறார். நியாயமான கேள்வி. பாராட்ட வேண்டியவாதம்.

ஆனால், அதேபோல் தான் பொதுத்துறை நிறுவனங்களை எக்காரணம் கொண்டும் மூடக்கூடாது என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்சசெயல் திட்டம் தான். அதனை மறந்து மத்திய அமைச்சரவைக்கும் தெரியாமல் பிரதமர் அலுவலகத்திற்கும் தெரியாமல் எப்படி மூன்று பொதுத்துறை நிறுவனங்களை மூடினார்கள்?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இன்னொரு குறைந்தபட்ச செயல் திட்டம் என்ன கூறுகிறது? மக்களுக்கு மலிவான விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்க வேண்டும். அதற்கான உததரவதத்தை அரசு செயல்படுத்தும் என்று கூறுகிறது ஏதோ பம்பர் பரிசு மாதிரி அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அவருக்கு குறைந்தப்பட்ச செயல் திட்டத்தைத் தெரியுமா? அதனை எப்படித் தயாரித்தார்கள் என்பது தெரியுமா?

மக்களுக்கு மலிவான விலையில் உயிர் காக்கும் மருந்துகள் தருவதற்கு உற்பத்திக்கு என்ன செய்ய வேண்டும்? திட்டம் தருக என்று அன்பு மணியை பிரதமர் அலுவலகம் கேட்டிருக்கிறது. அந்த மருந்துகளும் பொதுத் துறை நிறுவனங்கள் தான் தயாரிக்க வேண்டும் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

மூன்று பொதுத் துறை நிறுவனங்குகளை மூடிய வேகத்தில் செங்கல்பட்டில் தனியார் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து அதே மருந்துகளைத் தயாரிக்க அன்புமணி தயாரானார். அதற்கான அறிவிப்பும் வெளியனாது.

தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிக்கும் மூன்று நிறுவங்ககளும் மூடப்படவில்லை என்று நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சூப்பராயனுக்கு எழுதிய கடிதத்தில் அன்புமணி சுட்டிக் காட்டியிருக்கிறார். மகிழ்ச்சி.

ஆனால், இன்னும் உற்பத்தி தொடங்கப்படவில்லையே என்ன காரணம்? அந்த நிறுவன ஊழியர்களுக்கு இன்னும் முழுச் சம்பளத்தோடு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறதே என்ன காரணம்?

அதே சமயத்தில் இந்திய மருத்துவத் துறையில் அன்புமணி செய்துள்ள சாதனைகளைக் குறைத்து மதிப்பிடவேண்டாம். தமிழக அரசு துவக்கிய மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் 100 மாணவர் விதம் சேர்க்க அனுமதித்தனர். அதே சமயத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 150 மாணவர் விதம் சேர்க்க அனுமதித்தனர். இந்த பாரபட்சம் ஏன் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள் கட்டமைப்பு ரொம்பத் தாராளம். ஆனால், அந்த வசதி அரசினர் கல்லூரிகளில் இல்லை என்று ஜி.கே. மணி பெயரில் ஓர் விளக்கம் வந்தது. கேழ்வரகில் நெய் வழிகிற தென்றால் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

சென்னை நகரச் சுற்றி ஆறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. அனைத்தும் தனியருக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் தான். இப்படி இந்தியா முழுமைக்கும் தனியருக்கு எத்தனை மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றார்? பட்டியல் வெளியிட்டால் சேவையின் சிறப்பு தெரியும்.

ஆதாரம்: ரிப்போட்டார் 12.2.2009 பக்கம் 34,35. 

 

குறிச்சொற்கள்:

கியூப டாக்டர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?


2004ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் போல்ட்டன் கூறினார்கியூபா குறிப்பிட்ட அளவிற்கு உயிரி ஆயுதத்தின் விளைவுகளை ஏற்படுத்தி வருவதைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்.

ஆகஸ்ட் 2006ல் அமெரிக்காகியூப மருத்துவ நிபுணர்கள் தற்காலிக விடுவிப்பு திட்டம் என்ற ஒன்றை அறிவித்தது. அதன்படி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் புதிய விதிகள் மாற்றப்பட்டது. வெளிநாடு வாழ் கியூப டாக்டர்கள், முடநீக்கியல் நிபுணர்கள், சோதனை கூட ஊழியர்கள், செவிலியர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் அமெரிக்காவிற்கு வர நினைத்தால் விசேஷமான முறையில் கவனிக்கப்படுவார்கள் என்று மாற்றியது. (வெளிநாடுவாழ் 40,000 கியூப மருத்துவப் பணியாளர்களில் 200 பேர் கூட அமெரிக்காவின் இந்த ஆசை வார்த்தைக்கு பலியாகவில்லை)

2000ம் வருடம் கவுதமாலாவில் கம்யூனிஸ்ட் எதிர்ப்புப்படை சிக்லோ ஓஓஐ என்கிற தினசரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. ‘கவுதமாலாவில் பணிபுரியும் 459 கியூப டாக்டர்களும் உடனடியாக வெளியேற வேண்டும். அவர்கள் மிகப் புனிதமான மருத்துவத்தொழிலை தங்கள் நடவடிக்கையின் மூலமாக கம்யூனிசத்தை பரப்ப பயன்படுத்துகிறார்கள்.

2004ல் ஹெய்ட்டியில் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அரிஸ்டைடு கவிழ்க்கப்பட்டு புஷ் நிர்வாகத்தின் கைத்தடி, ஆட்சிப் பொறுப்பேற்றார். அமெரிக்கா ஹெய்ட்டியில் பணிபுரிந்த 525 கியூப டாக்டர்களை வெளியேற்ற நிர்பந்தித்தது. ஆயினும் அந்த அரசு அதற்கு இணங்கவில்லை.

2005ல் ஹோண்டுராசில் அதன் அதிபர் மகுரோ, அமெரிக்க தூதரகம் மற்றும் ஹோண்டுராஸ் மெடிக்கல் அசோசியேசனின் நிர்பந்தத்திற்கு பணிந்து கியூப டாக்டர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பிற்கெதிராக அலைஅலையாக நாடு முழுவதும் தொழிற்சங்கங்களும், சமூக நல அமைப்புகளும் நடத்திய போராட்டங்களால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த கியூப டாக்டர்களிடம். லத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள் ஆட்சியாளர்களை மீறி இவர்களின்பால் காதல் கொண்டிருப்பதற்கும், அமெரிக்கா உயிரி ஆயுதம் என்று வெறுப்பை உமிழவும்; வாய்ப்பு கிடைத்தால் பிறந்த நாட்டைவிட்டு வர ஆசை காட்ட தனது சட்டத்தை மாற்றுமளவிற்கு இவர்களிடம் என்ன இருக்கிறது. அது வெறும் மருத்துவத்திறன் சார்ந்தது மட்டுமல்ல மக்களை நேசிக்கும் குணம் சார்ந்த மகத்துவமும் இணைந்தது. கியூப அரசு, புரட்சி அரசு இதை சாதித்து காட்டியிருக்கிறது.

செல்வபுரி, வளர்ச்சியடைந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் 417 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 330 பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். இந்த ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2007ம் ஆண்டில், கியூபாவில் 155 பேருக்கு அதாவது 50 வீட்டிற்கு ஒரு டாக்டர் இருக்கிறார். அதனால்தான் மிக வளர்ச்சியடைந்த நாடுகளுக்கிணையாகவும் அதை விஞ்சியும் பிறப்பின்போது குழந்தை இறப்பு விகிதம் பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் குறைவாகவும், ஆயுட்காலம் அதிகமாகவும் கியூபாவில் உள்ளது.

இதை எப்படி சாதித்தார்கள். 1984-85ல் 120 முதல் 150 குடும்பங்களுக்கு ஒரு மருத்துவக்குழு உருவாக்கப்பட்டது. இதில் ஒரு டாக்டரும், ஒரு செவிலியரும் இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு மருத்துவமனை அமைத்துக்கொடுக்கப்பட்டது. இவர்கள் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மருத்துவம் செய்வதோடு நின்று விடவில்லை. மருத்துவமனைக்கு வராதோரை அவர்கள் வீடு தேடிச்சென்று பரிசோதனை நடத்தி ஆலோசனைகள், காப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையளிப்பார்கள்.

மக்களை நேசிக்கும் ஒரு அரசியல் அமைப்பு முறையில் இது சாத்தியமே என்பதை நிரூபித்திருக்கிறது சின்னஞ் சிறிய கியூபா. 2004ல் இப்படி 99 சதம் மக்கள் டாக்டரைச் சந்திப்பதையும், டாக்டர்கள் மக்களைச் சந்திப்பதையும் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

இவர்கள் தன்நாட்டு மக்களுக்கு மட்டும் சேவை செய்பவர்கள் அல்ல. 1963ல் பிரான்ஸின் காலனியாக இருந்த அல்ஜீரியா விடுதலைபெற்ற போது அங்கு மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஓடோடி உதவி செய்தது கியூபா. நிறவெறி தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு படைகளால் தாக்கப்பட்ட போது அங்கோலாவிற்கு உதவி செய்தது கியூபா.

ஹெய்ட்டியை ஜார்ஜ் புயல் தாக்கிய போதும், கவுதமாலா மற்றும் ஹோண்டுராஸை மிட்ச் புயல் தாக்கியபோதும் உள்ளடக்கிய பகுதிகளில் உயிர் காக்கச் சென்றவர்கள் கியூப டாக்டர்கள். நவம்பர் 2008 கணக்குப்படி 75 நாடுகளில் 38,000 கியூப மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் வேலை தேடி பிழைப்பு தேடி கூடுதல் சம்பளம் தேடி சொந்த நாட்டைவிட்டு ஓடியவர்கள் அல்லர். துயருறும் தன் சகோதரனுக்கு மருத்துவ உதவியளிக்கச் சென்றவர்கள். அதனால்தான் இவர்கள் வெனிசுலாவிற்குச் சென்ற போது அங்கிருந்த டாக்டர்கள் இவர்களுக்கெதிராய் போராட்டம் நடத்தினர். வெனிசுலா டாக்டர்களின் குற்றச்சாட்டு இது தான்டாக்டர் தொழில் புனிதமானது. கடவுளுக்குச் சமமானது. பக்தர்களைத் தேடி கடவுள் ஓடுவது கடவுளைக் கேவலப்படுத்துவது. மருத்துவத்தின் மேன்மை யாருக்கு புனிதமென்று படுகிறதோ யாரால் அடையமுடியுதோ அவர்கள் அடைந்து கொள்ளட்டும். ஆனால், அங்குள்ள மக்கள் வெனிசுலா டாக்டர்களுக்கெதிராய் போராடி முறியடித்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 29,000 டாக்டர்களை கியூபா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது தவிர 24,000 வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி வழங்கி வருகிறது. இவர்களில் 100 பேர் அமெரிக்க மாணவர்கள். இது தவிர வெனிசுலாவின் உதவியுடன் இன்னுமொரு 17,000 பேருக்கு மருத்துவக்கல்வியளித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தமாக கியூபா 70,000 டாக்டர்களை உருவாக்குகிறது. அமெரிக்கா முழுவதிலும் மருத்துவ மாணவர்கள் ஆண்டிற்கு 64,000 முதல் 68,000 வரை தான். கியூபாவில் மருத்துவக்கல்வி அயல்நாட்டவருக்கு உட்பட இலவசம். அமெரிக்காவில் ஒரு மருத்துவ மாணவன் படித்துவிட்டு வெளியேறும்போது சராசரியாக 1,40,000 டாலர் கடனுடன் வருகிறான். அதாவது இந்திய ரூபாயில் 70 லட்சம். மருத்துவம் தொழிலா? சேவையா? என்பதை கற்பிக்கும் முறையும் இடமும் செலவும் கற்றுக்கொடுத்து அனுப்புகின்றன. பணம் கொழிக்கும் மருத்துவத்தொழிலை இலவசமாக கற்பிப்பதா என்ற கேள்வி எழும். தொழில் கற்றுக்கொடுப்பதோடு மட்டுமல்ல. மனிதனை நேசிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

சேகுவேரா சொன்னார்கேலி செய்யப்படும் வாய்ப்பிருக்கிறது என்ற போதும் நான் சொல்கிறேன் உண்மையான புரட்சிவாதி மனித இனத்தின் மீதான காதல் உணர்வாலேயே வழி நடத்தப்படுகிறான்.

2000ம் ஆண்டு மே தின விழாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோ பேசுகையில் குறிப்பிட்டார், “நம் நாட்டின் புரட்சி வென்றதற்கும், நீடிப்பதற்கும் நமது புரட்சியின் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான திறனை நாம் கொண்டிருக்கிறோம். அதற்கான காரணம்கருத்துப் போராட்டத்தை நடத்தவும் அதில் வெற்றி பெறவும் நமக்கிருக்கும் ஆர்வம் ஆம்! கியூபா மருத்துவத்துறையிலும் அதைத் தான் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

கியூப கலாச்சாரத்துறை அமைச்சர் ஏபெல் பிரிட்டோ 2004ல்உலகமயம் பற்றி விளக்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. “நாங்களும் உலகமயத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். உலகமயமாக்கப்பட வேண்டியது குண்டுகளும் வெறுப்புகளுமல்ல; அமைதி, ஒத்துழைப்பு, சுகாதாரம் அனைவருக்குமான கல்வி போன்றவையே உலகமயமாக்கப்படவேண்டும்.”

1960 ஆகஸ்ட் 19ல் சேகுவேரா புரட்சிகர மருத்துவம் பற்றிபேசும்போதுசில மாதங்களுக்கு முன்பு புதிதாக பட்டம் பெற்ற டாக்டர்களை கிராமப்புற சேவைகளுக்கு அனுப்பினோம். அவர்கள் கூடுதல் பணம் கேட்டார்கள். அதைக் கொடுத்த பிறகுதான் கிராமப்புற சேவைக்கு சென்றார்கள். இவர்கள் வசதியான வீட்டுப்பிள்ளைகள். ஏழை மக்களுக்கும், விவசாயிகளின் பிள்ளைகளுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் தங்கள் மக்களுக்குச் சேவை செய்ய உற்சாகத்துடன் ஓடுவார்கள். அதில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் ஒரு புதிய ஆயுதத்தை பெற்றவர்களாவோம். அது சகோதரத்துவம் என்னும் ஆயுதம் என்றார்.

கியூபா அந்த ஆயுதத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவில் அது வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்கிறது.

அந்த ஆயுதத்தின் விளைவுஉயிரி ஆயுதம் பயன்படுத்துவதைப் போன்றது அதைத்தடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் போல்ட்டன் கூறுவதும் அதனால் தான்; ஹோண்டுராஸ், ஹெய்ட்டி, கவுதமாலா, வெனிசுலா இன்னும் பல நாட்டு மக்கள் அந்த ஆயுதத்தை நேசிப்பதும் அதனால்தான்.

தோழர் காஸ்ட்ரோ சொன்னது போல் புரட்சி என்பதுதான் மனிதனைப் போல் நடத்தப்படுவதும், மற்றவர்களை மனிதனைப்போல் நடத்துவதும் புரட்சி என்றார். இதை ஏற்போருக்கு இது காக்கும் ஆயுதம், எதிர்ப்போருக்குஉயிரி ஆயுதம். இவ்வாயுதம் உலகம் முழுவதும் பிரயோகிக்கப்படட்டும்.

(இக்கட்டுரை சகோதரத்துவம் என்னும் இறுதி ஆயுதம் என்கிற டீவ் ப்ரோவெர், ஜனவரி 2009 மன்த்லி ரிவ்யூ பத்திரிகையில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.)

 

குறிச்சொற்கள்: