பெட்ரோலின் விலையை மீண்டும் உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமைகளைத் திணித்திருப்பதை நியாயப்படுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார். ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அதே சமயத்தில் கேன்ஸ் நகரிலிருந்துதான் இவ்வாறு அவர்
பேசியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ‘‘பல பண்டங்களின்’’ விலைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் நீக்க வேண்டியதன் தேவை இருப்பதாகவும் அப்போது அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்பட இருக்கின்றன என்பதை
இதன்மூலம் அவர் மிகவும் அழுத்தமாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆயினும் எதார்த்த நிலைமை என்ன? 2010-11ஆம் ஆண்டு பொருளாதார சர்வே என்ன கூறியிருக்கிறது? தனியார் இறுதி நுகர்வு செலவினத்தின் வளர்ச்சி விகிதம் 2005-06ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடாக வீழ்ச்சி
அடைந்திருக்கிறது. மக்கள் எங்கே வளமாக வாழ்கிறார்கள், பிரதமர் அவர்களே?
பிரதமர் நாடு திரும்பிய பின்னர், தன் னுடைய கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரசின் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான பாசாங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திரிணாமுல் காங்கிரசின் மிரட்டலுக்கு
அடிபணியாமல், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலைகளை மீண்டும் குறைக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்ல, இவ்வாறு பெட்ரோல் விலையை உயர்த்துவதற்காக நடை பெற்ற அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் பங்கேற்றதையும் அவர்களின் ஒப்புதலுடன்தான் இவ்வாறு மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டன என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார்.
எப்படி இருந்தபோதிலும், மக்களின் மீது சுமைகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருப்பதை ஏற்க முடியாது. பெட்ரோல் பணக்காரர்களால்தான் பயன்படுத்தப்படுகிறது என்ப தெல்லாம் பழங்கதை. இப்போது கீழ்நிலை மத்தியதர வர்க்கத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலை வாங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். உண்மையில், பெட்ரோலை வாங்குவதில் அதிகமானவர்கள் இவர்கள்தான். மேலும், பெட்ரோலின் விலையை உயர்த்துவதன் மூலம் போக்குவரத்து சாதனங்களின் மூலம் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து, பண வீக்கத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திடும்.
உண்மை என்ன தெரியுமா? இவ்வாறு விலைகள் உயர்த்தப்படுவதன் மூலம் அரசின் கஜானா அதிக அளவில் பயனடைகிறது என்பதுதான். ஒவ்வொரு விலை உயர்வின்போதும் கிடைத்திடும் தொகையில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக அரசாங்கத்திற்கு வரிகளாகவும் தீர்வைகளாகவும் சென்றுவிடுகின்றன. இப்போது 2011-12இன் விலைஉயர்வுடன், மத்திய அரசாங்கம் கலால்
தீர்வையாக மட்டும் சுமார் 82 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-11ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்திற்கு பெட்ரோலியத் துறையிலிருந்து, அனைத்து வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாகக் கிடைத்த மொத்த வருவாய்
என்பது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 69 ரூபாயாகும். இதில் சுமார் 30 ரூபாய் வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாயாகச் சென்று விடுகின்றன. இவ்வாறு மக்களின் வயிற்றில் அடித்து அடைந்திடும் வருவாயில் பெரும் பகுதி அரசாங்கத்தைத் தாங்கி நிற்கிறது என்பது தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மக்கள்தான் அரசாங்கத்திற்கு மானியம்
அளித்து வருகிறார்களேயொழிய, அரசாங்கம் மக்களுக்கு மானியம் அளித்திடவில்லை.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும்போதெல்லாம் அவற்றை நியாயப் படுத்தி அரசாங்கத்தின் தரப்பில் இரு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, எண்ணெய் நிறுவனங்கள் ‘‘திரும்பப் பெறுதல்’’ என்ற பெயரில் சர்வதேச விலைகளுடன் ஒப்பிட்டு, ‘‘இழப்புகள்’’ ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு 2010-12இல் மட்டும் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. இது 2010-11ஆம் ஆண்டில் 78 ஆயிரம் கோடிகளாக இருந்தது. இவ்வாறு ‘‘திரும்பப் பெறுதல்’’ என்றால் என்ன? முந்தைய காலங்களில் நம் நாட்டில் இயங்கி வந்த அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர், அவை இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை சர்வதேச விலைகளின் அடிப்படையிலேயே விற்று வந்தன. இது 1976இல் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக நிர்வாக விலை நிர்ணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் உண்மையான விலையும் அதனைச் சுத்திகரிப்பதற்கு ஆகும் செலவும் மதிப்பிடப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நியாயமான லாபமும் சேர்க்கப்பட்டு, அவ்வாறுதான் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
எடுத்துக்காட்டாக, சர்வதேச சந்தையிலிருந்து இந்தியாவால் இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு பேரல் இன்றைய நிலையில் 110 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,280 ரூபாய்) ஆகும். ஒவ்வொரு பேரலிலும் சுமார் 160 லிட்டர் எண்ணெய் இருக்கும். இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட லிட்டருக்கு 32 ரூபாய் என்று வருகிறது. சுத்திகரிப்பு செய்யப்படும் செலவினத்தையும், நியாயமான லாப வரம்பும் சேர்த்து பெட்ரோலின் விலையை நிர்ணயிப்போமானால் அது கிட்டத்தட்ட 40-41 ரூபாய் அளவிற்குத் தான் வரும். ஆனால், அதற்குப்பதிலாக இப் போது நாம் தில்லியில் சுமார் 70 ரூபாய் என்ற அளவிலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்னமும் அதிக விலை கொடுத்தும் பெட்ரோலை வாங்கவேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.
நவீன தாராளமயச் சீர்திருத்தங்களின் காரணமாக புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப் பட்டு, முன்பு இருந்ததுபோல சர்வதேச விலைகளுக்கு ஈடாக விலைகள் நிர்ணயம் செய்யும் முறையை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பொருள், பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு
விலைகள் சர்வதேச விலைகளால் தீர்மானிக்கப்படும். இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவினங்கள் பற்றி அது பொருட்படுத்துவதில்லை. திரும்பப் பெறுதலின் கீழ் என்பது இறக்குமதி சரிசமநிலை விலைக்கும், பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். இவ்வாறு, சர்வதேச விலையுடன் நம் நாட்டின் விலையை ஒப்பிட்டு, ஒரு கற்பனையான இழப்பு தீர்மானிக்கப்படுகிறதே தவிர, உள்நாட்டில் அதனை உற்பத்திச் செய்வதற்கு ஆகும் செலவினத்தை வைத்து அல்ல. இந்தக் கற்பனையான இழப்புகளைத்தான் நவீன தாராளமய சீர்திருத்தவாதிகள் ‘‘எண் ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டதாக’’ கூப்பாடு போடுகிறார்கள். அவற்றை இங்குள்ள கார்ப்பரேட் ஊடகங்களும் தூக்கிப்பிடிக்கின்றன.
எதார்த்தத்தில் நம் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் நட்டத்தில் இயங்கிடவில்லை. 2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இதுவல்லாமல், இந்தியன் ஆயில் கம்பெனி சேமிப்பு வருவாய் உபரித் தொகை 49 ஆயிரத்து 472 கோடி ரூபாயை வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் – டிசம்பரில், மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனும், பாரத் பெட் ரோலியம் கார்பரேஷனும் முறையே 544 கோடி ரூபாயும், 834 கோடி ரூபாயும் இலாபம் ஈட்டியிருக்கின்றன. மக்கள் மீது பாரத்தை ஏற்றுவதற்கு கற்பனைக் கதைகளைக் கட்டிவிடாதீர்கள், பிரதமர் அவர்களே.
பிரதமர் அவர்களால் கட்டவிழ்த்து விடப் பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படக்கூடிய இரண்டாவது வாதம்,
நிதிப்பற்றாக்குறை என்பதாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காட்டின் பட்ஜெட் குறியீட்டு மதிப்பான 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை எய்திட வேண்டுமானால் அரசாங்கம் கடன் வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் கடன் வாங்குவது என்பதை இயற்கையாகவே அது சாமானியர்களின் தலைகளில் விலைகளை உயர்த்துவதன் மூலம் தள்ளி விடுகிறது. கேன்ஸ் நகரில் பேசுகையில், இந்த குறியீட்டை ‘‘மிகவும் ஆழமான முறையில்’’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். ‘‘சில மானியங்களை’’ வெட்டுவதன் மூலம் செலவினக் கட்டுப்பாட்டையும் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பதும் மேற்கொள்ளப்படலாம் என்றும் மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்போது மற்றொரு எதார்த்த நிலையையும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறையில் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் 2008-09இல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 099 கோடி ரூபாயாகும். இது 2009-10இல் 5 லட்சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2010-11ஆம் ஆண் டில் இது 5 லட்சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக
உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 04 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகவும், இருந்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாயாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்ல் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது.
நிதிப் பற்றாக்குறை என்று கூறப்படுகிற 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பிரதமர்
அவர்களே. நியாயமாக வர வேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது. மாறாக வேலைவாய்ப்புகளும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரிவடைந்திருக்கும்.
கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் இவர்கள் அளித்திடும் சலுகைகள் உண்மையிலேயே முதலீட்டை அதிகரித்திடுமா? பொருளாதார அடிப்படைகளின் ஆரோக்கியம் என்பது முக்கியமாக மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தையே சார்ந்திருக்கிறது. பொருளாதார சர்வேயின்படி இது, 2005-06இல் 16.2 விழுக்காடாக இருந் தது, 2010-11இல் 8.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த முதலீட்டு வளர்ச்சி விகிதம்என்பதும் 2005-06இல் 17 விழுக்காடாக இருந்தது, 2008-09இல் -3.9 விழுக்காடாகக்
குறைந்து, 2009-10இல் 12.2 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், விவசாயத்தில் முதலீட்டின் வளர்ச்சி விகிதம் 13.9 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும்.
சர்வதேசநிதி மூலதனத்தை குஷிப்படுத்திடுவதற்காக, நிதித் தாராளமயக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக பட்ஜெட்டில் ஏழு புதிய சட்டமுன் வடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கத்தை இந்நடவடிக்கைகளைத் தொடராத வகையில் இடதுசாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால்தான், தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தத்தின் பேரழிவு உண்டாக்கக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம் நாடு காப்பாற்றப்பட்டது. ஆனால், தற்போது கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி மூல தனத்தை குஷிப்படுத்தும் வகையில் பிரதமர் உரை நிகழ்த்தியிருப்பதன் மூலம், மிகவும் ஆபத்தான சர்வதேச ஊக அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் இந்தியாவை பிரதமர் இட்டுச் சென்றிருக்கிறார். மேலும் தற்போதைய நாட்டின் நிதிப் பற்றாக்குறை விரிவடைவதன் மூலம், பெரிய அளவில் ஊக நிதி வருவதென்பதும் நல்ல அறிகுறியல்ல.
நாட்டு மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும், நம் உள்நாட்டுச் சந்தையை விரி வாக்கிடக்கூடிய வகையில் நம் வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங்களை நாமும் இந்தியாவில் உக்கிரப்படுத்திட வேண்டும்.