RSS

உண்மை-பணக்காரர்களுக்கு 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் வரி சலுகை


பெட்ரோலின் விலையை மீண்டும் உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமைகளைத் திணித்திருப்பதை நியாயப்படுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார். ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அதே சமயத்தில் கேன்ஸ் நகரிலிருந்துதான் இவ்வாறு அவர்
பேசியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ‘‘பல பண்டங்களின்’’ விலைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் நீக்க வேண்டியதன் தேவை இருப்பதாகவும் அப்போது அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்பட இருக்கின்றன என்பதை
இதன்மூலம் அவர் மிகவும் அழுத்தமாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆயினும் எதார்த்த நிலைமை என்ன? 2010-11ஆம் ஆண்டு பொருளாதார சர்வே என்ன கூறியிருக்கிறது? தனியார் இறுதி நுகர்வு செலவினத்தின் வளர்ச்சி விகிதம் 2005-06ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடாக வீழ்ச்சி
அடைந்திருக்கிறது. மக்கள் எங்கே வளமாக வாழ்கிறார்கள், பிரதமர் அவர்களே?

பிரதமர் நாடு திரும்பிய பின்னர், தன் னுடைய கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரசின் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான பாசாங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திரிணாமுல் காங்கிரசின் மிரட்டலுக்கு
அடிபணியாமல், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலைகளை மீண்டும் குறைக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்ல, இவ்வாறு பெட்ரோல் விலையை உயர்த்துவதற்காக நடை பெற்ற அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு  கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் பங்கேற்றதையும் அவர்களின் ஒப்புதலுடன்தான் இவ்வாறு மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டன என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார்.

எப்படி இருந்தபோதிலும், மக்களின் மீது சுமைகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருப்பதை ஏற்க முடியாது. பெட்ரோல் பணக்காரர்களால்தான் பயன்படுத்தப்படுகிறது என்ப தெல்லாம் பழங்கதை. இப்போது கீழ்நிலை மத்தியதர வர்க்கத்தில்  பெரும்பாலானவர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலை வாங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். உண்மையில், பெட்ரோலை வாங்குவதில் அதிகமானவர்கள் இவர்கள்தான். மேலும், பெட்ரோலின் விலையை உயர்த்துவதன் மூலம் போக்குவரத்து சாதனங்களின் மூலம் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து, பண வீக்கத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திடும்.

உண்மை என்ன தெரியுமா? இவ்வாறு விலைகள் உயர்த்தப்படுவதன் மூலம் அரசின் கஜானா அதிக அளவில் பயனடைகிறது என்பதுதான். ஒவ்வொரு விலை உயர்வின்போதும் கிடைத்திடும் தொகையில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக அரசாங்கத்திற்கு வரிகளாகவும் தீர்வைகளாகவும் சென்றுவிடுகின்றன. இப்போது 2011-12இன் விலைஉயர்வுடன், மத்திய அரசாங்கம் கலால்
தீர்வையாக மட்டும் சுமார் 82 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-11ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்திற்கு பெட்ரோலியத் துறையிலிருந்து, அனைத்து வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாகக் கிடைத்த மொத்த வருவாய்
என்பது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 69 ரூபாயாகும். இதில் சுமார் 30 ரூபாய் வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாயாகச் சென்று விடுகின்றன. இவ்வாறு மக்களின் வயிற்றில் அடித்து அடைந்திடும் வருவாயில் பெரும் பகுதி அரசாங்கத்தைத் தாங்கி நிற்கிறது என்பது தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மக்கள்தான் அரசாங்கத்திற்கு மானியம்
அளித்து வருகிறார்களேயொழிய, அரசாங்கம் மக்களுக்கு மானியம் அளித்திடவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும்போதெல்லாம் அவற்றை நியாயப் படுத்தி அரசாங்கத்தின் தரப்பில் இரு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, எண்ணெய் நிறுவனங்கள் ‘‘திரும்பப் பெறுதல்’’ என்ற பெயரில் சர்வதேச விலைகளுடன் ஒப்பிட்டு, ‘‘இழப்புகள்’’ ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு 2010-12இல் மட்டும் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. இது 2010-11ஆம் ஆண்டில் 78 ஆயிரம் கோடிகளாக இருந்தது. இவ்வாறு ‘‘திரும்பப் பெறுதல்’’ என்றால் என்ன? முந்தைய காலங்களில் நம் நாட்டில் இயங்கி வந்த அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர், அவை இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை சர்வதேச விலைகளின் அடிப்படையிலேயே விற்று வந்தன. இது 1976இல் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக நிர்வாக விலை நிர்ணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் உண்மையான விலையும்  அதனைச் சுத்திகரிப்பதற்கு ஆகும் செலவும் மதிப்பிடப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நியாயமான லாபமும் சேர்க்கப்பட்டு, அவ்வாறுதான் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

எடுத்துக்காட்டாக, சர்வதேச சந்தையிலிருந்து இந்தியாவால் இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு பேரல் இன்றைய நிலையில் 110 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,280 ரூபாய்) ஆகும். ஒவ்வொரு பேரலிலும் சுமார் 160 லிட்டர் எண்ணெய் இருக்கும். இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட லிட்டருக்கு 32 ரூபாய் என்று வருகிறது. சுத்திகரிப்பு செய்யப்படும் செலவினத்தையும், நியாயமான லாப வரம்பும் சேர்த்து பெட்ரோலின் விலையை நிர்ணயிப்போமானால் அது கிட்டத்தட்ட 40-41 ரூபாய் அளவிற்குத் தான் வரும். ஆனால், அதற்குப்பதிலாக இப் போது நாம் தில்லியில் சுமார் 70 ரூபாய் என்ற அளவிலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்னமும் அதிக விலை கொடுத்தும் பெட்ரோலை வாங்கவேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நவீன தாராளமயச் சீர்திருத்தங்களின் காரணமாக புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப் பட்டு, முன்பு இருந்ததுபோல சர்வதேச விலைகளுக்கு ஈடாக விலைகள் நிர்ணயம் செய்யும் முறையை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பொருள், பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு
விலைகள் சர்வதேச விலைகளால் தீர்மானிக்கப்படும். இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவினங்கள் பற்றி அது பொருட்படுத்துவதில்லை. திரும்பப் பெறுதலின் கீழ் என்பது இறக்குமதி சரிசமநிலை விலைக்கும், பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். இவ்வாறு, சர்வதேச விலையுடன் நம் நாட்டின் விலையை ஒப்பிட்டு, ஒரு கற்பனையான இழப்பு தீர்மானிக்கப்படுகிறதே தவிர, உள்நாட்டில் அதனை உற்பத்திச் செய்வதற்கு ஆகும் செலவினத்தை வைத்து அல்ல. இந்தக் கற்பனையான இழப்புகளைத்தான் நவீன தாராளமய சீர்திருத்தவாதிகள் ‘‘எண் ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டதாக’’ கூப்பாடு போடுகிறார்கள். அவற்றை இங்குள்ள கார்ப்பரேட் ஊடகங்களும் தூக்கிப்பிடிக்கின்றன.

எதார்த்தத்தில் நம் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் நட்டத்தில் இயங்கிடவில்லை. 2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி  இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இதுவல்லாமல், இந்தியன் ஆயில் கம்பெனி சேமிப்பு வருவாய் உபரித் தொகை  49 ஆயிரத்து 472 கோடி ரூபாயை வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் – டிசம்பரில், மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனும், பாரத் பெட் ரோலியம் கார்பரேஷனும் முறையே 544 கோடி ரூபாயும், 834 கோடி ரூபாயும் இலாபம் ஈட்டியிருக்கின்றன. மக்கள் மீது பாரத்தை ஏற்றுவதற்கு கற்பனைக் கதைகளைக் கட்டிவிடாதீர்கள், பிரதமர் அவர்களே.

பிரதமர் அவர்களால் கட்டவிழ்த்து விடப் பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படக்கூடிய இரண்டாவது வாதம்,
நிதிப்பற்றாக்குறை என்பதாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காட்டின் பட்ஜெட் குறியீட்டு மதிப்பான 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை எய்திட வேண்டுமானால் அரசாங்கம் கடன் வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் கடன் வாங்குவது என்பதை இயற்கையாகவே அது சாமானியர்களின் தலைகளில் விலைகளை உயர்த்துவதன் மூலம் தள்ளி விடுகிறது. கேன்ஸ் நகரில் பேசுகையில், இந்த குறியீட்டை ‘‘மிகவும் ஆழமான முறையில்’’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். ‘‘சில மானியங்களை’’ வெட்டுவதன் மூலம் செலவினக் கட்டுப்பாட்டையும் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பதும் மேற்கொள்ளப்படலாம் என்றும் மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்போது மற்றொரு எதார்த்த நிலையையும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறையில்  பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் 2008-09இல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 099 கோடி ரூபாயாகும். இது 2009-10இல் 5 லட்சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2010-11ஆம் ஆண் டில் இது 5 லட்சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக
உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 04 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகவும், இருந்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாயாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்ல் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை  என்று கூறப்படுகிற 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பிரதமர்
அவர்களே. நியாயமாக வர வேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக  நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது. மாறாக வேலைவாய்ப்புகளும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரிவடைந்திருக்கும்.

கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் இவர்கள் அளித்திடும் சலுகைகள் உண்மையிலேயே முதலீட்டை அதிகரித்திடுமா? பொருளாதார அடிப்படைகளின் ஆரோக்கியம் என்பது முக்கியமாக மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தையே சார்ந்திருக்கிறது. பொருளாதார சர்வேயின்படி இது, 2005-06இல் 16.2 விழுக்காடாக இருந் தது, 2010-11இல் 8.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த முதலீட்டு வளர்ச்சி விகிதம்என்பதும் 2005-06இல் 17 விழுக்காடாக இருந்தது, 2008-09இல் -3.9 விழுக்காடாகக்
குறைந்து, 2009-10இல் 12.2 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், விவசாயத்தில் முதலீட்டின் வளர்ச்சி விகிதம் 13.9 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும்.

சர்வதேசநிதி மூலதனத்தை குஷிப்படுத்திடுவதற்காக, நிதித் தாராளமயக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக பட்ஜெட்டில் ஏழு புதிய சட்டமுன் வடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கத்தை இந்நடவடிக்கைகளைத் தொடராத வகையில் இடதுசாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால்தான், தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தத்தின் பேரழிவு உண்டாக்கக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம் நாடு காப்பாற்றப்பட்டது. ஆனால், தற்போது கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி மூல தனத்தை குஷிப்படுத்தும் வகையில் பிரதமர் உரை நிகழ்த்தியிருப்பதன் மூலம், மிகவும் ஆபத்தான சர்வதேச ஊக அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் இந்தியாவை பிரதமர் இட்டுச் சென்றிருக்கிறார். மேலும் தற்போதைய நாட்டின் நிதிப் பற்றாக்குறை விரிவடைவதன் மூலம், பெரிய அளவில் ஊக நிதி வருவதென்பதும் நல்ல அறிகுறியல்ல.

நாட்டு மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும், நம் உள்நாட்டுச் சந்தையை விரி வாக்கிடக்கூடிய வகையில் நம் வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங்களை நாமும் இந்தியாவில் உக்கிரப்படுத்திட வேண்டும்.

 

குறிச்சொற்கள்:

வேலை நிறுத்தம் – முடங்கியது இஸ்ரேல்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இஸ்ரேல் தொழிலாளி வர்க்கம் நடத்திய பொது வேலை நிறுத்தம் வங்கிகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை களிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இஸ்ரேலின் பெரிய தொழிற்சங்கமான ஹிஸ் டாடிரட்(தொழிலாளர் பொது சம்மேளனம்) பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கெதிராக தேசிய தொழி லாளர் நீதிமன்றத்தைப் பயன்படுத்தவும் இஸ்ரேலிய அரசு முனைந்தது. வேலை
நிறுத்தத்தைத் தடை செய்ய முடியாத நிலையில், வெறும் நான்கு மணிநேரங்கள்தான் வேலை நிறுத்தம் செய்யலாம் என்று நீதிமன்றம் முரண்டு பிடித்தது. வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முந்தைய நாள் இரவில் நீண்ட நேரம் விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை வேலை நிறுத்தம் நடத்தலாம் என்கிற விநோதமான அனுமதியை வலதுசாரி அரசுக்கு ஆதரவாக இஸ்ரேலிய தேசிய தொழிலாளர் நீதி மன்றம் வழங்கியது. இந்த அனுமதியையும் காலை ஆறுமணிக்குதான் நீதிமன்றம் தந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் பிரச்சனை இது என்று தனது தீர்ப்பின்போது நீதிபதி நிலி அராத் கூறியுள்ளார். ஆனால் தொழிலாளர்களின் பெரும் அளவிலான பங்கேற்பால் கிட்டத்தட்ட முழு வேலை நிறுத்தம் போலவே மாறிவிட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

வேலை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத்
தெரிவித்த கட்சித் தலைவர்களில் ஒருவரான எம்.கே. டோவ் கெனின், “போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் ஒட்டு மொத்த இஸ்ரேலிய சமூகமே எதிர்நோக்கும் பிரச்சனையாகும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்
துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை இரண்டாம் தரக்குடியுரிமை மக்களாகக் கருதுவது கொடுமையான விஷயமாகும். சமூக உரிமைகள் இல்லாத, போதிய ஊதியம் பெறாத இந்தத் தொழிலாளர்கள் முதலாளித்துவச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சி சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், சமூகப் போராட்டம் அரசியல் நடவடிக்கையாக மாறும் போதுதான் மாற்றம் ஏற்படும். இஸ்ரேலில் இது நடைபெற வேண்டுமானால் ஒரு விரிவான சோசலிச இயக்கத்தை இந்தப் போராட்டங்களிலிருந்து கட்ட வேண்டும். அத்தகைய இயக்கம் சோசலிச மதிப்புகளோடு கூடிய ஜன நாயகப் போராட்டத்தை நடத்தக்கூடிய இயக்கமாக மலர வேண்டும்.
அதற்கான பணிகளை இந்த வேலை நிறுத்தத்தின் அடுத்த கட்டமாகத் துவங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் நவம்பர் 11, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்:

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் திடீர் டிஸ்மிஸ்


மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

தமிழகத்தின் கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த புரிந்துணர்வை உருவாக்கவும், அவற்றின் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திமுக அரசு 2.7.1990ல் 25ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மாதம் ரூ.200 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தது. ஆனால், 10 மாத காலமே பணி செய்த இவர்களை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு எவ்விதக் காரணமும் இன்றி 1991 மே மாதத்தில் பணி நீக்கம் செய்தது.

இதன்பிறகு மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது 1997ல் மாதம் ரூ.500 தொகுப்பூதியத்தில் திமுக அரசு இவர்களை பணியமர்த்தியது. பின்னர் மேலும் 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.

2001ம் ஆண்டில் அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2006ல் திமுக
அரசு இவர்களை பணியில் அமர்த்தி மாதம் ரூ.1000 வீதம் தொகுப்பூதியம் வழங்கி ஆணையிட்டது.

மக்கள் நலப்பணியாளர்களின் சரிபாதி பேர் பெண்கள். மேலும் இவர்கள் அனைவரும் 40வயத்திற்கும் அதிகமானவர்கள். பணி நியமனம் பெற்று 2 முறை பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க
முடியாது. இந்த வேலையை நம்பி இவர்கள் இருந்து விட்டதால் வேலைவாய்ப்பக பதிவு மூப்பும் கலாவதியாகி விட்டது. அரசுப் பணிகளுக்கான வயது வரம்பும் கடந்து வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலைக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக அரசு மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை 3வது முறையாக செவ்வாயன்று (நவ.8) பணி நீக்கம் செய்து அரசாணை (எண்-86) வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.சீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுகின்ற மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மக்கள் நலன் சார்ந்த பணிகளை கடுமையாக பாதிக்கும் என்பதுடன்,
மக்கள் நலனில் இந்த அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கொடூரமான இந்த அரசாணையை திரும்ப
பெற்று மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் இடையறவு (பிரேக்) இன்றி பணியில் தொடர
வழிவகை செய்ய வேண்டும். நியாயமான இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், மக்கள்
நலப்பணியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் போராட நேரிடும் என்றும்
அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

 

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் நவம்பர் 9, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்:

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்


பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி யென்றால் உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும்
இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. தற்போது(5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்கு மான வித்தியாசம்?

எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?

பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன்
படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009-10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால்
மத்தியஅரசு எப்படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்துகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங்கியுள்ள வரியினங்கள் வருமாறு
(24.8.2011)

ஆதார விலை – ரூ. 24.23

சுங்கத்தீர்வை – ரூ.14.35

கல்விவரி – ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன் – ரூ.1.05

சுத்திகரிப்பு செலவு – ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்

மூலதனச்செலவு – ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி – ரூ. 5.50

கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி – ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00

மொத்தம் – ரூ. 60.72

இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படுகின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாப கணக்கே… தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 – 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட்களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும்.
மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி.
ஆனால் இதே காலத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயிரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம் தான் மானியமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றனவா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய்வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த்தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவாலியா வகையறாவின் வருத்தம் புரியும்.

2008ம் ஆண்டில்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ.2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை
அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்ய துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம்.

2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் (2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள்
ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.

ஆண்டு நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம்   (கோடியில்)

ஐஒசி (IOC)  5294 .00 – 832.27 – 6126.27

எச்பிசிஎல்(HPCL)  2142 – 22 90.90 –  2233.12

பிபிசிஎல்  2142 – 22 198.00 – 2340.22

உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?

2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன்
இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?.  இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து
வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட் ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் காரணம்
இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அதனையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை
கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன்மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.

இது யாருக்கான அரசு?

எப்போது பார்த்தாலும் விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும்.
மின்சாரதிற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ் அரசு குறியாக இருந்து வருகிறது.

ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடியை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடிரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்துமுறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்

 
4 பின்னூட்டங்கள்

Posted by மேல் நவம்பர் 8, 2011 in அரசியல், டாலர்

 

குறிச்சொற்கள்:

“திருட்டு” தமிழகம் முதல் இடம்


தேசத்தில் தமிழகம் வேறு எதிலே முந்தியிருக்கிறதோ இல்லையோ, தென் மாநிலங்களில் கொள்ளைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் தமிழ் நாடு முதலிடத்தில் இருக்கிறது என்ற செய்தி நிச்சயமாகப் பெருமைப்படத்தக்கதல்ல. குறிப்பாக, 2010ம் ஆண்டில் அதிகமான கொள்ளைப்புகார்கள் இங்கு பதிவாகியுள்ளன.

தேசிய குற்றச்செயல்கள் ஆவணங்கள் துறை (NCRP) வெளியிட்டுள்ள அறிக்கை யின்படி, 2009ம் ஆண்டு 1,144 சம்பவங்கள்தான்
பதிவாகின. 2010ம் ஆண்டிலோ 1,817 கொள் ளைச் சம்பவங்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன.  இது 58.8 விழுக்காடு அதிகரிப்பாகும். கர்நாடகத்தில் இது முறையே 1,825-1,949 (6.8 %), ஆந்திராவில் 544-550 (1.1 %) என பதிவாகியுள்ளது. b தன் மாநிலங்களில் சென்ற ஆண்டு கொள்ளைச் சம்பவங்கள் குறைவாகப் பதிவான மாநிலம் கேரளம்தான். குறைவாகப் பதிவானது மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆண்டை விட 23.4 விழுக்காடு வரையில் (830-636) கொள்ளைச்சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. கன்னம் வைத்து திருடுவது என்பதும் தமிழகத்தில் கடந்த ஆண்டு 11.7 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இதிலேயும் முதலிடம்தான்.

தமிழகத்தில் கொள்ளைகள் அதிகரித்திருப்பதற்கு, இங்கே மக்கள் தொகை அதிகரிப்பும், சங்கிலிப்பறிப்புகள் அதிகரித்து விட்டதும் தான் காரணம் என்று மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர். தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் தங்கச் சங்கிலிகள் அபகரிப்பும் அதிகரித்திருக்கிறது. தொடக்கத்தில் இத்தகைய சங்கிலிப் பறிப்புக் குற்றங்கள் முதல் தகவல் அறிக்கையில் திருட்டு என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அது கொள்ளை என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காரணங்கள் புறக்கணிக்க முடியாதவைதான். ஆனால் இவை மட்டுமே காரணங்கள் என்று வரையறுத்துவிடவும் முடியாது. கொள்ளைக் குற்றத்திற்கு மற்ற திருட்டுகளை விடக் கடுமையான தண்டனைகள் சட்டத்தில் உள்ளன என்ற போதிலும் கொள்ளைகள் அதிகரிக்கின்றன என்பதை எளிதாக ஒதுக்கிவிட இயலாது.

ஒட்டுமொத்தமாக சமூகப் பொருளாதாரம், மத்திய, மாநில அரசுகளின்  கொள்கைகள் என அடிப்படையான பின்னணிகள் உள்ளன. கடுமையான விலைவாசி உயர்வுகள், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கிற கார்ப்பரேட் உலகத்தினரின்
வர்த்தகக் கொள் ளைகள், அதற்கெல்லாம் இசைவாக நடந்து கொள்கிற ஆட்சியாளர்களின் வரலாறு காணாத ஊழல்கள், அதிகார வர்க்கத்தினரின் லஞ்சக் குளியல்கள் ஆகியவை பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை விதைக்கின்றன. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமுதாயக் கட்டமைப்பில், ஏமாற்றத்திற்கு உள்ளாகிறவர்கள் எளிதாக சமூக விரோதிகளின் கைகளில் சிக்க, அந்த எண்ணம் வலுவாக வளர்க்கப்படுகிறது. தங்களது குற்றச் செயலால் மற்றவர்களின் வாழ்க்கை சோகத்தில் மூழ்குவது பற்றிய மனசாட்சி உறுத்தலே இல்லாத கும்பல்கள் பெருகுகின்றன.

இதில் மத்திய அரசின் அணுகுமுறைதான் முக்கியக் குற்றவாளியாக இருக்கிறது என்றா லும், மாநில அரசு நழுவிவிட
முடியாது. அப்படிப் பட்ட அணுகுமுறைகளை வன்மையாக எதிர்ப்பது, அவ்வாறு எதிர்க்கிற சக்திகளுக்குத் துணையாக இருப்பது, காவல்துறை உள்ளிட்ட அரசு எந்திரத்தை சரியாக இயக்குவது, வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது, மக்களிடையே எச்சரிக்கை உணர்வுகளை வளர்ப்பது என்ற பன்முகச் செயல்பாடுகளே தேவைப்படுகின்றன.

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் நவம்பர் 3, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்: ,

கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்! – சமஸ்


வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’ வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது.  அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்றவர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங்களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது!

அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத்தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட் டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுகளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சத விகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது. கடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.
அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர்புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.

அப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. அமெரிக்கப்பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.

பொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத்
தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின்  டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு…
கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!

‘முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதியத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட்டங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப்
போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.

முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு  அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

நன்றி : ஜூனியர் விகடன்
(23.10.2011)

 

குறிச்சொற்கள்:

பாரதியை மீண்டும் சீண்டும் ஜெயமோகன்கள்


பாரதியின் மொத்தக் கவிதைகள் 268 என்று பேராசிரியர் அரசு தன்னுடைய குயில் பாட்டில் பாரதியின் கருத்து நிலை என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதில் பாடல்கள், கவிதைகள், வாழ்த்துப்பாக்கள் என அனைத்தும் அடக்கம். பாரதி தன் சமகாலத்திய இந்திய, உலக இலக்கியப் போக்குகளின் மீது கவனம் பதித்திருந்ததை அவனது  கட்டுரை தொகுப்பை படிக்கிற போது அறிந்து கொள்ள முடிகிறது. மு. ராகவையங்கார் வழியாக சங்க மரபை அறிந்து அதைப் பற்றிய அய்யங்கார் உரையை இந்தியா பத்திரிகையில்
பெருமகிழ்வோடு வெளியிடுகிறான்.

நீதி நூல்கள்,காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள், ஆண்டாள், வள்ளலாரின் படைப்புகள், நாட்டார்இசை மரபுகள், செவ்வியல் இசை
மரபுகள், இதிகாச, பஞ்சதந்திர மர கள் என பலவற்றிலும் கவனம் கொண்டு, கற்று தன்படைப்பை மிளிரச் செய்திருக் கிறான் பாரதி. பொது வாழ்வும்,இலக்கிய வாழ்வுமான தன் 16ஆண்டுகளை அடக்கு முறை,அச்சுறுத்தல்,புலம் பெயர்தல், வறுமையான வாழ்க்கைப் பாடு எனகழித்த தன் ஊடாகவே தன் படைப்பை நவீன தமிழ் மொழிப் பரப்பில் விட்டுச் சென்றிருக்கிறான்.

அடிமை இந்தியாவை விடவும் ஆசு வாசமான தற்காலத்திய சூழலில் வாழ்ந்து கொண்டு ,ஊடக பெருக்கத்தின் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வலைப்பூ கச்சேரி செய்யும் ஜெயமோகன்கள் இக்கவிதை மேன்மையினை சரியாக உணர முடியாது. இவர் தனது வலைப்பக்கத்தில் பாரதி அந்தகாலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞன் மட்டுமே இதைத்தாண்டி மகாகவி என அவனை சொல்ல வாய்ப்பு இல்லை. காரணம் அவனிடம் அசல்தன்மை கிடையாது; நகல் கவிஞன் என்ற ரீதியில் எழுதிச் செல்கிறார். அமைப்புகளில் செயலாற்ற மறுக்கும் தூய வெற்றிலக்கியசார். தன்னல நபர்களைப் போல் அன்றி ஒரே நேரத்தில் அமைப்பாளனாகவும்
படைப்பாளனாகவும் இருக்க வேண்டிய தேவையில் விடுதலை அரசியலுக்கான களமாக தன் படைப்பை பயன்படுத்துகிறான் பாரதி.இதற்கு ஆண்டாளின் திருப்பாவை, தொண்டரடிப்பொடி யாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி உட்பட பல உத்திகளையும் கைக் கொள்கிறான். திசைகள் எங்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுடர் கின்றன.நட்சத்திரங்களின் ஒளியும் குறைந்து சந்திரனும் மயங்கி விட்டான். விலகிய இருளினூடாக கமுகு மடல்களைக் கீறிக் கொண்டு, சுகந்த காற்று வீசும் அதிகாலைப் பொழுதில் துயில் கலைவாய் திருவரங்கனே என பெருமாளுக்கு வேண்டுகோள் விடுக்கும் மரபைத் தள்ளி வைத்து விட்டு,பெருமாள் இருந்த இடத்தில் சுதந்திரதேவியை முன்வைத்து அவளுக்கான திருப்பள்ளி எழுச்சி பாடுகிறான் பாரதி. இப்பள்ளி எழுச்சியில் வேண்டுகோள் கிடையாது. ஆணை,அதட்டல்,கோபித்தல் என சமயவடிவ ஊடாக சமய மறுமலர்ச்சியையும் விடுதலை உணர்வினையும் முன்னெடுக்கிறான்.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிக் கவிதை 40 அடிகளில் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் செய்த தவத்தால் இருள் விலகி பொற்சுடர் பரவி பொழுது புலர்ந்த காலையில் பல்லாயிரம் தொண்டர்கள் உன்னை வணங்கக் காத்திருக்கிறோம். பறவைகள் பறக்க,முரசங்கள் ஒலிக்க எங்கும் சுதந்திர சங்கு ஒலிக்கிறது. அறிவாளர்களும்,பெண்களும் உன் பெயர் சொல்லி காத்திருக்க , உன் காலடியில் அணி விக்கும்பொருட்டு எங்கள் இதய மலர் களைக் கொய்து வைத்திருக்கும் எங்கள் ஆவலை நீஅறிவாயா? பலகாலம் பற்பல தவங்கள் செய்து ஏழைகள் நாங்கள் காத்திருக்க இன்னும் உனக்கு உறக்கமா? விதவிதமான பதினெட்டு மொழி பேசும் மாநிலங்களை உடையவளே குழந்தைகள் நாங்கள் எழுப்புகிறோம் பள்ளி எழுந்தருளாயோ? என்பதில் பல செய்திகளையும் விரவித் தருகிறான்
பாரதி.

இந்தக் கவிதையை வாசிக்கிறபோது செய்யுளில் யாத்தக் கவிதை என்பதற்கும் அப்பாற்பட்டு மனத்திரையில் ஒரு பெரிய சித்திரத்தை தீட்டிக் காட்டி ,.தீட்டப்படும் சித்திரத்தின் ஊடாக விடுதலைப் பற்றாளர்களின் மனதை கிளர்ச்சியுறச் செய்து விடுதலைப் போரை மேலும் மூண்டெழச் செய்யும் உத்தி இது. காட்டுவழிப் பயணத்தின் போது விலங்குகள்,திருடர்களுக்கு அச்சத்தை தரும் பொருட்டும் சுய அச்சத்தைத் தணிக்கும் பொருட்டும் பாடப்படும் வழி நடைப்பாட்டு போலவும் ,போர்க் காலங்களில் படைகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு பாடப்படும் படை நடைப்பாட்டு போலவும் இந்த சித்தரிப்பு, வாசிப்பின் போது உற்சாகம் தருகிறது. இது ஒர் அமைப்பாளன் செய்ய வேண்டிய பணி.நம்பிய கொள்கை தழைக்கும் பொருட்டு அணிகளை உற்சாகப் படுத்த வேண்டிய, தரவுகளைச் சொல்லி
போராட்டத்தை கூர் தீட்ட வேண்டிய தலைவனின் பணியைச் செய்தான் பாரதி.

அரசியல் களத்திலும்,பண்பாட்டுக் களத்திலும்(இதன் உட்கூறான கவிதை உட்பட) மாற்றம் நிகழ்த்த இயங்குவோர் கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் பற்றிய புரிதலை தன் மாநிலம், தேசம், சமூகம், உலகம் நடந்து வந்த பாதைகளின் ஊடாகவும் அந்தந்த கால கட்டத்திய ஆளுமைகளின் படைப்புகள்,கண்டுபிடிப்புகள், வரலாறுகள் வழியாகவும் திரண்ட அனுபவத்தைப் பெற்று இதன் வழி புதிய பாதையை, புதிய உத்தியைக் கண்டடைவது காலம் தோறுமான மானுடர்களின் பணி. இதைத் தாண்டிய அகமனத் தேடல், எதன் ஒன்றினும் பாதிப்பும் இன்றி சுயம்புவாக உணர்தல்தான் அசல் என்று கதைப்பது, தன்னை சமூகத்திலிருந்து தனியாக பிரித்துப் பார்க்கின்ற எதிரரசியல் போக்கு. வரலாற்றை, அறிவியலை மறுக்கின்ற மாயாவாத, வேதாந்த போக்கு.ஜெயமோகன் வ்ழி மொழியும் இந்தப் போக்கை அன்றே எட்டி மிதித்தவன் தான் மகாகவி பாரதி.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி கவிதையில் வீதியெல்லாம் அணுகுற்றனர் மாதர் தெள்ளிய அந்தணர் வேதமும், நின்றன் சீர்திரு நாமமும் ஓதி நிற்கின்றார். இதில் அந்தணர் என்பதை இன்றைய அடையாள அரசியல் நோக்கில் பார்க்காமல், அறிவாளிகள் என பார்க்கிறார் பாரதி. நவீன தமிழகத்தின் விழிப்பின் முன்னோடியாக செயற்பட்ட சுதேசமித்திரன், இந்து பத்திரிகை அதிபரும்,பாரதிக்கு உற்ற துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்த ஜி.சுப்பிரமணிய அய்யர்,வழக்கறிஞர் துரைசாமிஅய்யர்,பெண்விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நீதிபதி சதாசிவ அய்யர் , விடுதலைப்போரில் ஆணுக்கு நிகராய் பெண்களின் பங்களிப்பை உணர்ந்து அமைப்பை முன்னெடுத்த அன்னிபெசண்ட், மங்களாம்பிகை போன்றோர்களை மனதில் கொண்டே மேற்கண்ட வரிகளை
வடிவமைத்திருக்கிறார் பாரதி.

கடைசி அடியில் மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ? மாநிலம் பெற்றவள் இஃதுணராயோவிதமுறு நின்மொழி பதினெட்டும்
கூறி வேண்டியவாறு உனைப் பாடுதும் காணாய் மொழிவாரி மாநிலம் என்ற கோரிக்கையை காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முன்னெடுப்பதற்கு 30 ஆண்டுகள் முன்னரே பாரதி தன் கவிதையில் இதைப் பதிந்திருக்கிறான். மரபுகளிலிருந்து பெற வேண்டியதைப் பெற்று அதன் போதாமைகளை புதிய தேவைகளிலிருந்து நோக்கி தன் காலத்திய அரசியல் களத்தையும், இலக்கிய உலகத்தையும் ஒரு சேர வளர்த்தவன் பாரதி.புதியதும், புதிய மரபும் பழைய மரபின் சாரத்திலிருந்தே தன்னை வளர்த் தெடுக்க இயலும் என்பதை நாம் பாரதி போன்ற வர்களின் கவிதைமரபினூடாக புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்கிறோம்.*

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 24, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்: , ,

இதுதான் அமெரிக்கா


மனித உரிமை குறித்து உலக நாடுகளுக்கு வாய் கிழிய வகுப்பெடுக்குகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஆனால் பிற நாட்டு மக்களை புழுக்களாய், புன்மைப் பூச்சிகளாய் கருதுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவை தாஜா செய்ய எந்த அளவுக்கும் இறங்குகிறது. ஆனால், இந்திய மக்கள் என்றாலே அமெரிக்க நிர்வாகத்திற்கு இளக்காரம்தான்.

இதற்கு சமீபத்திய உதாரணம்தான் அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கணுக்காலில் கண்காணிப்புக் கருவியை பொருத்தி இழிவு படுத்தியுள்ள நிகழ்வாகும். அமெரிக்காவில் படிக்கலாம் என்று ஆசைகாட்டி விளம்பரங்கள் இந்தியாவில் செய்யப்படுகின்றன. இதை நம்பி அமெரிக்கா செல்லும் பல மாணவர்கள் ஏமாறுகின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள டிரை-வேலி பல்கலைக்கழகத்தில் அமெரிக்கப் போலீசார் சோதனை நடத்தியபோது அங்குள்ள மாணவர்களுக்கு போலி விசா வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இதற்கு எந்தவகையிலும் மாணவர்கள் பொறுப்பல்ல. போலி ஏஜெண்டுகளால் இவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் 1,555 பேர் இவ்வாறு போலி விசாவில் படித்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. நியாய உணர்ச்சியின் அடிப்படையில் அந்த மாணவர்கள் பயில மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அமெரிக்க நிர்வாகம், மாணவர்களை ஒரு முகாமில் அடைத்து சித்ரவதை செய்து வருகிறது. உச்ச கட்டக் கொடுமையாக மாணவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க கணுக்காலில் நிர்ப்பந்தமாக கண்காணிப்புக் கருவி பொருத்தியுள்ளனர். பெருந்தொகை கொடுத்தவர்களை ஜாமீனில் விடுவித்துவிட்டு, முடியாதவர்களை இவ்வாறு கொடுமைப்படுத்துகின்றனர்.

அமெரிக்காவில் பயிலச்சென்ற இந்திய மாணவர்கள் மட்டுமின்றி தலைவர்களும் கூட அவமானத்திலிருந்து தப்புவதில்லை. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் துவங்கி, முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், திரைக்கலைஞர்கள் கமல்ஹாசன், ஷாருக்கான், மம்முட்டி போன்றவர்களும் அமெரிக்க விமான நிலையங்களில் சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரும் கூட இவ்வாறு இழிவுபடுத்தப்பட்டார்.

வழக்கம்போல இந்திய அயல்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதை கண்டிப்பதாக கூறியுள்ளார். ஆனால் இது போதாது. கடுமையான வார்த்தைகளால் அமெரிக்க அதிகாரிகளின் இழிசெயலை கண்டிக்க வேண்டும். அமெரிக்க தூதரை அழைத்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் மற்றும் கல்வி கிடைத்திட உரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்ய வேண்டும்.

இந்தியாவில் அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு இத்தகைய இழிவு ஏற்பட்டிருந்தால் அமெரிக்கா எந்த அளவுக்கு கோபமடைந்திருக்குமோ அதே கோபத்தை இப்போது இந்தியாவின் சார்பில் வெளிப்படுத்த வேண்டும். முதலில் இந்தியா என்பது அமெரிக்காவின் காலனி நாடு அல்ல என்ற உணர்வு ஆட்சியாளர்களுக்கு வர வேண்டும்.

 
 

குறிச்சொற்கள்: , , , , ,

பிரதமருக்கு எல்லா ஊழலும் தெரியும்


சுதந்திர இந்திய அரசியல் சரித்திரத்தில், எதிர்க்கட்சிகளால் பிரதமர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை மன்மோகன் சிங்கைப்போல எந்தப் பிரதமரும் உச்ச நீதிமன்றத்தால் செயல்திறன் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்பட்டதாகத் தெரியவில்லை. கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று கருதப்பட்டவர் கறுப்பு ஆடுகளின் காவல்காரர் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 

“ஸ்பெக்ட்ரம்’ ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும், அவரால் தேர்ந்து எடுத்து நியமிக்கப்பட்டவர்களுமாக இருக்கிறார்களே அதுதான் நம்மை எல்லாம் வியப்படையச் செய்கிறது. 

இந்திய அரசுப் பணி அதிகாரியாகவும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்த எம்.எஸ். கில், உணவு மற்றும் விவசாயப் பிரச்னைகளில் தேர்ந்தவர் என்று கருதப்படுபவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும் நேரத்தில், அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் மாற்றப்பட்டு, அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத எம்.எஸ்.கில் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டது ஏன் என்கிற சந்தேகம் அப்போது ஏற்படவில்லை. இப்போது ஏற்படுகிறது. 

எம்மார் எம்.ஜி.எஃப் என்றொரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்குத்தான் தில்லி வளர்ச்சிக் குழுமம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட சர்வதேச அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்த நிறுவனம் முன்னாள் ராஜஸ்தான் ஆளுநர் எஸ்.கே.சிங்கின் மகனும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான கனிஷ்க் சிங்கின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், உடனடியாகக் கட்டி முடிப்பதற்காக, இந்த நிறுவனத்துககு முறையே | 750 கோடியும், | 827 கோடியும் முன்பணமாக, ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத் தொகைக்கும் அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறதே, அது ஏன்? எதற்காக? யாருடைய பரிந்துரையில் அல்லது நிர்பந்தத்தின் பேரில்? 

பல்ஜித்சிங் லல்லி என்பவர், எம்.எஸ். கில்லைப் போலவே பஞ்சாபியரான இன்னொரு இந்திய அரசுப்பணி அதிகாரி. மத்திய உள்துறையின் செயலர்களில் ஒருவராக இருந்த பல்ஜித்சிங் லல்லி, பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்ப நண்பர். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் எதிலும் சிக்கிக் கொள்ளாதவர். இவர் பிரசார் பாரதி குழுமத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரது நேரடிப் பார்வையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெயரில் பிரசார் பாரதி சார்பில் நடந்தேறியிருக்கும் ஊழல், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. 

பிரசார் பாரதி குழுமம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவுமான உரிமையை லண்டனைச் சேர்ந்த எஸ்.ஐ.எஸ்.லைவ் என்கிற நிறுவனத்துக்கு | 246 கோடிக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தப்படி உரிமையை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுப்பதற்கோ அல்லது துணை ஒப்பந்தம் மூலம் வேறு நிறுவனத்தைப் பயன்படுத்தவோ  எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு அனுமதி கிடையாது. 

ஆனால் நடந்தேறியிருப்பது என்ன தெரியுமா? எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனம் மார்ச் 5, 2010 அன்று பிரசார் பாரதியால் | 246 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே நாளில், “ஜும்’ என்கிற நிறுவனத்தை | 177.30 கோடிக்கு காமன்வெல்த் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இடைத்தரகராகச் செயல்பட்டு | 68.70 கோடி லாபம் சம்பாதித்துவிட்டது எஸ்.ஐ.எஸ்.லைவ். பிரசார் பாரதிக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் சேர்த்து “ஜும்’ காட்டிவிட்டனர். இதன் பின்னணியில் செயல்பட்டவர் வேறு யாருமல்ல, பிரசார் பாரதியின் செயல் தலைவர் பல்ஜித்சிங் லல்லிதான். 

மத்திய நிதியமைச்சகம், எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு முறையான பின்னணியோ, சேவை வரி செலுத்திய பதிவு எண்ணோ, முன்அனுபவமோ இல்லை என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. ஒப்பந்தங்கள் பெறப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த பிறகுதான், 2010 ஜனவரி மாதத்தில் எஸ்.ஐ.எஸ். லைவ் என்கிற நிறுவனமே தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறி நிதியமைச்சகம் பிரசார் பாரதியை எச்சரித்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், அவசர அவசரமாக ஒப்பந்தத் தொகையான | 246 கோடியில் 80% உடனடியாக அந்த நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கவும் செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பல்ஜித்சிங் லல்லி! 

ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், முறைகேடுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் பிரதமர் மன்மோகன் சிங்குடனோ அல்லது காங்கிரஸ் கட்சித் தலைமையுடனோ நெருக்கமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் என்று எல்லோருமே இந்த “மெகா’ கொள்ளையில் தொடர்புடையவர்களாக இருப்பதால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாடி பலிகடா ஆக்கப்பட்டு, பிரச்னையை மூடிமறைக்கும் முயற்சி நடக்கிறதோ என்று தோன்றுகிறது. 

பிரதமர் ஏன் இத்தனை நாளாக மௌனம் சாதித்தார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அவரால் பதில் சொல்ல முடியாததுதான் காரணம் என்று நம்ப வழியில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று சொல்வார்கள். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்கக் கூடுமா என்ன? 

சமீபத்தில் பதவி விலகி இருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவின் கூற்றுப்படி – “”பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாமே நடந்தது!” 

 

குறிச்சொற்கள்:

ராசா பேசுகிறேன்.


நீரா: ஹலோ?

ராசா: ராசா பேசுகிறேன்.

நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

ராசா: ஆ?

நீரா: பர்கா தத்

ராசா: அவர் என்ன சொல்கிறார்?

நீரா: இந்த விஷயம் குறித்து…. அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக…. அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.

ராசா: … ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்… அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.

ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்… ஏன் காங்கிரஸ் அநாவசியமாக…. ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.

நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?

ராசா: ஆ?

நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்…

ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: தனியாகவா?

ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.

நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?

ராசா: ஆம்.

நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.

ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்…

22.5.2009

மதியம் 2 மணி 29 நிமிடம்

41 விநாடிகள்

நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?

ராசா: அவர் என்ன சொல்கிறார் – கனி என்ன சொல்கிறார்?

நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.

ராசா: ம்ம்…

நீரா: …. ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்…

நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.

ராசா: ம்ம்.

நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று….

ராசா: ஆ…. நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்…

நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?

ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்… எனக்குத் தெரியும்…

நீரா: இல்லை… அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல… பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்… இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

ராசா: ம்ம்.

நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.

ராசா: ஓஹோ! ஓஹோ!

நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்…

ராசா: ம்ம்.

நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்…

ராசா: ஓ…

நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.

24.5.2009

காலை 11 மணி

5 நிமிடம் 11 விநாடிகள்

நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?

ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.

நீரா: தெரியும் அல்லவா?

ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.

நீரா:ம்ம்..

ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.

ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்…

நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?

நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்… சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?

ராசா: எனக்குத் தெரியாதே.

நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.

ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்… அதனால் எதுவும்…

நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.

ராசா: ஆ, இருக்கலாம்

– நன்றி: அவுட்லுக் 

 

கனிமொழி – நீரா ராடியா உரையாடல் 

22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்

கனிமொழி: ஹலோ

நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா…

கனி: ம்ம்

நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று…

கனி: ஆம், ஆனால் யாரும்… யார் சொன்னது?

நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது…

கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.

அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?

நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.

கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது… உங்களுக்கே தெரியும்… பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.

நீரா: ம்ம்..

…சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.

நீரா: ஓகே.

கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.

22.5.2009

மதியம் 2 மணி 46 நிமிடம்

15 விநாடிகள்

கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?

நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.

கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே… அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)

நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?

கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். “நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது’.

நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். – உன்னை – (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?

கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.

நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?

கனி: ஆம், ஆம்.

நீரா: இதுதான் அரசியல், மை டியர்.

22.5.2009

இரவு 8 மணி 04 நிமிடம்

19 விநாடிகள்

நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது…

நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.

கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்…

நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.

23.5.2009

காலை 9 மணி 59 நிமிடம்

2 விநாடிகள்

நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.

கனி: அது சரி.

நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.

கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

நீரா: ஆம், சரிதான்.

கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.

நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.

– நன்றி: அவுட் லுக். 

 

வீர் சங்வி (பத்திரிகையாளர்) – நீரா ராடியா உரையாடல் 20.6.2009 மதியம் 12 மணி 09நிமிடம் 59 விநாடிகள் 

 

நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.

வீர்: அது சரி.

நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.

வீர்: ஆம்.

நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.

வீர்: சரி.

நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப்பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை.  அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள்.  அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. “எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது’ என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது,இல்லையா?

நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?

வீர்: ஆம்?

நீரா: அப்படியா?

வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.

நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.

வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான்  அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரா: ஆம், ஆம்.

வீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்..

வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் “கவுன்டர் பாயிண்ட்’ பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.

நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.

வீர்: சரி.

நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.

வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.

நீரா: சரி.

வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்துவிடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்புதிட்டம் உள்ளது, எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக்கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. மன்மோகன் சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.

நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்: சரி.

நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.

வீர்: அவற்றை நான் குறிப்பிட்டுவிடுகிறேன்…

நீரா: சரி.

வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்…

23.5.2009

இரவு 10மணி 26நிமிடம்

42விநாடிகள்

நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்…

வீர்: மாறன்.

நீரா: ஆம்… (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)

ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே…

வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?

நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து…

வீர்: சரி.

நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு | 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.

வீர்: | 600 கோடி சரியா?

நீரா: | 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.

வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது?

நீரா: இல்லையா?

– நன்றி: “ஓபன்’ வார இதழ். 

 

பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) – நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள் 

 

பர்கா: ஆ, நீரா?

நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.

நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?

22.5.2009

காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்

நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.

பர்கா: ஆம்.

நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.

பர்கா: ஆம்.

நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.

பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?

நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.

பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?

நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.

பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.

நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.

பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?

நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிட

வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.

பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும்.  காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.

பர்கா: சரி.

… அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.

நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் – அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்…

பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.

நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?

நீரா:  அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.

– நன்றி: “ஓபன்’ வார இதழ்
 

குறிச்சொற்கள்: