கடந்த இருபது ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் விவசாய நெருக்கடியை உருவாக்கியுள் ளன. 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலமான2007-12இல் விவசாய வளர்ச்சி விகிதத்திற்கு 4 விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது சுமார் 3 விழுக்காடு அளவிற்குத்தான் இருந்திருக்கிறது. முந்தைய எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதைவிட, கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுறுக்கள் பீரோ பதிவு செய்திருக்கிறது. 2003-10ஆம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரத்து 756 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995-2002இல் 1 லட்சத்து 21 ஆயிரத்து 157 பேர் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மேற்குவங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இடது முன்னணி ஆட்சிகள் இல்லாத நிலையில், அங்கேயும் விவசாய நெருக்கடியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடங்கியிருக்கிறது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தில், விவசாயிகள் தற்கொலை என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்தது. இப்போது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபின் கடந்த ஓராண்டில் சுமார் 50 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் இதுவரை 54 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை வாங்க மறுத்ததன் காரணமாகவும், புதிய கடன் வலைகளில் அவர்கள் சிக்கியுள்ளதன் காரணமாகவும் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்வதுடன், அதிகரித்தும் உள்ளது.
ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் இந்த ஆண்டு பட்ஜெட், விவசாயிகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். எரிபொருள்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ரசாயன உரங்களுக்கு அளித்து வந்த மானியத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. இதனுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்பாக இருந்து வந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் காரணமாக, வெளிச்சந்தையில் எரி பொருள்கள் மற்றும் ரசாயன உரங்களின் விலைகள் விண்ணை எட்டியுள்ளன. இதனால் விவசாயிகள் மேலும் கடுமையான முறையில் வறிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதுடன், விவசாயத்திற்காக வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் கடன்வலையிலும் அவர்களைத் தள்ளி விட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளித்து வந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டச் செலவினத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரையிலும் குறைத்திருப்பதன் காரணமாக, விவசாயத் தொழிலாளர் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு வேலைகளும் குறைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அதே சமயத்தில் ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமோ, கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு 5 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறது. 2004இலிருந்து இதுவரை அவர்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகள் 26 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.
Category Archives: டாலர்
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை
பெட்ரோல் மத்திய அரசின் பெட்ரோல் பொய் கணக்கு
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 12 முறைக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால் அடுத்தடுத்து விலை உயர்வு இருக்கும் என்றே தெரிகிறது. அதனால் வரிகள், அரசு நிறுவனங்களின் லாப ஈட்டுத்தொகை என அரசு கஜானாவில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது.
இதில் மக்களின் நிலைமை வேடிக்கையானது. விலை உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். எல்லாம் சில நாள்கள்தான். அதற்குள் இன்னொரு விலை அறிவிப்பு பற்றி அரசு பேசத் தொடங்கும். உடனே பெட்ரோல் விலையை உயர்த்தக்கூடாது என்று மக்கள் மத்தியில் ஆவேசம் கிளம்பும். ஆட்சியாளர்கள் எதையும் பொருள்படுத்தமாட்டார்கள். தங்கள் இஷ்டப்படி விலையை உயர்த்துவார்கள். பிறகு இன்னொரு போராட்டம், இன்னொரு விலை ஏற்றம். இதுதான் நம் நாட்டு அப்பாவிகளின் நிலை.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எண்ணெய் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைத்துவிட்டது. அடுத்தடுத்து என்னென்ன பொருள்களையெல்லாம் இப்படி ஒப்படைக்கலாம் என நேரம் பார்த்து வருகிறது.
ஒரு கட்டத்தில் எல்லா பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுத்து விடுவதுதான் அரசின் திட்டம். இதன் பிறகு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படும்.
பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதை அரசு பல்வேறு வகையிலும் நியாயப்படுத்த முயற்சிக்கிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம், அரசின் மானியச் சுமை, நிதிப் பற்றாக்குறை என என்னவெல்லாமோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இப்போது அரசுக்குப் புதிய காரணம் கிடைத்திருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டதால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருப்பதாக அரசு கூறுகிறது. ரூபாயின் மதிப்புக் குறையைக் குறைய, உள்நாட்டு டீசல், பெட்ரோல் விலையில் பாதிப்பு ஏற்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறினார்.
ஒரு டாலருக்கு ஒரு ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது கணக்குப்படி நாளொன்றுக்கு ரூ.271 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
ஒரு வகையில் பார்த்தால் இது நியாயமானதாகத் தோன்றும். ரூபாயின் மதிப்பு குறைகிறதென்றால், டாலரின் மதிப்பில் கச்சா எண்ணெய்க்கு நாம் கூடுதல் விலை கொடுத்தாக வேண்டும். அதனால் நஷ்டம் ஏற்படுவது உறுதி. இதைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு ஓராண்டின் இறக்குமதிக் கணக்கை எடுத்துக் கொள்வோம்.
2010-11 நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதாரம் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரப் புத்தகத்தில், 1,06,068 டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பில் இது 30 சதவீதம். அப்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.45.5. இதைக் கொண்டு கணக்கிட்டால் கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு ரூ.4,82,714 கோடிக்குச் சமம்.
இப்போது ஒரு டாலருக்கு ரூ. 50 என்கிற அளவுக்கு ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது. இந்த மதிப்பைக் கொண்டு 2010-11 நிதியாண்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கணக்கிட்டால் ரூ.5,30,340 கோடி என வரும். அதாவது ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் கூடுதலாக ரூ.47,626 கோடி செலவாகிறது என்று அர்த்தமாகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் சந்தை விலை மாறாமல் இருந்ததால்தான் இந்தக் கணக்கு சரி. ஆனால், அப்படியிருப்பதில்லை. கச்சா எண்ணெய் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.
2009-10-ம் நிதியாண்டில் 66.76 டாலராக இருந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இப்போது 111 டாலருக்கு உயர்ந்திருக்கிறது என்பது பெட்ரோலிய அமைச்சரின் கருத்து. ரூபாய் மதிப்பு சரிந்ததன் காரணமாக ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் இந்த விலை உயர்வால் ஏற்படும் நஷ்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால்தான் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அரசு கூறிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த விளக்கம் முழுமையானதல்ல. சில உண்மைகள் வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றன. பெட்ரோலியப் பொருள்களை விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படுவதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.
ரூபாய் மதிப்பு சரிந்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை மட்டும்தான் அரசு கூறுகிறது. ஆனால் இதில் லாபமும் இருக்கிறது. இறக்குமதியில் நஷ்டம் ஏற்படுகிறதென்றால், ஏற்றுமதியில் லாபம் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை.
இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் 70 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் பலவகைப் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் உண்மை. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, 2010-11-ம் நிதியாண்டில் இந்தியா 41,918 கோடி டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இது 16.53 சதவீதம். ரூ.45.5 என்கிற பரிமாற்று மதிப்பில் இது ரூ.1,90,781 கோடிக்குச் சமம். ரூ.50 என்கிற பரிமாற்றுப் மதிப்பில் கணக்கிட்டால் ரூ.2,09,590 கோடி. ஆக, ரூ.18,809 கோடி அதிக லாபம் கிடைக்கும்.
இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால் ஏற்படும் இழப்பாக அரசு குறிப்பிடும் மதிப்பு வெகுவாகக் குறைந்துவிடும்.
பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் லாபம் அல்லது நஷ்டத்தை நிர்ணயிப்பதில் வேறு சில காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், நஷ்டக் கணக்கு காட்ட வேண்டும் என்பதிலேயே முனைப்புடன் பணியாற்றிக் கொண்டிருப்போர் இதை வசதியாக மறந்துவிடுகின்றனர். உதாரணத்துக்கு நாட்டின் கச்சா எண்ணெய்த் தேவையில் 30 சதவீதம் உள்நாட்டிலேயே கிடைக்கிறது. இதை யாரும் கணக்கில் கொள்வதில்லை.
இவை எல்லாவற்றையும் மதிப்பிட்டால் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் கொள்ளை லாபம் அடைவதைக் கண்டறிய முடியும்.
இதற்கு முந்தைய பல கட்டுரைகளில் கூறியதைப் போல, எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.
இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும் எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற உண்மையை எந்தப் போர்வைக்குள்ளும் மூடிவிட முடியாது.
இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கு அறிக்கைகள் அமைந்திருக்கின்றன. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2010-11ம் ஆண்டுக்கான அறிக்கையில், அந்த நிறுவனத்துக்கு வரிப்பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி லாபம் அடைந்திருப்பதைக் காண முடியும்.
இந்த நிறுவனம் அரசுக்கு லாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடியைக் கொடுத்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.
இவையனைத்தையும் வைத்துப் பார்த்தால், பெட்ரோலிய விற்பனையால் நஷ்டம் ஏற்படுவதாக அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறி வருவது மக்களைத் திசை திருப்பும் முயற்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதன் பிறகும் விலையை ஏற்றுவதற்கே அரசு தருணம் பார்த்துவருகிறதே தவிர, விலையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்கவே இல்லை.
நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் பெட்ரோலிய விலை உயர்வுதான். அத்தியாவசியப் பொருள் ஒவ்வொன்றின் விலையிலும் அதன் சரக்குக் கட்டணத்துக்கு குறிப்பிட்ட பங்களிப்பு இருக்கும். அந்த வகையில் பெட்ரோலிய விலையை உயர்த்தினால், பொருள்களின் விலை உயரும். அதுவே பணவீக்கம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமையும்.
இந்த ஒரேயொரு காரணத்துக்காகவாவது பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவது பற்றி அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் அரசின் செவிகளை அது எட்டவில்லை.
நாட்டு மக்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என முழங்கிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, உண்மையிலேயே அந்த அக்கறை இருக்குமானால், பெட்ரோலியக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். எல்லாவற்றிலும் லாபம் பார்த்துவிட வேண்டும் என்கிற வியாபார மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் முடியாதென்றால், லாபத்தை பையில் போட்டுக் கொண்டு, நஷ்டம் ஏற்படுகிறது என்று போலியாகப் புலம்புவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். பாவம் மக்கள்!
நன்றி: தினமணி பி.எஸ்.எம். ராவ்
மருந்து நிறுவனங்களின் பகல் கொள்ளை
சமீபத்தில் உச்சநீதிமன்றம், மக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசிய மருந்துகள் மத்திய அரசின் விலைக் கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்றனவா என்றும் ஏழை, எளிய மக்கள் வாங்கி பயன்படுத்தும் வகையில் உள்ளனவா என்றும் மத்திய அரசை வினவியுள்ளது. இதுநாள் வரையில் மத்திய அரசும், பெட்ரோலியத்துறை அமைச்சகமும் இதன்மேல் மௌனம் சாதித்து வருகின்றன. அப்படியென்றால் மருந்துகளின் விலைகள், நிர்ணய விலைக் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் அதை கட்டுப்படுத்திட மத்திய அரசு எவ்வித முயற்சியும் எடுத்திட வில்லை என்று தான் அர்த்தமாகும்.
இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் வானளாவிய உயரத்தில் உயர்ந்துகொண்டிருக்கும் வேளை யில் மருந்துகளின் விலைகள் என்பது விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு இந்தியன் வருமானத்தில் மருந்துகளின் செலவு என்பது மாதாமாதம் உயர்ந்து கொண்டி ருக்கிறது. இந்திய அரசின் 2004-05 அறிக்கையின்படி தனி மனித செலவீனத்தில் மருத்துவத்திற்காக கிராமங்களில் 7 சத வீதமும் நகரங்களில் 5 சதவீதமும் செலவிடப்படுகிறது. 2010-11ல் இதில் குறைந்த பட்சம் 150-200 சதவீதம் வரை உயர்ந்திருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடிக்கும் தாராளமயக் கொள்கையின் விளைவாக, மருந்துத் துறையில் 100சதவீதம் அந்நிய மூலதனம் அனுமதித்ததன் காரணமாக பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கபளீகரம் செய்து வருகின்றன. இதனால் இந்திய மருந்துத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகி, இந்திய மக்களை, தொழிலாளர்களை வஞ்சித்து வருகின்றது. இதை தடுத்திட வேண்டுமென்று இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. மருந்து சந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு, விலைகள் குறைய வேண்டுமென்றால் சாத்தியமே இல்லை.
348 மருந்துகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. ஆனால் 37 மருந்துகள் மட்டும்தான் விலைக் கட்டுப்பாட்டு பட்டியலில் உள்ளன. மற்ற 311 மருந்துகளும் மருந்து நிறுவனங்களின் லாபவெறிக்கு விட்டு விட்டது. இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தத்திற்கான மருந்து மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.
மேலும் கே.ஸ்ரீநாத் தலைமையிலான திட்டக் குழுவின் மக்கள் நலன் உபகுழு தனது அறிக்கையில், “மருந்துகளின் விலை நிர்ணயத்தில் இந்திய அரசின் மெத்தனப் போக்கை பன்னாட்டு நிறுவனங்கள் தனதாக்கிக் கொண்டு மருந்துகளை அதிக பட்சமாக விலை உயர்த்தி தனது லாபத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வுக்கு காரணம்தான் என்ன?
1. மருந்து நிறுவனங்களின் லாப வெறிதான் காரணம். தயாரிப்பு விலைகளிலிருந்து பல நூறு மடங்கு வரை அதிகபட்ச விலை (M.R.P) வைத்து நோயாளி தலையில் கட்டுகிறது. நோயாளியும் தன் உயிர் பாதுகாப்பிற்காகவும், நலனிற்காகவும் தன் உடமைகளையெல்லாம் விற்று அதில் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு வாங்கிச் செல்ல வேண்டியுள்ளது. வேறு வழியில்லை!
2. மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பரிந்துரை செய்திட மருத்துவர்களுக்கு அன்பளிப்பு, உபசரிப்பு என்கின்ற தரக் குறைவான யுக்திகளை கையாளுகின்றது.
உதாரணம்: குடல் புண்ணிற்கான ராணிடின் மருந்து தயாரிக்கும் மருந்து நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் 2.33 கோடி ரூபாய் செலவு செய்து 466 மருத்துவர்களை துபாய்க்கு உல்லாச பயணம் ஏற்பாடு செய்திருக்கின்றது. அதேபோன்று எனும், அல்சர் மாத்திரையை பரிந்துரைத்திட மருத்துவர்களுக்கு சராசரியாக ரூ. 1.50 லட்சம் செலவு செய்துள்ளது. அது மட்டுமல்ல, தங்க நாணயங்கள், வெள்ளிக் காசுகள், தொலை காட்சிப் பெட்டிகள், விலை உயர்ந்த ப்ளாக் பெர்ரி செல்போன்கள் என அள்ளிவீசியுள்ளது.
மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் பணம் அனைத்தும் இறுதியாக நோயாளிகளின் தலையில் தான் விழுகின்றது. குறிப்பாக உயிர்காக்கும் மருந்தான மெரோபனம் எனும் மருந்தின் அதிகபட்ச விலை ரூ. 2300. இது மருத்துவர்களுக்கு அல்லது மருந்துக் கடைக்கு ரூ.470க்கு கொடுக்கப்படுகின்றது. ஆக மருத்துவர்களுக்கு ரூ. 1830 லாபமாக கிடைத்துள்ளது. இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.
இது ஒரு பக்கம் இருக்க, புதிய மருந்துகள் அறிமுகம் என்கின்ற பெயரால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய நாட்டையும் இந்திய மக்களையும் சோதனைக்களமாக மாற்றி, கடந்த 2008-10 வரை 1660 அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது. இதில் பெரும் பாலானோர் மலை வாழ் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் முறையற்ற சோதனையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதித்துள்ளது. அதாவது தடாலில் எனும் மருந்து ஆண்களுக்கு அவர்களின் புணர்ச்சியை ஊக்குவிக்கும் மருந்தாகும். இதை ஒரு மருந்து நிறுவனம் இரத்த அழுத்த நோய்க்காக அப்பாவி மக்களிடம் அவர்களுக்கே தெரியாமல் சோதனை செய்தது. இதில் பலர் மடிந்துள்ளனர். இந்த கோர நிகழ்ச்சிக்கு காரணமான மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை. இது தொடர்கதையாக இருக்கிறது.
இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அதே நிறுவனங்கள் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டு சட்டத்தில் உள்ள உரிமைகள், சலுகைகள், சமூக பாதுகாப்பு போன்றவைகளை அளிப்பதே இல்லை.
குறிப்பாக “பிகாசில்ஸ்”(Becosule) எனும் சத்து மாத்திரை தயாரிக்கும் பைசா(Pfizer) எனும் அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தனது நிறுவனத்தில் தொழிலாளர்களும், மருந்து விற்பனை பிரதி நிதிகளும் இல்லை என்று தொழிலாளர் ஆணையரிடம் தெரிவித்துள்ளது. ஆனால் தொழிலாளர் அலுவலர் அவர்கள், தனது விசாரணை அறிக்கை யில் 1985 தொழிலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள்(Medical Rep) பணிபுரிகின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஆக, இந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கான சலுகைகள், சட்ட உரிமைகளை மறுத்து, இதுநாள்வரை இந்தியாவில் வியாபாரம் செய்து பல ஆயிரக்கணக்கான கோடிகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்படி ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மருந்து நிறுவனங்கள் இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் இந்தியாவில் இருக்கின்றன. இதற்கு முடிவு கட்டிடவும், மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைத்திடவும், விலை நிர்ணயப் பட்டியலில் அனைத்து மருந்துகளும் கொண்டுவர வேண்டுமெனில், மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திடவேண்டும்.
மருந்து நிறுவனங்களின் வானளாவிய லாபத்தை குறைத்திட சட்டம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு மருந்துகளின் அதிகபட்ச விலைகளை நிர்ணயிக்க அவசரச் சட்டம் இயற்றிட வேண்டும். அந்த சட்டங் களை அமல் படுத்திடாத நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக மருந்து தயாரிப்பு, விநியோகத்தை ஊக்கப்படுத்திட வேண்டும். இதற்கான போராட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் ஆதரவு தரவேண்டும்
கியூபாவின் உண்மைகள்
புரட்சிகர பூமியாம் சோசலிச கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள் பற்றி நாம் அறிவோம். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஆதரவு முதலாளித் துவ ஊடகங்கள் கியூபாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தி வரும் ஊடகத்தடை நாம் அதிகம் அறியாதது.
சமீப நாட்களாக கியூபாவுக்கு எதிராக உலக ஊடகங்களில் ஒரு திட்டமிட்ட அவதூறுச் செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. அந்தச் செய்தி கியூபாவை ஒரு பிசாசைப்போல வர்ணிக்கிறது. கியூபாவில் மனிதஉரிமை காலில்போட்டு நசுக்கப்படுவதாகக் கதைக்கிறது. கியூபாவில் சிறைக் கைதி ஒருவர் இறந்துபோனது குறித்தே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.
கடந்த நான்காண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இறந்துபோனது உண்மைதான். தனது மனைவியை பொது இடத்தில் மிகக்கொடூரமான முறையில் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காகவும், அவரை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினர் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில், அவருக்கு ஏற்கெனவே இருந்த உடல்நலக் குறைபாடுகளின் தொடர்ச்சியாக மூச்சுக்குழலில் தொற்று ஏற்பட்டு அனைத்து உறுப்புகளும் செயலிழந்தன. உலகிற்கே மருத்துவச் சேவை அளிக்கும் கியூபா, தனது நாட்டிலுள்ள இயல்பான குடிமக்களைப் போலவே சிறைவாசிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச மருத்துவ சிகிச்சையை அவருக்கு அளித்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கியூபாவின் மிகப்பெரிய மருத்துவமனையான சாண்டியாகோ டி கியூபா மருத்துவமனையில் காலமானார்.
இந்தச் செய்தியைத்தான், உண்மைகளை மறைத்துவிட்டு உலகெங்கிலும் எடுத்துச் செல்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஸ்பெயின், மற்றொருபுறம் சிலி என எதேச்சதிகார – ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியாளர்கள் இந்த செய்தியை கையில் வைத்துக் கொண்டு கியூபாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகிறார்கள்.
கியூபாவில் சிறையில் இதுவரை கைதிகள் எவரும் இறந்ததில்லை. மிகக்கொடூரமான முறையில் எவரும் கொல்லப்படவில்லை. மரண தண்ட னைக் குற்றங்களே அங்கு நடக்கவில் லை. அப்படிப்பட்ட அற்புதத்தேசத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் ஸ்பெ யின் ஆட்சியாளர்களுக்கும் சிலி ஆட் சியாளர்களுக்கும் ஏராளமான கேள்விக் கணைகள் காத்திருக்கின்றன.
ஸ்பெயின் மட்டுமின்றி, கியூபாவை திட்டித் தீர்க்கும் ஐரோப்பிய கூட்டாளி களின் ‘மிகவும் நாகரிகமான’ அரசுகள், தங்களது நாடுகளில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மகத்தான தொழிலா ளர் இயக்கங்களின் மீது, முன்னெப் போதையும் விட கொடூரமான தாக்கு தலை கட்டவிழ்த்துவிட்டிருக்கின் றனவே, ஏன்?
ஸ்பெயின் நாட்டுச் சிறைகள் நிரம்பி வழிகின்றன. அத்தனை பேரும் அந் நாட்டிற்கு வேலை தேடி ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்த அப்பாவிகள். கடந்தாண்டு ஜூலை மாதம் டெரூயல் எனும் நகரில் அமைந்துள்ள சிறைக் கொட்டடியில், ஒரு சாதாரண சிறைவாசி பல மாத காலம் பட்டினிப்போராட்டம் நடத்தி இறந்துபோனார். எப்படி? அவர் மொராக்கோ நாட்டிலிருந்து பிழைப்பு தேடி இங்கு வந்தவர். எந்தக்குற்றமும் செய்யாததற்காக கைது செய்யப்பட்டார். தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபிப் பதற்காகவே பட்டினி கிடந்து உயிர் நீத்தார். அவரது கதறலை ஸ்பானிய அதிகாரிகள் ஏறெடுத்துக்கூட பார்க்க வில்லை.
சிலி நாட்டில் சர்வாதிகாரி பினோ செட்டின் கையாட்கள்தான் ஆட்சியிலிருக்கிறார்கள். சமீபத்தில் பள்ளிப் பாடப் புத்தகங்களில் கொடூங்கோலன் பினோசெட் பற்றி புகழ்பாடும் பாடம் இடம் பெற்றதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியமாணவர்கள் மீது கொடிய அடக்குமுறை ஏவப்பட்டது. பலர் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டம் பாய்ந்ததே?
அமெரிக்க ஆட்சியாளர்களோ மிகவும் ‘நல்லவர்கள்’.
கியூபாவின் மனித உரிமையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
உலகிலேயே மிகமிக மோசமான முறையில் மனித உரிமை களைப் பராமரிக்கிற ஒருநாடு இருக்கிறதென்றால், அது அமெரிக்காவே என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலே பளிச்சென்று சொல்லியிருக்கிறது. இந்த நாட்டின் பெண்கள் மிடுக்கான உடைகள் உடுத்தலாம்; ஆனால் ஆணுக்கு நிகரான உரிமைகள் இல்லாதவர்கள். இன ரீதியான, மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்க மாகாணங்களில் ஏராளம் ஏராளம் உதாரணங்கள் மறைந்திருக்கின்றன. சிறைகள் சித்ரவதைக்கூடங்கள். இந்த நாட்டின் நீதித்துறை அடிக்கடி ‘தவறான’ தீர்ப்புகளையே வழங்கும். நீதித்துறையின் ‘தவறுகளில்’ சிக்கியவர்களுக்கு மரண தண்டனை உறுதி. உலகிலேயே சின்னஞ்சிறுவர்களையும் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களையும் கூட தூக்கிலேற்றிய பெருமைக்குரியது அமெரிக்க அரசு.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 90 சிறை வாசிகளை தூக்கில்போட்டு கொன்றிருக்கிறது அமெரிக்க நிர்வாகம். இன்னும் 3 ஆயிரத்து 220 பேருக்கு மரணக்கயிறு காத்திருக்கிறது.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கலிபோர்னியாவில் உள்ள மிகப் பெரும் சிறை ஒன்றில் அனைத்துக் கைதிகளும் ஒட்டுமொத்த மாகப் பட்டினிப்போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் ஏவப்பட்டது. மூன்றுபேர் அடி வாங்கியே செத்துப்போனார்கள்.
உள்நாடு மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான், லிபியா உள்பட பல்வேறு நாடுகளில் அமெரிக்கா கொன்று குவித்த உயிர்கள் ஏராளம் ஏராளம்.
ஆனால், பேரிடர்களின் போது மட்டுமின்றி, இயல்பான காலங் களிலும் கூட பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மருத்துவர் களை சேவைக்காக அனுப்பி, லட்சக்கணக்கான உயிர்களை பாது காத்துக் கொண்டிருக்கிற மகத்தான வரலாறு படைத்தது சோசலிச கியூபா.
முதலாளித்துவ ஊடகங்கள் உரைக்க மறுக்கிற உண்மை இது
‘பல்கலைக்கழகங்களைக் கைப்பற்றுவோம்’ அமெ. மாணவர்கள் போராட்டம்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒருபகுதியாக அந்நாட்டு மாணவர்களும் தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடத்தும் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் கல்விக்கான பட்ஜெட்டில் வெட்களுக்கான முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். நவம்பர் 28 அன்று முழுமையான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து மாணவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரவை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர்.
உயர்கல்வி பற்றிய அரசின் அணுகுமுறை அத்துறையை சீரழித்துவிடும் என்றும், மக்களின் போராட்டங்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையைக் கண்டிக்கிறோம் என்றும் அந்தப் பேரவையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களும் அன்றைய தினம் இயங்காது என்று மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
மாணவர்கள் அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கும் நவம்பர் 28 அன்று தான், பட்ஜெட்டில் கடுமையான வெட்டுகளை மேற்கொள்வது பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழக நிர்வாகிகள் கூடிப் பேசுகிறார்கள். மாணவர்களின் கல்விக்கட்டணமும் அதே நாளில் கடுமையாக ஏற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்மொழிவுகளை மாணவர்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள் என்பதை வேலை நிறுத்தம் காட்டும் என்பது மாணவர் அமைப்புகளின் கருத்தாகும்.
போராடும் மாணவர்கள் மீது மிளகுத்தூளைத் தூவியதற்கும் அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. அந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் இரண்டு காவல்துறை அதிகாரிகள் நிர்வாக ரீதியான விடுப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
உண்மை-பணக்காரர்களுக்கு 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் வரி சலுகை
பெட்ரோலின் விலையை மீண்டும் உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமைகளைத் திணித்திருப்பதை நியாயப்படுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார். ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அதே சமயத்தில் கேன்ஸ் நகரிலிருந்துதான் இவ்வாறு அவர்
பேசியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ‘‘பல பண்டங்களின்’’ விலைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் நீக்க வேண்டியதன் தேவை இருப்பதாகவும் அப்போது அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்பட இருக்கின்றன என்பதை
இதன்மூலம் அவர் மிகவும் அழுத்தமாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆயினும் எதார்த்த நிலைமை என்ன? 2010-11ஆம் ஆண்டு பொருளாதார சர்வே என்ன கூறியிருக்கிறது? தனியார் இறுதி நுகர்வு செலவினத்தின் வளர்ச்சி விகிதம் 2005-06ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடாக வீழ்ச்சி
அடைந்திருக்கிறது. மக்கள் எங்கே வளமாக வாழ்கிறார்கள், பிரதமர் அவர்களே?
பிரதமர் நாடு திரும்பிய பின்னர், தன் னுடைய கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரசின் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான பாசாங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திரிணாமுல் காங்கிரசின் மிரட்டலுக்கு
அடிபணியாமல், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலைகளை மீண்டும் குறைக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்ல, இவ்வாறு பெட்ரோல் விலையை உயர்த்துவதற்காக நடை பெற்ற அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் பங்கேற்றதையும் அவர்களின் ஒப்புதலுடன்தான் இவ்வாறு மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டன என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார்.
எப்படி இருந்தபோதிலும், மக்களின் மீது சுமைகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருப்பதை ஏற்க முடியாது. பெட்ரோல் பணக்காரர்களால்தான் பயன்படுத்தப்படுகிறது என்ப தெல்லாம் பழங்கதை. இப்போது கீழ்நிலை மத்தியதர வர்க்கத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலை வாங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். உண்மையில், பெட்ரோலை வாங்குவதில் அதிகமானவர்கள் இவர்கள்தான். மேலும், பெட்ரோலின் விலையை உயர்த்துவதன் மூலம் போக்குவரத்து சாதனங்களின் மூலம் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து, பண வீக்கத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திடும்.
உண்மை என்ன தெரியுமா? இவ்வாறு விலைகள் உயர்த்தப்படுவதன் மூலம் அரசின் கஜானா அதிக அளவில் பயனடைகிறது என்பதுதான். ஒவ்வொரு விலை உயர்வின்போதும் கிடைத்திடும் தொகையில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக அரசாங்கத்திற்கு வரிகளாகவும் தீர்வைகளாகவும் சென்றுவிடுகின்றன. இப்போது 2011-12இன் விலைஉயர்வுடன், மத்திய அரசாங்கம் கலால்
தீர்வையாக மட்டும் சுமார் 82 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-11ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்திற்கு பெட்ரோலியத் துறையிலிருந்து, அனைத்து வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாகக் கிடைத்த மொத்த வருவாய்
என்பது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 69 ரூபாயாகும். இதில் சுமார் 30 ரூபாய் வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாயாகச் சென்று விடுகின்றன. இவ்வாறு மக்களின் வயிற்றில் அடித்து அடைந்திடும் வருவாயில் பெரும் பகுதி அரசாங்கத்தைத் தாங்கி நிற்கிறது என்பது தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மக்கள்தான் அரசாங்கத்திற்கு மானியம்
அளித்து வருகிறார்களேயொழிய, அரசாங்கம் மக்களுக்கு மானியம் அளித்திடவில்லை.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும்போதெல்லாம் அவற்றை நியாயப் படுத்தி அரசாங்கத்தின் தரப்பில் இரு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, எண்ணெய் நிறுவனங்கள் ‘‘திரும்பப் பெறுதல்’’ என்ற பெயரில் சர்வதேச விலைகளுடன் ஒப்பிட்டு, ‘‘இழப்புகள்’’ ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு 2010-12இல் மட்டும் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. இது 2010-11ஆம் ஆண்டில் 78 ஆயிரம் கோடிகளாக இருந்தது. இவ்வாறு ‘‘திரும்பப் பெறுதல்’’ என்றால் என்ன? முந்தைய காலங்களில் நம் நாட்டில் இயங்கி வந்த அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர், அவை இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை சர்வதேச விலைகளின் அடிப்படையிலேயே விற்று வந்தன. இது 1976இல் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக நிர்வாக விலை நிர்ணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் உண்மையான விலையும் அதனைச் சுத்திகரிப்பதற்கு ஆகும் செலவும் மதிப்பிடப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நியாயமான லாபமும் சேர்க்கப்பட்டு, அவ்வாறுதான் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
எடுத்துக்காட்டாக, சர்வதேச சந்தையிலிருந்து இந்தியாவால் இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு பேரல் இன்றைய நிலையில் 110 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,280 ரூபாய்) ஆகும். ஒவ்வொரு பேரலிலும் சுமார் 160 லிட்டர் எண்ணெய் இருக்கும். இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட லிட்டருக்கு 32 ரூபாய் என்று வருகிறது. சுத்திகரிப்பு செய்யப்படும் செலவினத்தையும், நியாயமான லாப வரம்பும் சேர்த்து பெட்ரோலின் விலையை நிர்ணயிப்போமானால் அது கிட்டத்தட்ட 40-41 ரூபாய் அளவிற்குத் தான் வரும். ஆனால், அதற்குப்பதிலாக இப் போது நாம் தில்லியில் சுமார் 70 ரூபாய் என்ற அளவிலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்னமும் அதிக விலை கொடுத்தும் பெட்ரோலை வாங்கவேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.
நவீன தாராளமயச் சீர்திருத்தங்களின் காரணமாக புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப் பட்டு, முன்பு இருந்ததுபோல சர்வதேச விலைகளுக்கு ஈடாக விலைகள் நிர்ணயம் செய்யும் முறையை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பொருள், பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு
விலைகள் சர்வதேச விலைகளால் தீர்மானிக்கப்படும். இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவினங்கள் பற்றி அது பொருட்படுத்துவதில்லை. திரும்பப் பெறுதலின் கீழ் என்பது இறக்குமதி சரிசமநிலை விலைக்கும், பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். இவ்வாறு, சர்வதேச விலையுடன் நம் நாட்டின் விலையை ஒப்பிட்டு, ஒரு கற்பனையான இழப்பு தீர்மானிக்கப்படுகிறதே தவிர, உள்நாட்டில் அதனை உற்பத்திச் செய்வதற்கு ஆகும் செலவினத்தை வைத்து அல்ல. இந்தக் கற்பனையான இழப்புகளைத்தான் நவீன தாராளமய சீர்திருத்தவாதிகள் ‘‘எண் ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டதாக’’ கூப்பாடு போடுகிறார்கள். அவற்றை இங்குள்ள கார்ப்பரேட் ஊடகங்களும் தூக்கிப்பிடிக்கின்றன.
எதார்த்தத்தில் நம் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் நட்டத்தில் இயங்கிடவில்லை. 2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இதுவல்லாமல், இந்தியன் ஆயில் கம்பெனி சேமிப்பு வருவாய் உபரித் தொகை 49 ஆயிரத்து 472 கோடி ரூபாயை வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் – டிசம்பரில், மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனும், பாரத் பெட் ரோலியம் கார்பரேஷனும் முறையே 544 கோடி ரூபாயும், 834 கோடி ரூபாயும் இலாபம் ஈட்டியிருக்கின்றன. மக்கள் மீது பாரத்தை ஏற்றுவதற்கு கற்பனைக் கதைகளைக் கட்டிவிடாதீர்கள், பிரதமர் அவர்களே.
பிரதமர் அவர்களால் கட்டவிழ்த்து விடப் பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படக்கூடிய இரண்டாவது வாதம்,
நிதிப்பற்றாக்குறை என்பதாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காட்டின் பட்ஜெட் குறியீட்டு மதிப்பான 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை எய்திட வேண்டுமானால் அரசாங்கம் கடன் வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் கடன் வாங்குவது என்பதை இயற்கையாகவே அது சாமானியர்களின் தலைகளில் விலைகளை உயர்த்துவதன் மூலம் தள்ளி விடுகிறது. கேன்ஸ் நகரில் பேசுகையில், இந்த குறியீட்டை ‘‘மிகவும் ஆழமான முறையில்’’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். ‘‘சில மானியங்களை’’ வெட்டுவதன் மூலம் செலவினக் கட்டுப்பாட்டையும் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பதும் மேற்கொள்ளப்படலாம் என்றும் மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்போது மற்றொரு எதார்த்த நிலையையும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறையில் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் 2008-09இல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 099 கோடி ரூபாயாகும். இது 2009-10இல் 5 லட்சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2010-11ஆம் ஆண் டில் இது 5 லட்சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக
உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 04 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகவும், இருந்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாயாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்ல் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது.
நிதிப் பற்றாக்குறை என்று கூறப்படுகிற 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பிரதமர்
அவர்களே. நியாயமாக வர வேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது. மாறாக வேலைவாய்ப்புகளும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரிவடைந்திருக்கும்.
கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் இவர்கள் அளித்திடும் சலுகைகள் உண்மையிலேயே முதலீட்டை அதிகரித்திடுமா? பொருளாதார அடிப்படைகளின் ஆரோக்கியம் என்பது முக்கியமாக மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தையே சார்ந்திருக்கிறது. பொருளாதார சர்வேயின்படி இது, 2005-06இல் 16.2 விழுக்காடாக இருந் தது, 2010-11இல் 8.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த முதலீட்டு வளர்ச்சி விகிதம்என்பதும் 2005-06இல் 17 விழுக்காடாக இருந்தது, 2008-09இல் -3.9 விழுக்காடாகக்
குறைந்து, 2009-10இல் 12.2 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், விவசாயத்தில் முதலீட்டின் வளர்ச்சி விகிதம் 13.9 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும்.
சர்வதேசநிதி மூலதனத்தை குஷிப்படுத்திடுவதற்காக, நிதித் தாராளமயக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக பட்ஜெட்டில் ஏழு புதிய சட்டமுன் வடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கத்தை இந்நடவடிக்கைகளைத் தொடராத வகையில் இடதுசாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால்தான், தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தத்தின் பேரழிவு உண்டாக்கக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம் நாடு காப்பாற்றப்பட்டது. ஆனால், தற்போது கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி மூல தனத்தை குஷிப்படுத்தும் வகையில் பிரதமர் உரை நிகழ்த்தியிருப்பதன் மூலம், மிகவும் ஆபத்தான சர்வதேச ஊக அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் இந்தியாவை பிரதமர் இட்டுச் சென்றிருக்கிறார். மேலும் தற்போதைய நாட்டின் நிதிப் பற்றாக்குறை விரிவடைவதன் மூலம், பெரிய அளவில் ஊக நிதி வருவதென்பதும் நல்ல அறிகுறியல்ல.
நாட்டு மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும், நம் உள்நாட்டுச் சந்தையை விரி வாக்கிடக்கூடிய வகையில் நம் வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங்களை நாமும் இந்தியாவில் உக்கிரப்படுத்திட வேண்டும்.
பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்
பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி யென்றால் உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும்
இல்லை.
2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. தற்போது(5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்கு மான வித்தியாசம்?
எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?
பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன்
படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009-10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால்
மத்தியஅரசு எப்படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்துகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங்கியுள்ள வரியினங்கள் வருமாறு
(24.8.2011)
ஆதார விலை – ரூ. 24.23
சுங்கத்தீர்வை – ரூ.14.35
கல்விவரி – ரூ. 0.43
விற்பனையாளர் கமிஷன் – ரூ.1.05
சுத்திகரிப்பு செலவு – ரூ 0.52
சுத்திகரிப்பு விலையின்
மூலதனச்செலவு – ரூ. 6.00
மதிப்புக்கூட்டு வரி – ரூ. 5.50
கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10
பெட்ரோல் சுங்கவரி – ரூ. 1. 54
சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00
மொத்தம் – ரூ. 60.72
இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படுகின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாப கணக்கே… தனி.
அரசுக்கு நஷ்டமா?
பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 – 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.
இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட்களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும்.
மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி.
ஆனால் இதே காலத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயிரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம் தான் மானியமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றனவா?
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய்வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த்தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவாலியா வகையறாவின் வருத்தம் புரியும்.
2008ம் ஆண்டில்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ.2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை
அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்ய துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம்.
2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் (2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள்
ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.
ஆண்டு நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம் (கோடியில்)
ஐஒசி (IOC) 5294 .00 – 832.27 – 6126.27
எச்பிசிஎல்(HPCL) 2142 – 22 90.90 – 2233.12
பிபிசிஎல் 2142 – 22 198.00 – 2340.22
உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.
ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?
2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன்
இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?. இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து
வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட் ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் காரணம்
இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அதனையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.
இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை
கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.
அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன்மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.
இது யாருக்கான அரசு?
எப்போது பார்த்தாலும் விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும்.
மின்சாரதிற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ் அரசு குறியாக இருந்து வருகிறது.
ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடியை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடிரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் அளித்திருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்துமுறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்
கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்! – சமஸ்
வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’ வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது. அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்றவர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங்களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது!
அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத்தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட் டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுகளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சத விகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது. கடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.
அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர்புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.
அப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. அமெரிக்கப்பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.
பொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத்
தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின் டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு…
கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!
‘முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதியத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.
உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட்டங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப்
போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.
முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.
நன்றி : ஜூனியர் விகடன்
(23.10.2011)
இதுதான் அமெரிக்கா
மனித உரிமை குறித்து உலக நாடுகளுக்கு வாய் கிழிய வகுப்பெடுக்குகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஆனால் பிற நாட்டு மக்களை புழுக்களாய், புன்மைப் பூச்சிகளாய் கருதுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவை தாஜா செய்ய எந்த அளவுக்கும் இறங்குகிறது. ஆனால், இந்திய மக்கள் என்றாலே அமெரிக்க நிர்வாகத்திற்கு இளக்காரம்தான்.
இதற்கு சமீபத்திய உதாரணம்தான் அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கணுக்காலில் கண்காணிப்புக் கருவியை பொருத்தி இழிவு படுத்தியுள்ள நிகழ்வாகும். அமெரிக்காவில் படிக்கலாம் என்று ஆசைகாட்டி விளம்பரங்கள் இந்தியாவில் செய்யப்படுகின்றன. இதை நம்பி அமெரிக்கா செல்லும் பல மாணவர்கள் ஏமாறுகின்றனர்.
கலிபோர்னியாவில் உள்ள டிரை-வேலி பல்கலைக்கழகத்தில் அமெரிக்கப் போலீசார் சோதனை நடத்தியபோது அங்குள்ள மாணவர்களுக்கு போலி விசா வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். இதற்கு எந்தவகையிலும் மாணவர்கள் பொறுப்பல்ல. போலி ஏஜெண்டுகளால் இவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 1,555 பேர் இவ்வாறு போலி விசாவில் படித்து வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. நியாய உணர்ச்சியின் அடிப்படையில் அந்த மாணவர்கள் பயில மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அமெரிக்க நிர்வாகம், மாணவர்களை ஒரு முகாமில் அடைத்து சித்ரவதை செய்து வருகிறது. உச்ச கட்டக் கொடுமையாக மாணவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க கணுக்காலில் நிர்ப்பந்தமாக கண்காணிப்புக் கருவி பொருத்தியுள்ளனர். பெருந்தொகை கொடுத்தவர்களை ஜாமீனில் விடுவித்துவிட்டு, முடியாதவர்களை இவ்வாறு கொடுமைப்படுத்துகின்றனர்.
அமெரிக்காவில் பயிலச்சென்ற இந்திய மாணவர்கள் மட்டுமின்றி தலைவர்களும் கூட அவமானத்திலிருந்து தப்புவதில்லை. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் துவங்கி, முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், திரைக்கலைஞர்கள் கமல்ஹாசன், ஷாருக்கான், மம்முட்டி போன்றவர்களும் அமெரிக்க விமான நிலையங்களில் சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரும் கூட இவ்வாறு இழிவுபடுத்தப்பட்டார்.
வழக்கம்போல இந்திய அயல்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய மாணவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளதை கண்டிப்பதாக கூறியுள்ளார். ஆனால் இது போதாது. கடுமையான வார்த்தைகளால் அமெரிக்க அதிகாரிகளின் இழிசெயலை கண்டிக்க வேண்டும். அமெரிக்க தூதரை அழைத்து இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் மற்றும் கல்வி கிடைத்திட உரிய ஏற்பாடுகளை இந்திய அரசு செய்ய வேண்டும்.
இந்தியாவில் அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு இத்தகைய இழிவு ஏற்பட்டிருந்தால் அமெரிக்கா எந்த அளவுக்கு கோபமடைந்திருக்குமோ அதே கோபத்தை இப்போது இந்தியாவின் சார்பில் வெளிப்படுத்த வேண்டும். முதலில் இந்தியா என்பது அமெரிக்காவின் காலனி நாடு அல்ல என்ற உணர்வு ஆட்சியாளர்களுக்கு வர வேண்டும்.
பிரதமருக்கு எல்லா ஊழலும் தெரியும்
“ஸ்பெக்ட்ரம்’ ஊழல் ஒருபுறம் இருக்கட்டும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்தேறியிருக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த ஊழல்களிலும், முறைகேடுகளிலும் தொடர்புடையவர்கள் பலரும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும், அவரால் தேர்ந்து எடுத்து நியமிக்கப்பட்டவர்களுமாக இருக்கிறார்களே அதுதான் நம்மை எல்லாம் வியப்படையச் செய்கிறது.
இந்திய அரசுப் பணி அதிகாரியாகவும் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்த எம்.எஸ். கில், உணவு மற்றும் விவசாயப் பிரச்னைகளில் தேர்ந்தவர் என்று கருதப்படுபவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடும் நேரத்தில், அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் மாற்றப்பட்டு, அந்தத் துறைக்குச் சம்பந்தமே இல்லாத எம்.எஸ்.கில் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டது ஏன் என்கிற சந்தேகம் அப்போது ஏற்படவில்லை. இப்போது ஏற்படுகிறது.
எம்மார் எம்.ஜி.எஃப் என்றொரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்குத்தான் தில்லி வளர்ச்சிக் குழுமம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட சர்வதேச அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அளித்தது. இந்த நிறுவனம் முன்னாள் ராஜஸ்தான் ஆளுநர் எஸ்.கே.சிங்கின் மகனும், ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகருமான கனிஷ்க் சிங்கின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், உடனடியாகக் கட்டி முடிப்பதற்காக, இந்த நிறுவனத்துககு முறையே | 750 கோடியும், | 827 கோடியும் முன்பணமாக, ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத் தொகைக்கும் அதிகமாக அளிக்கப்பட்டிருக்கிறதே, அது ஏன்? எதற்காக? யாருடைய பரிந்துரையில் அல்லது நிர்பந்தத்தின் பேரில்?
பல்ஜித்சிங் லல்லி என்பவர், எம்.எஸ். கில்லைப் போலவே பஞ்சாபியரான இன்னொரு இந்திய அரசுப்பணி அதிகாரி. மத்திய உள்துறையின் செயலர்களில் ஒருவராக இருந்த பல்ஜித்சிங் லல்லி, பிரதமர் மன்மோகன் சிங்கின் குடும்ப நண்பர். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியும் பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் எதிலும் சிக்கிக் கொள்ளாதவர். இவர் பிரசார் பாரதி குழுமத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். இவரது நேரடிப் பார்வையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெயரில் பிரசார் பாரதி சார்பில் நடந்தேறியிருக்கும் ஊழல், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.
பிரசார் பாரதி குழுமம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவுமான உரிமையை லண்டனைச் சேர்ந்த எஸ்.ஐ.எஸ்.லைவ் என்கிற நிறுவனத்துக்கு | 246 கோடிக்கு வழங்கியது. இந்த ஒப்பந்தப்படி உரிமையை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுப்பதற்கோ அல்லது துணை ஒப்பந்தம் மூலம் வேறு நிறுவனத்தைப் பயன்படுத்தவோ எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு அனுமதி கிடையாது.
ஆனால் நடந்தேறியிருப்பது என்ன தெரியுமா? எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனம் மார்ச் 5, 2010 அன்று பிரசார் பாரதியால் | 246 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே நாளில், “ஜும்’ என்கிற நிறுவனத்தை | 177.30 கோடிக்கு காமன்வெல்த் போட்டிகளை ஒலிபரப்பவும், ஒளிபரப்பவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இடைத்தரகராகச் செயல்பட்டு | 68.70 கோடி லாபம் சம்பாதித்துவிட்டது எஸ்.ஐ.எஸ்.லைவ். பிரசார் பாரதிக்கு மட்டுமல்ல, இந்திய அரசுக்கும் சேர்த்து “ஜும்’ காட்டிவிட்டனர். இதன் பின்னணியில் செயல்பட்டவர் வேறு யாருமல்ல, பிரசார் பாரதியின் செயல் தலைவர் பல்ஜித்சிங் லல்லிதான்.
மத்திய நிதியமைச்சகம், எஸ்.ஐ.எஸ்.லைவ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிப்பதை ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு முறையான பின்னணியோ, சேவை வரி செலுத்திய பதிவு எண்ணோ, முன்அனுபவமோ இல்லை என்று சுட்டிக்காட்டி இருக்கிறது. ஒப்பந்தங்கள் பெறப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த பிறகுதான், 2010 ஜனவரி மாதத்தில் எஸ்.ஐ.எஸ். லைவ் என்கிற நிறுவனமே தொடங்கப்பட்டிருக்கிறது என்று கூறி நிதியமைச்சகம் பிரசார் பாரதியை எச்சரித்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், அவசர அவசரமாக ஒப்பந்தத் தொகையான | 246 கோடியில் 80% உடனடியாக அந்த நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கவும் செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பல்ஜித்சிங் லல்லி!
ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலிலும், முறைகேடுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே ஏதாவது ஒருவகையில் பிரதமர் மன்மோகன் சிங்குடனோ அல்லது காங்கிரஸ் கட்சித் தலைமையுடனோ நெருக்கமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் என்று எல்லோருமே இந்த “மெகா’ கொள்ளையில் தொடர்புடையவர்களாக இருப்பதால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாடி பலிகடா ஆக்கப்பட்டு, பிரச்னையை மூடிமறைக்கும் முயற்சி நடக்கிறதோ என்று தோன்றுகிறது.
பிரதமர் ஏன் இத்தனை நாளாக மௌனம் சாதித்தார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அவரால் பதில் சொல்ல முடியாததுதான் காரணம் என்று நம்ப வழியில்லை. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று சொல்வார்கள். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்கக் கூடுமா என்ன?
சமீபத்தில் பதவி விலகி இருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவின் கூற்றுப்படி – “”பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாமே நடந்தது!”