RSS

Category Archives: அரசியல்

பெட்ரோல் மத்திய அரசின் பெட்ரோல் பொய் கணக்கு


கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 12 முறைக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால் அடுத்தடுத்து விலை உயர்வு இருக்கும் என்றே தெரிகிறது. அதனால் வரிகள், அரசு நிறுவனங்களின் லாப ஈட்டுத்தொகை என அரசு கஜானாவில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது.

இதில் மக்களின் நிலைமை வேடிக்கையானது. விலை உயர்வு அறிவிக்கப்பட்டவுடன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். எல்லாம் சில நாள்கள்தான். அதற்குள் இன்னொரு விலை அறிவிப்பு பற்றி அரசு பேசத் தொடங்கும். உடனே பெட்ரோல் விலையை உயர்த்தக்கூடாது என்று மக்கள் மத்தியில் ஆவேசம் கிளம்பும். ஆட்சியாளர்கள் எதையும் பொருள்படுத்தமாட்டார்கள். தங்கள் இஷ்டப்படி விலையை உயர்த்துவார்கள். பிறகு இன்னொரு போராட்டம், இன்னொரு விலை ஏற்றம். இதுதான் நம் நாட்டு அப்பாவிகளின் நிலை.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எண்ணெய் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைத்துவிட்டது. அடுத்தடுத்து என்னென்ன பொருள்களையெல்லாம் இப்படி ஒப்படைக்கலாம் என நேரம் பார்த்து வருகிறது.

ஒரு கட்டத்தில் எல்லா பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயத்தையும் எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுத்து விடுவதுதான் அரசின் திட்டம். இதன் பிறகு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படும்.

பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதை அரசு பல்வேறு வகையிலும் நியாயப்படுத்த முயற்சிக்கிறது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம், அரசின் மானியச் சுமை, நிதிப் பற்றாக்குறை என என்னவெல்லாமோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இப்போது அரசுக்குப் புதிய காரணம் கிடைத்திருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துவிட்டதால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருப்பதாக அரசு கூறுகிறது. ரூபாயின் மதிப்புக் குறையைக் குறைய, உள்நாட்டு டீசல், பெட்ரோல் விலையில் பாதிப்பு ஏற்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கூறினார்.

ஒரு டாலருக்கு ஒரு ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும் என்றால், ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். அவரது கணக்குப்படி நாளொன்றுக்கு ரூ.271 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

ஒரு வகையில் பார்த்தால் இது நியாயமானதாகத் தோன்றும். ரூபாயின் மதிப்பு குறைகிறதென்றால், டாலரின் மதிப்பில் கச்சா எண்ணெய்க்கு நாம் கூடுதல் விலை கொடுத்தாக வேண்டும். அதனால் நஷ்டம் ஏற்படுவது உறுதி. இதைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு ஓராண்டின் இறக்குமதிக் கணக்கை எடுத்துக் கொள்வோம்.

2010-11 நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதாரம் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரப் புத்தகத்தில், 1,06,068 டாலர் மதிப்புக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பில் இது 30 சதவீதம். அப்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.45.5. இதைக் கொண்டு கணக்கிட்டால் கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு ரூ.4,82,714 கோடிக்குச் சமம்.

இப்போது ஒரு டாலருக்கு ரூ. 50 என்கிற அளவுக்கு ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது. இந்த மதிப்பைக் கொண்டு 2010-11 நிதியாண்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கணக்கிட்டால் ரூ.5,30,340 கோடி என வரும். அதாவது ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால் கூடுதலாக ரூ.47,626 கோடி செலவாகிறது என்று அர்த்தமாகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் சந்தை விலை மாறாமல் இருந்ததால்தான் இந்தக் கணக்கு சரி. ஆனால், அப்படியிருப்பதில்லை. கச்சா எண்ணெய் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.

2009-10-ம் நிதியாண்டில் 66.76 டாலராக இருந்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இப்போது 111 டாலருக்கு உயர்ந்திருக்கிறது என்பது பெட்ரோலிய அமைச்சரின் கருத்து. ரூபாய் மதிப்பு சரிந்ததன் காரணமாக ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் இந்த விலை உயர்வால் ஏற்படும் நஷ்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும். இதனால்தான் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அரசு கூறிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த விளக்கம் முழுமையானதல்ல. சில உண்மைகள் வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றன. பெட்ரோலியப் பொருள்களை விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படுவதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

ரூபாய் மதிப்பு சரிந்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை மட்டும்தான் அரசு கூறுகிறது. ஆனால் இதில் லாபமும் இருக்கிறது. இறக்குமதியில் நஷ்டம் ஏற்படுகிறதென்றால், ஏற்றுமதியில் லாபம் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் 70 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் பலவகைப் பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் உண்மை. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, 2010-11-ம் நிதியாண்டில் இந்தியா 41,918 கோடி டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இது 16.53 சதவீதம். ரூ.45.5 என்கிற பரிமாற்று மதிப்பில் இது ரூ.1,90,781 கோடிக்குச் சமம். ரூ.50 என்கிற பரிமாற்றுப் மதிப்பில் கணக்கிட்டால் ரூ.2,09,590 கோடி. ஆக, ரூ.18,809 கோடி அதிக லாபம் கிடைக்கும்.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால் ஏற்படும் இழப்பாக அரசு குறிப்பிடும் மதிப்பு வெகுவாகக் குறைந்துவிடும்.

பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் லாபம் அல்லது நஷ்டத்தை நிர்ணயிப்பதில் வேறு சில காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், நஷ்டக் கணக்கு காட்ட வேண்டும் என்பதிலேயே முனைப்புடன் பணியாற்றிக் கொண்டிருப்போர் இதை வசதியாக மறந்துவிடுகின்றனர். உதாரணத்துக்கு நாட்டின் கச்சா எண்ணெய்த் தேவையில் 30 சதவீதம் உள்நாட்டிலேயே கிடைக்கிறது. இதை யாரும் கணக்கில் கொள்வதில்லை.

இவை எல்லாவற்றையும் மதிப்பிட்டால் பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் கொள்ளை லாபம் அடைவதைக் கண்டறிய முடியும்.

இதற்கு முந்தைய பல கட்டுரைகளில் கூறியதைப் போல, எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.

இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வருவாயில் இது 6 சதவீதத்துக்கும் குறைவு. நஷ்டம் ஏற்படுவதாக, அரசும் எண்ணெய் நிறுவனங்களும் ஒப்பாரி வைத்தாலும், அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது என்கிற உண்மையை எந்தப் போர்வைக்குள்ளும் மூடிவிட முடியாது.

இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கு அறிக்கைகள் அமைந்திருக்கின்றன. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2010-11ம் ஆண்டுக்கான அறிக்கையில், அந்த நிறுவனத்துக்கு வரிப்பிடித்தங்கள் போக ரூ.7,445 கோடி லாபம் அடைந்திருப்பதைக் காண முடியும்.

இந்த நிறுவனம் அரசுக்கு லாப ஈவுத் தொகையாக மட்டும் ரூ.39,658 கோடியைக் கொடுத்திருக்கிறது. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.

இவையனைத்தையும் வைத்துப் பார்த்தால், பெட்ரோலிய விற்பனையால் நஷ்டம் ஏற்படுவதாக அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறி வருவது மக்களைத் திசை திருப்பும் முயற்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதன் பிறகும் விலையை ஏற்றுவதற்கே அரசு தருணம் பார்த்துவருகிறதே தவிர, விலையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்கவே இல்லை.

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் பெட்ரோலிய விலை உயர்வுதான். அத்தியாவசியப் பொருள் ஒவ்வொன்றின் விலையிலும் அதன் சரக்குக் கட்டணத்துக்கு குறிப்பிட்ட பங்களிப்பு இருக்கும். அந்த வகையில் பெட்ரோலிய விலையை உயர்த்தினால், பொருள்களின் விலை உயரும். அதுவே பணவீக்கம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமையும்.

இந்த ஒரேயொரு காரணத்துக்காகவாவது பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவது பற்றி அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் அரசின் செவிகளை அது எட்டவில்லை.

நாட்டு மக்களின் நலன் ஒன்றே குறிக்கோள் என முழங்கிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, உண்மையிலேயே அந்த அக்கறை இருக்குமானால், பெட்ரோலியக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். எல்லாவற்றிலும் லாபம் பார்த்துவிட வேண்டும் என்கிற வியாபார மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் முடியாதென்றால், லாபத்தை பையில் போட்டுக் கொண்டு, நஷ்டம் ஏற்படுகிறது என்று போலியாகப் புலம்புவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். பாவம் மக்கள்!

நன்றி: தினமணி பி.எஸ்.எம். ராவ்

 

குறிச்சொற்கள்:

கியூபாவின் உண்மைகள்


புரட்சிகர பூமியாம் சோசலிச கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள் பற்றி நாம் அறிவோம். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஆதரவு முதலாளித் துவ ஊடகங்கள் கியூபாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தி வரும் ஊடகத்தடை நாம் அதிகம் அறியாதது.

சமீப நாட்களாக கியூபாவுக்கு எதிராக உலக ஊடகங்களில் ஒரு திட்டமிட்ட அவதூறுச் செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. அந்தச் செய்தி கியூபாவை ஒரு பிசாசைப்போல வர்ணிக்கிறது. கியூபாவில் மனிதஉரிமை காலில்போட்டு நசுக்கப்படுவதாகக் கதைக்கிறது. கியூபாவில் சிறைக் கைதி ஒருவர் இறந்துபோனது குறித்தே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.

கடந்த நான்காண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இறந்துபோனது உண்மைதான். தனது மனைவியை பொது இடத்தில் மிகக்கொடூரமான முறையில் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காகவும், அவரை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினர் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில், அவருக்கு ஏற்கெனவே இருந்த உடல்நலக் குறைபாடுகளின் தொடர்ச்சியாக மூச்சுக்குழலில் தொற்று ஏற்பட்டு அனைத்து உறுப்புகளும் செயலிழந்தன. உலகிற்கே மருத்துவச் சேவை அளிக்கும் கியூபா, தனது நாட்டிலுள்ள இயல்பான குடிமக்களைப் போலவே சிறைவாசிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச மருத்துவ சிகிச்சையை அவருக்கு அளித்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கியூபாவின் மிகப்பெரிய மருத்துவமனையான சாண்டியாகோ டி கியூபா மருத்துவமனையில் காலமானார்.

இந்தச் செய்தியைத்தான், உண்மைகளை மறைத்துவிட்டு உலகெங்கிலும் எடுத்துச் செல்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஸ்பெயின், மற்றொருபுறம் சிலி என எதேச்சதிகார – ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியாளர்கள் இந்த செய்தியை கையில் வைத்துக் கொண்டு கியூபாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகிறார்கள்.

கியூபாவில் சிறையில் இதுவரை கைதிகள் எவரும் இறந்ததில்லை. மிகக்கொடூரமான முறையில் எவரும் கொல்லப்படவில்லை. மரண தண்ட னைக் குற்றங்களே அங்கு நடக்கவில் லை. அப்படிப்பட்ட அற்புதத்தேசத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் ஸ்பெ யின் ஆட்சியாளர்களுக்கும் சிலி ஆட் சியாளர்களுக்கும் ஏராளமான கேள்விக் கணைகள் காத்திருக்கின்றன.

ஸ்பெயின் மட்டுமின்றி, கியூபாவை திட்டித் தீர்க்கும் ஐரோப்பிய கூட்டாளி களின் ‘மிகவும் நாகரிகமான’ அரசுகள், தங்களது நாடுகளில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மகத்தான தொழிலா ளர் இயக்கங்களின் மீது, முன்னெப் போதையும் விட கொடூரமான தாக்கு தலை கட்டவிழ்த்துவிட்டிருக்கின் றனவே, ஏன்?

ஸ்பெயின் நாட்டுச் சிறைகள் நிரம்பி வழிகின்றன. அத்தனை பேரும் அந் நாட்டிற்கு வேலை தேடி ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்த அப்பாவிகள். கடந்தாண்டு ஜூலை மாதம் டெரூயல் எனும் நகரில் அமைந்துள்ள சிறைக் கொட்டடியில், ஒரு சாதாரண சிறைவாசி பல மாத காலம் பட்டினிப்போராட்டம் நடத்தி இறந்துபோனார். எப்படி? அவர் மொராக்கோ நாட்டிலிருந்து பிழைப்பு தேடி இங்கு வந்தவர். எந்தக்குற்றமும் செய்யாததற்காக கைது செய்யப்பட்டார். தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபிப் பதற்காகவே பட்டினி கிடந்து உயிர் நீத்தார். அவரது கதறலை ஸ்பானிய அதிகாரிகள் ஏறெடுத்துக்கூட பார்க்க வில்லை.

சிலி நாட்டில் சர்வாதிகாரி பினோ செட்டின் கையாட்கள்தான் ஆட்சியிலிருக்கிறார்கள். சமீபத்தில் பள்ளிப் பாடப் புத்தகங்களில் கொடூங்கோலன் பினோசெட் பற்றி புகழ்பாடும் பாடம் இடம் பெற்றதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியமாணவர்கள் மீது கொடிய அடக்குமுறை ஏவப்பட்டது. பலர் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டம் பாய்ந்ததே?

அமெரிக்க ஆட்சியாளர்களோ மிகவும் ‘நல்லவர்கள்’.

கியூபாவின் மனித உரிமையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

உலகிலேயே மிகமிக மோசமான முறையில் மனித உரிமை களைப் பராமரிக்கிற ஒருநாடு இருக்கிறதென்றால், அது அமெரிக்காவே என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலே பளிச்சென்று சொல்லியிருக்கிறது. இந்த நாட்டின் பெண்கள் மிடுக்கான உடைகள் உடுத்தலாம்; ஆனால் ஆணுக்கு நிகரான உரிமைகள் இல்லாதவர்கள். இன ரீதியான, மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்க மாகாணங்களில் ஏராளம் ஏராளம் உதாரணங்கள் மறைந்திருக்கின்றன. சிறைகள் சித்ரவதைக்கூடங்கள். இந்த நாட்டின் நீதித்துறை அடிக்கடி ‘தவறான’ தீர்ப்புகளையே வழங்கும். நீதித்துறையின் ‘தவறுகளில்’ சிக்கியவர்களுக்கு மரண தண்டனை உறுதி. உலகிலேயே சின்னஞ்சிறுவர்களையும் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களையும் கூட தூக்கிலேற்றிய பெருமைக்குரியது அமெரிக்க அரசு.

2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 90 சிறை வாசிகளை தூக்கில்போட்டு கொன்றிருக்கிறது அமெரிக்க நிர்வாகம். இன்னும் 3 ஆயிரத்து 220 பேருக்கு மரணக்கயிறு காத்திருக்கிறது.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கலிபோர்னியாவில் உள்ள மிகப் பெரும் சிறை ஒன்றில் அனைத்துக் கைதிகளும் ஒட்டுமொத்த மாகப் பட்டினிப்போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் ஏவப்பட்டது. மூன்றுபேர் அடி வாங்கியே செத்துப்போனார்கள்.

உள்நாடு மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான், லிபியா உள்பட பல்வேறு நாடுகளில் அமெரிக்கா கொன்று குவித்த உயிர்கள் ஏராளம் ஏராளம்.

ஆனால், பேரிடர்களின் போது மட்டுமின்றி, இயல்பான காலங் களிலும் கூட பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மருத்துவர் களை சேவைக்காக அனுப்பி, லட்சக்கணக்கான உயிர்களை பாது காத்துக் கொண்டிருக்கிற மகத்தான வரலாறு படைத்தது சோசலிச கியூபா.

முதலாளித்துவ ஊடகங்கள் உரைக்க மறுக்கிற உண்மை இது

 
1 பின்னூட்டம்

Posted by மேல் ஜனவரி 30, 2012 in அரசியல், டாலர்

 

குறிச்சொற்கள்:

மின்வாரியத்தைக் காப்பாற்றும் வழி


தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான நட்டத்தில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது என்றும், அதிலிருந்து மின்வாரியத்தை மீட்க வேண்டுமென்றால் மின்சாரக் கட்டணத்தை கட்டாயம் உயர்த்தியே ஆக வேண்டும் என்றும் அதைத்தவிர அரசுக்கு எந்த மாற்று வழியும் இல்லாததால் மக்கள் இந்தக் கட்டண உயர்வை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நம் முதல்வர்!
முதல்வரின் இந்த வாதத்தில் உண்மை உள்ளதா? “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற குறளை மனப்பாடமாக ஒப்பித்து, அதன்படி அரசாங்கத்தை நடத்துவதாக பெருமை கொள்ளும் தமிழக அரசாட்சியாளர்கள் அதன்படி மின்சாரப் பகிர்மானத்தின் மூலம் ஈட்டிய பொருளை சரிவர சேமித்து செயல்பட்டார் களா? அப்படிச் செயல்பட்ட பின்னரும் நட்டம் ஏற்பட்டு மின்வாரியம் இந்நிலைக்கு தள்ளப்பட்டதா? இவைகளுக்கெல்லாம் பதில் இல்லை என்ற ஒற்றைச் சொல்தான்! பிழை பட்ட நிர்வாக முறைகளால் ஏற்பட்ட நடை முறை நட்டங்களை ஈடுகட்டிட மிகுதியாகக் கடன் வாங்கப்பட்டது என்பதே உண்மையாகும். அது இன்று வீங்கிப் பெருத்து மின் வாரியத்தையே விழுங்க நிற்கிறது.
கடந்த 2001 ம் ஆண்டில் இதே முதல்வர் தலைமையில் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தவுடன் அப்போதைய தமிழகப் பொருளாதார நிலை குறித்த ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் 3589 கோடி ரூபாய் நட்டத்தில் உள் ளது என்றும், இதை சமாளித்திட மின்கட்டண உயர்வு அவசியம் என்றும், 7 தனியார் மின்உற்பத்தி நிலையங்களிடம் மின்சாரம் வாங்குவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்திட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டது. ஆனால் அந்த ஆலோசனைகள் எதுவும் அவர்களின் ஆட்சிக்காலம் முடியும் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்தின் மின்தொகுப்பின் மொத்த மின்விநியோகத்தில் 25 சதவீதம் விவசாயத்திற்கும், 18 சதவீதம் தொழில்நுட்ப ரீதியிலான கம்பியிழப்பிற்கும் சென்று விடுகிறது. மீத முள்ள 57 சதவீதம் மின்சக்திதான் விலைக்கு விற்கும் மின்சாரம் ஆகும்.  வீடுகளுக்கு அளிக்கப்படும் மானிய விலையிலான மின்சாரத்தால் ஏற்படுகிற இழப்பு, தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாட்டாளர்களுக்கு அளிக்கப்படும் மின்சாரத்திற்கு சற்று கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பதின் வாயிலாக ஈடுகட்டப்பட்டு வந்தது.  இதுதான் குறுக்கு மானியம் என்றழைக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படக்கூடாது என்ற வாதங்கள் பலமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தைப் பெறாத அப்பிரிவினருக்கு விவசாய உற்பத்திக்கான மின்சாரத்தை இலவசமாக கொடுப்பது அவசியமானதாகும்.  இந்த இலவச மின்சாரத்தால் தான் அரசின் நியாய விலைக்கடைகளில் தரமான அரிசியை மலிவு விலையில் அடித்தட்டு மக்கள் பெறமுடிகிறது.  தரிசாகப் போடப்படக்கூடிய அபாயத்தில் உள்ள பல ஹெக்டேர்களர் நிலங்கள் விளைநிலங்களாக மாறியிருக்கின்றன.  மேலும் இது நாட்டின் உயிர் நாடியான வேளாண்மை குறித்து அரசு கொண்டிருக்கும் அக்கறையில் வந்தடைந்துள்ள கொள்கை முடிவு.  ஆயினும் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடையும் வண்ணம் அதை முறையாக செயல்படுத்துவதும், ஒழுங்குப் படுத்துவதும் அவசியம் ஆகும்.
வரிகளின் மூலமாக அரசு ஈட்டும் வருவாயில் நிதி ஒதுக்கி, அதிலிருந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெற்று வழங்கு வதை விட்டுவிட்டு அந்த இலவச மின்சாரத்திற்கான தொகையினை மின்வாரியத்தின் நிதிச்சுமையாக மாற்றுவது என்ன நியாயம்? தமிழக மின்துறை ஒழுங்குமுறை ஆணையம் தனது அறிக்கையில், விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவதால் ஆண்டு தோறும் மின்வாரியத்திற்கு 5600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று கணக்கிட் டுள்ளது.  ஆனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கும் தொகையோ ஆண்டுக்கு வெறும் ரூ.250 கோடி மட்டுமே!
மின்சார வாரியம் தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள 7 தனியார் மின்நிலையங்களை நாடியது.  2000 ம் ஆண்டு முதல் இந்த தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தின் மொத்த மின் உற் பத்தியில் 9 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்வாரியத்தின் மொத்த வருமானத் தில் 35 சதவீத தொகையை எடுத்துச் சென்றன.  கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் பிள்ளைபெருமாநல்லூர் மின்நிலையம் தனது மின்நிலையத்திற்கான எரிபொருளை மாற்றிக்கொண்டது.  இதனால் இந்த மின்நிலையத்தில் இருந்து ரூ.18.54 க்கு வாங்கப்பட்ட ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை இன்று ரூ.2.30 ஆக குறைந்துள்ளது.  தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் ஆண்டிற்கு 80 கோடி யூனிட் மின்சாரம் வாங்குவதற்கு வாரியம் செலவிடும் தொகை ரூ.8000 கோடி ஆகும். இதே போல கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட மின்பற்றாக்குறையினால் வெளி மாநிலங்களிலிருந்தும் தனியாரிடமிருந்தும் வாங்கிய மின்சாரத்திற்கு செலுத்திய தொகையும் அதிகம்.
1998 ம் ஆண்டுகளில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட மின்நிலையங்களை தனியார் கட்டுமானம் செய்யாமல் கைவிட்ட காரணத்தினால் 2006 ம் ஆண்டில் தமிழக அரசே மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.  தற்கான நிதி ஆதாரங்கள் மின்வாரியத்திடம் இல்லாத காரணத்தினால் மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றது. அதன்மூலம் வட சென்னை, மேட்டூர் அனல் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.  பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கிய கடன்களுக்கு தொடர்ந்து வட்டி செலுத்த வேண்டியுள்ளது.  இன்று மின்சார வாரியம் தான் வாங்கிய கடன்களுக்காக மட்டும் ஆண்டிற்கு ரூ.5000 கோடியை வட்டியாகச் செலுத்தி வருகிறது. மின்வாரியத்திடம் வட்டியை பெறுகின்ற நிறுவனங்கள் அனைத்துமே மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் ஆகும்.
ஆனால் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை தமிழக மின்சார வாரியத்திற்கு மத்திய அரசின் நிறுவனமான கோல் இந்தியா தான் வழங்கி வருகிறது. ஒரிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ரயில்வேத்துறை மூலமாக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.

மத்திய அரசின் மின் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கான மின்சார கட்டணத்தை மத்திய அரசின் மின்உற்பத்தி நிறுவனங்கள் பெற்றுக்கொள்கின்றன. இதிலும் மத்திய அரசு ஒரு வியாபாரியைப் போலத்தான் நடந்து கொள்கிறது. காயம்குளத்தில் இருந்து வழங்கப்படும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.9.40 ஐ விலையாக பெற்றுக் கொள்கிறது. இதன் வழியாக மாநில மின்வாரியங்களின் ஒரு பகுதி வருமானம் மத்திய அரசின் கைகளுக்குச் செல்கிறது. தான் அளித்த நிதியை வட்டியோடு திரும்பப் பெற பல்வேறு மக்கள் விரோத ஆலோசனைகளை வழங்கும் உலக வங்கியைப் போலவே மத்திய அரசும் மாநிலங்களிடம் பல்வேறு நிபந்தனைகளைப் போடுகிறது. அண்மையில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், மாநில அரசுகள் மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே வளர்ச்சிக் குரிய நிதியை அளிக்க முடியும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.  தமிழக மின்வாரியத்தை கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்க பிரதமர் மன்மோகன்சிங் கிடம் தமிழக முதல்வர் ரூ.45000 கோடி தேவை என்று கோரிக்கை வைத்தார். அதற்கு மவுனம் தான் பதிலாக அளிக்கப்பட்டது. ஆனால் சீமைச் சாராய வணிகன் விஜய்மல்லையாவின் கிங்பிஷர் விமானநிறுவனம் தனக்கு ரூ.8000 கோடி நஷ்டம் ஆகிவிட்டது என்று கணக்குக் காட்டியுள்ள செய்தி வெளிநாட்டில் உள்ள பிரதமர் காதில் விழுந்தவுடன் உடனடியாக அதற்கு உதவ வேண்டும் என்று பாசத்தோடு பேசுகின்றார். யாருக்கான பிரதமர் அவர்? யாருக்கானது அவரது அரசு?
இன்றைக்கு மத்தியில் ஆளக்கூடிய காங்கிரஸ் அரசு, தமிழக அரசு கேட்கின்ற நிதியை அளிக்கவில்லை என்று தமிழகத்தில் பாஜக மாநிலக்குழு போராட்டம் நடத்துகின்றது. ஆனால், இதே பாஜக மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பொழுது மின்சார சட்டம்-2003ஐ நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இச்சட்டம் கொண்டு வந்ததின் காரணமாக மாநில மின்வாரியங்கள் பிரிக்கப்பட்டன. இச் சட்டத்தை ஏற்று மாநில மின்வாரியங்கள் செயல்பட்ட காரணத்தினால் இன்றைய அளவில் அவை 3 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளதாக மத்திய ஒழுங்குமுறை ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள் தான் மாநில மின்வாரியங்கள் நஷ்டத்தில் செயல்படுவதற்கான காரணமாகும். ஆனால் இதே காலத்தில் மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்யும் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் லாபத்தில் கொழிக்கின்றன. இவைகளையெல்லாம் பட்டியலிட்டு அதற்காக மின்கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்த வேண்டியது அவசியம் என்று தமிழக அரசு நியாயப்படுத்த வேண்டியதில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசை நெருக்கி தமிழக அரசு பெற வேண்டிய உரி மைகளைப் பெற்றாலே நட்டத்தை ஈடுகட்டி மின்கட்டண உயர்வைத் தவிர்க்க முடியும். ஏழு தனியார் மின்உற்பத்தி நிலையங் களிடம் மின்சாரம் வாங்குவதற்காக போடப் பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, அந் நிறுவனங்களை அரசே ஏற்க வேண்டும்.
மத்திய அரசின் நிதிநிறுவனங்கள் மாநில மின்வாரியங்களுக்கு அளித்துள்ள கடன்களுக்கான வட்டியை மத்திய அரசே ஏற்கவேண்டும்.  தமிழக மின்வாரியம் விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கின்ற மின்சாரத்திற்கான கட்டணத்தை தமிழக அரசானது முழுமையாக தமிழக மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் நிலுவைகளின்றி அளித்திட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளின் நிலுவைத் தொகைகளையும் சேர்த்து அளித்திட வேண்டும்.
இவைகளைச் செய்தாலே தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவ சியமில்லை. மின்கட்டண உயர்வினால் முதலாளிகளின் பையில் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டியதில்லை. இவைகளைச் சீர்படுத்தாமல் மின்பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் மின்கட்டண உயர்வின் மூலம் பல கோடிகளை மக்களிடமிருந்து பறித்து தனியார்களிடம் மின்சாரம் வாங்கச் செலவிட்டு, மின்வெட்டில்லாத தமிழகம் என்று தம்பட்டம் அடிக்கும் அரசியல் சித்துவிளையாட்டுகளில் அரசு ஈடுபடுமானால் தமிழக மின்சார வாரியம் மட்டுமல்ல, மக்களும் திவாலாகிப் போவார்கள். அல்லல்படுவோரின் துயர்மிகு கண்ணீர் பெரும் படைகளையே தேய்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும். அதைவிடுத்து வெறும் மின் கட்டண உயர்வினால் மட்டும் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என நம்பிச் செயல்படுவது அறிவார்ந்த செயல் அல்ல!

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் திசெம்பர் 2, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்:

உண்மை-பணக்காரர்களுக்கு 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் வரி சலுகை


பெட்ரோலின் விலையை மீண்டும் உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமைகளைத் திணித்திருப்பதை நியாயப்படுத்தி, பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருக்கிறார். ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அதே சமயத்தில் கேன்ஸ் நகரிலிருந்துதான் இவ்வாறு அவர்
பேசியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ‘‘பல பண்டங்களின்’’ விலைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் நீக்க வேண்டியதன் தேவை இருப்பதாகவும் அப்போது அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்பட இருக்கின்றன என்பதை
இதன்மூலம் அவர் மிகவும் அழுத்தமாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆயினும் எதார்த்த நிலைமை என்ன? 2010-11ஆம் ஆண்டு பொருளாதார சர்வே என்ன கூறியிருக்கிறது? தனியார் இறுதி நுகர்வு செலவினத்தின் வளர்ச்சி விகிதம் 2005-06ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடாக இருந்தது, 2010-11ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடாக வீழ்ச்சி
அடைந்திருக்கிறது. மக்கள் எங்கே வளமாக வாழ்கிறார்கள், பிரதமர் அவர்களே?

பிரதமர் நாடு திரும்பிய பின்னர், தன் னுடைய கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான திரிணாமுல் காங்கிரசின் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான பாசாங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திரிணாமுல் காங்கிரசின் மிரட்டலுக்கு
அடிபணியாமல், உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலைகளை மீண்டும் குறைக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்ல, இவ்வாறு பெட்ரோல் விலையை உயர்த்துவதற்காக நடை பெற்ற அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு  கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் பங்கேற்றதையும் அவர்களின் ஒப்புதலுடன்தான் இவ்வாறு மக்கள் மீது சுமைகள் ஏற்றப்பட்டன என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார்.

எப்படி இருந்தபோதிலும், மக்களின் மீது சுமைகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருப்பதை ஏற்க முடியாது. பெட்ரோல் பணக்காரர்களால்தான் பயன்படுத்தப்படுகிறது என்ப தெல்லாம் பழங்கதை. இப்போது கீழ்நிலை மத்தியதர வர்க்கத்தில்  பெரும்பாலானவர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோலை வாங்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். உண்மையில், பெட்ரோலை வாங்குவதில் அதிகமானவர்கள் இவர்கள்தான். மேலும், பெட்ரோலின் விலையை உயர்த்துவதன் மூலம் போக்குவரத்து சாதனங்களின் மூலம் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து, பண வீக்கத்தின் தாக்கம் மேலும் அதிகரித்திடும்.

உண்மை என்ன தெரியுமா? இவ்வாறு விலைகள் உயர்த்தப்படுவதன் மூலம் அரசின் கஜானா அதிக அளவில் பயனடைகிறது என்பதுதான். ஒவ்வொரு விலை உயர்வின்போதும் கிடைத்திடும் தொகையில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக அரசாங்கத்திற்கு வரிகளாகவும் தீர்வைகளாகவும் சென்றுவிடுகின்றன. இப்போது 2011-12இன் விலைஉயர்வுடன், மத்திய அரசாங்கம் கலால்
தீர்வையாக மட்டும் சுமார் 82 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010-11ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்திற்கு பெட்ரோலியத் துறையிலிருந்து, அனைத்து வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாகக் கிடைத்த மொத்த வருவாய்
என்பது 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 69 ரூபாயாகும். இதில் சுமார் 30 ரூபாய் வரிகள் மற்றும் தீர்வைகள் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாயாகச் சென்று விடுகின்றன. இவ்வாறு மக்களின் வயிற்றில் அடித்து அடைந்திடும் வருவாயில் பெரும் பகுதி அரசாங்கத்தைத் தாங்கி நிற்கிறது என்பது தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மக்கள்தான் அரசாங்கத்திற்கு மானியம்
அளித்து வருகிறார்களேயொழிய, அரசாங்கம் மக்களுக்கு மானியம் அளித்திடவில்லை.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும்போதெல்லாம் அவற்றை நியாயப் படுத்தி அரசாங்கத்தின் தரப்பில் இரு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று, எண்ணெய் நிறுவனங்கள் ‘‘திரும்பப் பெறுதல்’’ என்ற பெயரில் சர்வதேச விலைகளுடன் ஒப்பிட்டு, ‘‘இழப்புகள்’’ ஏற்பட்டிருப்பதாகவும், இவ்வாறு 2010-12இல் மட்டும் 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. இது 2010-11ஆம் ஆண்டில் 78 ஆயிரம் கோடிகளாக இருந்தது. இவ்வாறு ‘‘திரும்பப் பெறுதல்’’ என்றால் என்ன? முந்தைய காலங்களில் நம் நாட்டில் இயங்கி வந்த அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர், அவை இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை சர்வதேச விலைகளின் அடிப்படையிலேயே விற்று வந்தன. இது 1976இல் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக நிர்வாக விலை நிர்ணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் உண்மையான விலையும்  அதனைச் சுத்திகரிப்பதற்கு ஆகும் செலவும் மதிப்பிடப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நியாயமான லாபமும் சேர்க்கப்பட்டு, அவ்வாறுதான் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.

எடுத்துக்காட்டாக, சர்வதேச சந்தையிலிருந்து இந்தியாவால் இறக்குமதி செய்யப் படும் கச்சா எண்ணெய்யின் சராசரி விலை ஒரு பேரல் இன்றைய நிலையில் 110 அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,280 ரூபாய்) ஆகும். ஒவ்வொரு பேரலிலும் சுமார் 160 லிட்டர் எண்ணெய் இருக்கும். இவ்வாறு கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட லிட்டருக்கு 32 ரூபாய் என்று வருகிறது. சுத்திகரிப்பு செய்யப்படும் செலவினத்தையும், நியாயமான லாப வரம்பும் சேர்த்து பெட்ரோலின் விலையை நிர்ணயிப்போமானால் அது கிட்டத்தட்ட 40-41 ரூபாய் அளவிற்குத் தான் வரும். ஆனால், அதற்குப்பதிலாக இப் போது நாம் தில்லியில் சுமார் 70 ரூபாய் என்ற அளவிலும் நாட்டின் பிற பகுதிகளில் இன்னமும் அதிக விலை கொடுத்தும் பெட்ரோலை வாங்கவேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நவீன தாராளமயச் சீர்திருத்தங்களின் காரணமாக புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, நிர்வாக விலை நிர்ணயமுறை கைவிடப் பட்டு, முன்பு இருந்ததுபோல சர்வதேச விலைகளுக்கு ஈடாக விலைகள் நிர்ணயம் செய்யும் முறையை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் பொருள், பெட்ரோலியப் பொருட்களின் உள்நாட்டு
விலைகள் சர்வதேச விலைகளால் தீர்மானிக்கப்படும். இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவினங்கள் பற்றி அது பொருட்படுத்துவதில்லை. திரும்பப் பெறுதலின் கீழ் என்பது இறக்குமதி சரிசமநிலை விலைக்கும், பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலைக்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும். இவ்வாறு, சர்வதேச விலையுடன் நம் நாட்டின் விலையை ஒப்பிட்டு, ஒரு கற்பனையான இழப்பு தீர்மானிக்கப்படுகிறதே தவிர, உள்நாட்டில் அதனை உற்பத்திச் செய்வதற்கு ஆகும் செலவினத்தை வைத்து அல்ல. இந்தக் கற்பனையான இழப்புகளைத்தான் நவீன தாராளமய சீர்திருத்தவாதிகள் ‘‘எண் ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு விட்டதாக’’ கூப்பாடு போடுகிறார்கள். அவற்றை இங்குள்ள கார்ப்பரேட் ஊடகங்களும் தூக்கிப்பிடிக்கின்றன.

எதார்த்தத்தில் நம் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் நட்டத்தில் இயங்கிடவில்லை. 2010 மார்ச் 31உடன் முடிவடையும் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி  இந்தியன் ஆயில் கம்பெனியின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாயாகும். இதுவல்லாமல், இந்தியன் ஆயில் கம்பெனி சேமிப்பு வருவாய் உபரித் தொகை  49 ஆயிரத்து 472 கோடி ரூபாயை வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் – டிசம்பரில், மற்ற இரு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷனும், பாரத் பெட் ரோலியம் கார்பரேஷனும் முறையே 544 கோடி ரூபாயும், 834 கோடி ரூபாயும் இலாபம் ஈட்டியிருக்கின்றன. மக்கள் மீது பாரத்தை ஏற்றுவதற்கு கற்பனைக் கதைகளைக் கட்டிவிடாதீர்கள், பிரதமர் அவர்களே.

பிரதமர் அவர்களால் கட்டவிழ்த்து விடப் பட்டு, கார்ப்பரேட் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்படக்கூடிய இரண்டாவது வாதம்,
நிதிப்பற்றாக்குறை என்பதாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 விழுக்காட்டின் பட்ஜெட் குறியீட்டு மதிப்பான 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை எய்திட வேண்டுமானால் அரசாங்கம் கடன் வாங்கு வதைத் தவிர வேறு வழியில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் கடன் வாங்குவது என்பதை இயற்கையாகவே அது சாமானியர்களின் தலைகளில் விலைகளை உயர்த்துவதன் மூலம் தள்ளி விடுகிறது. கேன்ஸ் நகரில் பேசுகையில், இந்த குறியீட்டை ‘‘மிகவும் ஆழமான முறையில்’’ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். ‘‘சில மானியங்களை’’ வெட்டுவதன் மூலம் செலவினக் கட்டுப்பாட்டையும் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பதும் மேற்கொள்ளப்படலாம் என்றும் மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இப்போது மற்றொரு எதார்த்த நிலையையும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறையில்  பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் 2008-09இல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 099 கோடி ரூபாயாகும். இது 2009-10இல் 5 லட்சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2010-11ஆம் ஆண் டில் இது 5 லட்சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக
உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 04 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகவும், இருந்திருக்கின்றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாயாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்ல் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை  என்று கூறப்படுகிற 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள், பிரதமர்
அவர்களே. நியாயமாக வர வேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக  நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது. மாறாக வேலைவாய்ப்புகளும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரிவடைந்திருக்கும்.

கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் இவர்கள் அளித்திடும் சலுகைகள் உண்மையிலேயே முதலீட்டை அதிகரித்திடுமா? பொருளாதார அடிப்படைகளின் ஆரோக்கியம் என்பது முக்கியமாக மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தையே சார்ந்திருக்கிறது. பொருளாதார சர்வேயின்படி இது, 2005-06இல் 16.2 விழுக்காடாக இருந் தது, 2010-11இல் 8.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஒட்டுமொத்த முதலீட்டு வளர்ச்சி விகிதம்என்பதும் 2005-06இல் 17 விழுக்காடாக இருந்தது, 2008-09இல் -3.9 விழுக்காடாகக்
குறைந்து, 2009-10இல் 12.2 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட மோசமான அம்சம், விவசாயத்தில் முதலீட்டின் வளர்ச்சி விகிதம் 13.9 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாக வீழ்ச்சியடைந்திருப்பதாகும்.

சர்வதேசநிதி மூலதனத்தை குஷிப்படுத்திடுவதற்காக, நிதித் தாராளமயக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக பட்ஜெட்டில் ஏழு புதிய சட்டமுன் வடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐ.மு.கூட் டணி-1 அரசாங்கத்தை இந்நடவடிக்கைகளைத் தொடராத வகையில் இடதுசாரிகள் நிறுத்தி வைத்திருந்ததால்தான், தற்போது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார மந்தத்தின் பேரழிவு உண்டாக்கக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம் நாடு காப்பாற்றப்பட்டது. ஆனால், தற்போது கேன்ஸ் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி மூல தனத்தை குஷிப்படுத்தும் வகையில் பிரதமர் உரை நிகழ்த்தியிருப்பதன் மூலம், மிகவும் ஆபத்தான சர்வதேச ஊக அதிர்ச்சிகளுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் இந்தியாவை பிரதமர் இட்டுச் சென்றிருக்கிறார். மேலும் தற்போதைய நாட்டின் நிதிப் பற்றாக்குறை விரிவடைவதன் மூலம், பெரிய அளவில் ஊக நிதி வருவதென்பதும் நல்ல அறிகுறியல்ல.

நாட்டு மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும், நம் உள்நாட்டுச் சந்தையை விரி வாக்கிடக்கூடிய வகையில் நம் வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங்களை நாமும் இந்தியாவில் உக்கிரப்படுத்திட வேண்டும்.

 

குறிச்சொற்கள்:

வேலை நிறுத்தம் – முடங்கியது இஸ்ரேல்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இஸ்ரேல் தொழிலாளி வர்க்கம் நடத்திய பொது வேலை நிறுத்தம் வங்கிகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை களிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இஸ்ரேலின் பெரிய தொழிற்சங்கமான ஹிஸ் டாடிரட்(தொழிலாளர் பொது சம்மேளனம்) பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கெதிராக தேசிய தொழி லாளர் நீதிமன்றத்தைப் பயன்படுத்தவும் இஸ்ரேலிய அரசு முனைந்தது. வேலை
நிறுத்தத்தைத் தடை செய்ய முடியாத நிலையில், வெறும் நான்கு மணிநேரங்கள்தான் வேலை நிறுத்தம் செய்யலாம் என்று நீதிமன்றம் முரண்டு பிடித்தது. வேலை நிறுத்தம் துவங்குவதற்கு முந்தைய நாள் இரவில் நீண்ட நேரம் விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை வேலை நிறுத்தம் நடத்தலாம் என்கிற விநோதமான அனுமதியை வலதுசாரி அரசுக்கு ஆதரவாக இஸ்ரேலிய தேசிய தொழிலாளர் நீதி மன்றம் வழங்கியது. இந்த அனுமதியையும் காலை ஆறுமணிக்குதான் நீதிமன்றம் தந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் பிரச்சனை இது என்று தனது தீர்ப்பின்போது நீதிபதி நிலி அராத் கூறியுள்ளார். ஆனால் தொழிலாளர்களின் பெரும் அளவிலான பங்கேற்பால் கிட்டத்தட்ட முழு வேலை நிறுத்தம் போலவே மாறிவிட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

வேலை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத்
தெரிவித்த கட்சித் தலைவர்களில் ஒருவரான எம்.கே. டோவ் கெனின், “போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் ஒட்டு மொத்த இஸ்ரேலிய சமூகமே எதிர்நோக்கும் பிரச்சனையாகும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்
துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை இரண்டாம் தரக்குடியுரிமை மக்களாகக் கருதுவது கொடுமையான விஷயமாகும். சமூக உரிமைகள் இல்லாத, போதிய ஊதியம் பெறாத இந்தத் தொழிலாளர்கள் முதலாளித்துவச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சி சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், சமூகப் போராட்டம் அரசியல் நடவடிக்கையாக மாறும் போதுதான் மாற்றம் ஏற்படும். இஸ்ரேலில் இது நடைபெற வேண்டுமானால் ஒரு விரிவான சோசலிச இயக்கத்தை இந்தப் போராட்டங்களிலிருந்து கட்ட வேண்டும். அத்தகைய இயக்கம் சோசலிச மதிப்புகளோடு கூடிய ஜன நாயகப் போராட்டத்தை நடத்தக்கூடிய இயக்கமாக மலர வேண்டும்.
அதற்கான பணிகளை இந்த வேலை நிறுத்தத்தின் அடுத்த கட்டமாகத் துவங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 
1 பின்னூட்டம்

Posted by மேல் நவம்பர் 11, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்:

தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் திடீர் டிஸ்மிஸ்


மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

தமிழகத்தின் கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த புரிந்துணர்வை உருவாக்கவும், அவற்றின் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திமுக அரசு 2.7.1990ல் 25ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மாதம் ரூ.200 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தது. ஆனால், 10 மாத காலமே பணி செய்த இவர்களை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு எவ்விதக் காரணமும் இன்றி 1991 மே மாதத்தில் பணி நீக்கம் செய்தது.

இதன்பிறகு மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது 1997ல் மாதம் ரூ.500 தொகுப்பூதியத்தில் திமுக அரசு இவர்களை பணியமர்த்தியது. பின்னர் மேலும் 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது.

2001ம் ஆண்டில் அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2006ல் திமுக
அரசு இவர்களை பணியில் அமர்த்தி மாதம் ரூ.1000 வீதம் தொகுப்பூதியம் வழங்கி ஆணையிட்டது.

மக்கள் நலப்பணியாளர்களின் சரிபாதி பேர் பெண்கள். மேலும் இவர்கள் அனைவரும் 40வயத்திற்கும் அதிகமானவர்கள். பணி நியமனம் பெற்று 2 முறை பணி நீக்கம் செய்யப்பட்ட நிலைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க
முடியாது. இந்த வேலையை நம்பி இவர்கள் இருந்து விட்டதால் வேலைவாய்ப்பக பதிவு மூப்பும் கலாவதியாகி விட்டது. அரசுப் பணிகளுக்கான வயது வரம்பும் கடந்து வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலைக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக அரசு மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை 3வது முறையாக செவ்வாயன்று (நவ.8) பணி நீக்கம் செய்து அரசாணை (எண்-86) வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் இரா.சீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமல்படுத்தும் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுகின்ற மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்திருப்பது மக்கள் நலன் சார்ந்த பணிகளை கடுமையாக பாதிக்கும் என்பதுடன்,
மக்கள் நலனில் இந்த அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கொடூரமான இந்த அரசாணையை திரும்ப
பெற்று மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் இடையறவு (பிரேக்) இன்றி பணியில் தொடர
வழிவகை செய்ய வேண்டும். நியாயமான இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், மக்கள்
நலப்பணியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் போராட நேரிடும் என்றும்
அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

 

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் நவம்பர் 9, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்:

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்


பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி யென்றால் உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும்
இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. தற்போது(5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்கு மான வித்தியாசம்?

எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?

பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன்
படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009-10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால்
மத்தியஅரசு எப்படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்துகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங்கியுள்ள வரியினங்கள் வருமாறு
(24.8.2011)

ஆதார விலை – ரூ. 24.23

சுங்கத்தீர்வை – ரூ.14.35

கல்விவரி – ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன் – ரூ.1.05

சுத்திகரிப்பு செலவு – ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்

மூலதனச்செலவு – ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி – ரூ. 5.50

கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி – ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00

மொத்தம் – ரூ. 60.72

இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படுகின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாப கணக்கே… தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 – 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட்களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும்.
மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி.
ஆனால் இதே காலத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயிரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம் தான் மானியமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றனவா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய்வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த்தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவாலியா வகையறாவின் வருத்தம் புரியும்.

2008ம் ஆண்டில்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ.2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை
அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்ய துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம்.

2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் (2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள்
ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.

ஆண்டு நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம்   (கோடியில்)

ஐஒசி (IOC)  5294 .00 – 832.27 – 6126.27

எச்பிசிஎல்(HPCL)  2142 – 22 90.90 –  2233.12

பிபிசிஎல்  2142 – 22 198.00 – 2340.22

உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?

2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன்
இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?.  இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து
வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட் ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் காரணம்
இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அதனையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை
கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன்மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.

இது யாருக்கான அரசு?

எப்போது பார்த்தாலும் விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும்.
மின்சாரதிற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ் அரசு குறியாக இருந்து வருகிறது.

ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடியை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடிரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனி யார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்துமுறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்

 
4 பின்னூட்டங்கள்

Posted by மேல் நவம்பர் 8, 2011 in அரசியல், டாலர்

 

குறிச்சொற்கள்:

“திருட்டு” தமிழகம் முதல் இடம்


தேசத்தில் தமிழகம் வேறு எதிலே முந்தியிருக்கிறதோ இல்லையோ, தென் மாநிலங்களில் கொள்ளைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களில் தமிழ் நாடு முதலிடத்தில் இருக்கிறது என்ற செய்தி நிச்சயமாகப் பெருமைப்படத்தக்கதல்ல. குறிப்பாக, 2010ம் ஆண்டில் அதிகமான கொள்ளைப்புகார்கள் இங்கு பதிவாகியுள்ளன.

தேசிய குற்றச்செயல்கள் ஆவணங்கள் துறை (NCRP) வெளியிட்டுள்ள அறிக்கை யின்படி, 2009ம் ஆண்டு 1,144 சம்பவங்கள்தான்
பதிவாகின. 2010ம் ஆண்டிலோ 1,817 கொள் ளைச் சம்பவங்கள் தமிழகத்தில் பதிவாகியுள்ளன.  இது 58.8 விழுக்காடு அதிகரிப்பாகும். கர்நாடகத்தில் இது முறையே 1,825-1,949 (6.8 %), ஆந்திராவில் 544-550 (1.1 %) என பதிவாகியுள்ளது. b தன் மாநிலங்களில் சென்ற ஆண்டு கொள்ளைச் சம்பவங்கள் குறைவாகப் பதிவான மாநிலம் கேரளம்தான். குறைவாகப் பதிவானது மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆண்டை விட 23.4 விழுக்காடு வரையில் (830-636) கொள்ளைச்சம்பவங்கள் குறைந்திருக்கின்றன. கன்னம் வைத்து திருடுவது என்பதும் தமிழகத்தில் கடந்த ஆண்டு 11.7 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இதிலேயும் முதலிடம்தான்.

தமிழகத்தில் கொள்ளைகள் அதிகரித்திருப்பதற்கு, இங்கே மக்கள் தொகை அதிகரிப்பும், சங்கிலிப்பறிப்புகள் அதிகரித்து விட்டதும் தான் காரணம் என்று மாநில காவல் துறையினர் கூறியுள்ளனர். தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் தங்கச் சங்கிலிகள் அபகரிப்பும் அதிகரித்திருக்கிறது. தொடக்கத்தில் இத்தகைய சங்கிலிப் பறிப்புக் குற்றங்கள் முதல் தகவல் அறிக்கையில் திருட்டு என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக அது கொள்ளை என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காரணங்கள் புறக்கணிக்க முடியாதவைதான். ஆனால் இவை மட்டுமே காரணங்கள் என்று வரையறுத்துவிடவும் முடியாது. கொள்ளைக் குற்றத்திற்கு மற்ற திருட்டுகளை விடக் கடுமையான தண்டனைகள் சட்டத்தில் உள்ளன என்ற போதிலும் கொள்ளைகள் அதிகரிக்கின்றன என்பதை எளிதாக ஒதுக்கிவிட இயலாது.

ஒட்டுமொத்தமாக சமூகப் பொருளாதாரம், மத்திய, மாநில அரசுகளின்  கொள்கைகள் என அடிப்படையான பின்னணிகள் உள்ளன. கடுமையான விலைவாசி உயர்வுகள், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கிற கார்ப்பரேட் உலகத்தினரின்
வர்த்தகக் கொள் ளைகள், அதற்கெல்லாம் இசைவாக நடந்து கொள்கிற ஆட்சியாளர்களின் வரலாறு காணாத ஊழல்கள், அதிகார வர்க்கத்தினரின் லஞ்சக் குளியல்கள் ஆகியவை பணம் சம்பாதிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை விதைக்கின்றன. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமுதாயக் கட்டமைப்பில், ஏமாற்றத்திற்கு உள்ளாகிறவர்கள் எளிதாக சமூக விரோதிகளின் கைகளில் சிக்க, அந்த எண்ணம் வலுவாக வளர்க்கப்படுகிறது. தங்களது குற்றச் செயலால் மற்றவர்களின் வாழ்க்கை சோகத்தில் மூழ்குவது பற்றிய மனசாட்சி உறுத்தலே இல்லாத கும்பல்கள் பெருகுகின்றன.

இதில் மத்திய அரசின் அணுகுமுறைதான் முக்கியக் குற்றவாளியாக இருக்கிறது என்றா லும், மாநில அரசு நழுவிவிட
முடியாது. அப்படிப் பட்ட அணுகுமுறைகளை வன்மையாக எதிர்ப்பது, அவ்வாறு எதிர்க்கிற சக்திகளுக்குத் துணையாக இருப்பது, காவல்துறை உள்ளிட்ட அரசு எந்திரத்தை சரியாக இயக்குவது, வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது, மக்களிடையே எச்சரிக்கை உணர்வுகளை வளர்ப்பது என்ற பன்முகச் செயல்பாடுகளே தேவைப்படுகின்றன.

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் நவம்பர் 3, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்: ,

கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்! – சமஸ்


வல்லரசு என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, இத்தனை காலமாகத் தனது நாட்டுக்குள் இருந்த ‘இன்னொரு அமெரிக்கா’ வை வெளிக்காட்டாமல் மறைத்தே வைத்தது.  அந்த அமெரிக்கா நமக்கு அறிமுகம் இல்லாதது. வேலை அற்றவர்களும் ஏழைகளும் சூழ்ந்தது. வாஷிங்டன், சியாட்டில், சாக்ரோமண்டோ போன்ற நகரங்களின் ஒதுக்குப்புறங்களில், தேவாலயங்களின் பின்பகுதியில் கூடாரங்கள் அமைத்து வாழும் ஏழைகள் நிறைந்த அமெரிக்கா அது!

அமெரிக்காவின் குடிமக்களில் கிட்டத்தட்ட 28 சதவிகிதம் பேர் வறுமைக்கோட் டுக்குக் கீழேதான் வாழ்கிறார்கள். வேலை இல்லாத் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த10 ஆண்டுகளில் மட்டும் வேலையற்ற அமெரிக்கர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து எட்டு சத விகிதமாக உயர்ந்துள்ளது. வேலை இல்லாததால் வீட்டை இழந்து, காரையே வீடாக மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம் அங்கு உருவெடுத்து வருகிறது. கடந்த 2007-08ல் அங்கு பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது.
அப்போது 1.5 லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. பண நெருக்கடியில் சிக்கி, கடன்களை அடைக்க முடியாமல் திணறிய 50 லட்சம் பேரின் வீடுகள் ஜப்தி செய்யப்பட்டன. அமெரிக்க அரசு மிகப்பெரிய பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று அன்றைய அதிபர்புஷ் அறிவித்தார். அது தங்களை முழுமையாகக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், தவறு இழைத்த நிதி நிறுவனங்களுக்கு 35 லட்சம் கோடி அரசுப் பணத்தை வாரி இறைத்ததே, அந்தப் ‘பொருளாதார மீட்சி நடவடிக்கை’ யாக அமைந்தது. இதனால் ஏழை, மத்தியதர மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.

அப்போதுதான், ‘நம்மால் முடியும்.. மாற்றம் நிச்சயம்’ என்று அறைகூவல் விடுத்த ஒபாமாவை நம்பினார்கள். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. அமெரிக்கப்பாணியைப் பின்பற்றும் ஏனைய நாடுகளிலும் இதுதான் நிலை. மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்காத அரசாங்கங்கள், ஏற்கெனவே அவர்களுக்கு அளித்து வந்த கல்வி, சுகாதார மானியங்களையும் நிறுத்தத்தொடங்கின. ஒபாமா காலத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் ஓடியது. இதுதான் கார்ப்பரேட் உலக தர்மமாக மாறியது.

பொறுத்துப்பொறுத்து ஏமாந்த மக்கள் கொந்தளித்து எழுந்தால் என்னவாகும்? அக்டோபர் 15ம் தேதி, இந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. உலகப் பங்கு வர்த்தகத்தின் கோயிலாகக் கொண்டாடப்படும் ‘வால் ஸ்ட்ரீட்’டை எதிர்த்து இந்த மக்கள் தங்களது போராட்டத்தைத்
தொடங்கினார்கள். ‘வால் ஸ்ட்ரீட்டை முடக்குவோம்’ என்ற இயக்கத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கினர். அது கடந்த சனிக்கிழமை அன்று உலகம் தழுவிய அளவுக்கு மாறியதுதான் அதிரடியான மாற்றம். அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரையிலான அனைத்துக் கண்டங்களிலும் 82 நாடுகளில், 951 நகரங்களில் நடந்தது போராட்டம். நியூயார்க்கின்  டைம் சதுக்கம், லண்டனின் மன்ஹாட்டன் வீதி, இத்தாலியின் ரோம் சதுக்கம், ஸ்பெயினின் மாட்ரீட் வீதிகள், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பங்குச்சந்தை வீதி என்று எங்கெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஒரே இலக்கு…
கார்ப்பரேட் உலகின் பேராசைக்கு முடிவு கட்டுவது!

‘முதலாளித்துவத்தின் மரணமே, மக்களின் விடுதலை’, ‘பங்குச்சந்தைகளை முட மாக்குவோம்’ ‘சர்வதேசச் செலாவணி நிதியத்தை இழுத்து மூடுவோம்’, ‘கார்ப்பரேட் உலகுக்கு சங்கு ஊதுவோம்’ ‘ஏழை- பணக்காரர் பிரிவினைக்கு முடிவு கட்டுவோம்’ என்று கோஷங்கள் விண்ணைப்பிளக்கின்றன. தன்னெழுச்சியுடனும் சமூக வலைதளங்கள் உதவியுடனும் ஒன்று கூடும் மக்களை எந்த நாட்டு அரசாங்கத்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

உலகம் முழுக்கப் பரவும் இந்தப் போராட்டங்களுக்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. இந்தப்
போராட்டக்காரர்கள் ஒரே இயக்கத்தின் கீழ் திரளவில்லை. ஆனால், இன்றைய முதலாளித்துவ உலகை மாற்ற ‘புரட்சி மட்டுமே தீர்வு’ என்று அவர்கள் அத்தனை பேரும் ஒன்றிணைந்து விண் அதிர முழங்குகிறார்கள்.

முதலாளித்துவம் எங்கு செழித்து உலகம் முழுமைக்கும் பரவியதோ, அங்கிருந்தே அதன் அழிவும் தொடங்குகிறது. மார்க்ஸ் சொன்னது போல, முதலாளித்துவம் தன் சவப்பெட்டிக்கான ஆணியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதுபோல் தோன்றுகிறது. இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பார்த்து அனைத்து நாட்டு  அரசாங்கங்களும் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளன.

நன்றி : ஜூனியர் விகடன்
(23.10.2011)

 

குறிச்சொற்கள்:

பாரதியை மீண்டும் சீண்டும் ஜெயமோகன்கள்


பாரதியின் மொத்தக் கவிதைகள் 268 என்று பேராசிரியர் அரசு தன்னுடைய குயில் பாட்டில் பாரதியின் கருத்து நிலை என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதில் பாடல்கள், கவிதைகள், வாழ்த்துப்பாக்கள் என அனைத்தும் அடக்கம். பாரதி தன் சமகாலத்திய இந்திய, உலக இலக்கியப் போக்குகளின் மீது கவனம் பதித்திருந்ததை அவனது  கட்டுரை தொகுப்பை படிக்கிற போது அறிந்து கொள்ள முடிகிறது. மு. ராகவையங்கார் வழியாக சங்க மரபை அறிந்து அதைப் பற்றிய அய்யங்கார் உரையை இந்தியா பத்திரிகையில்
பெருமகிழ்வோடு வெளியிடுகிறான்.

நீதி நூல்கள்,காப்பியங்கள்,பக்தி இலக்கியங்கள், ஆண்டாள், வள்ளலாரின் படைப்புகள், நாட்டார்இசை மரபுகள், செவ்வியல் இசை
மரபுகள், இதிகாச, பஞ்சதந்திர மர கள் என பலவற்றிலும் கவனம் கொண்டு, கற்று தன்படைப்பை மிளிரச் செய்திருக் கிறான் பாரதி. பொது வாழ்வும்,இலக்கிய வாழ்வுமான தன் 16ஆண்டுகளை அடக்கு முறை,அச்சுறுத்தல்,புலம் பெயர்தல், வறுமையான வாழ்க்கைப் பாடு எனகழித்த தன் ஊடாகவே தன் படைப்பை நவீன தமிழ் மொழிப் பரப்பில் விட்டுச் சென்றிருக்கிறான்.

அடிமை இந்தியாவை விடவும் ஆசு வாசமான தற்காலத்திய சூழலில் வாழ்ந்து கொண்டு ,ஊடக பெருக்கத்தின் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வலைப்பூ கச்சேரி செய்யும் ஜெயமோகன்கள் இக்கவிதை மேன்மையினை சரியாக உணர முடியாது. இவர் தனது வலைப்பக்கத்தில் பாரதி அந்தகாலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞன் மட்டுமே இதைத்தாண்டி மகாகவி என அவனை சொல்ல வாய்ப்பு இல்லை. காரணம் அவனிடம் அசல்தன்மை கிடையாது; நகல் கவிஞன் என்ற ரீதியில் எழுதிச் செல்கிறார். அமைப்புகளில் செயலாற்ற மறுக்கும் தூய வெற்றிலக்கியசார். தன்னல நபர்களைப் போல் அன்றி ஒரே நேரத்தில் அமைப்பாளனாகவும்
படைப்பாளனாகவும் இருக்க வேண்டிய தேவையில் விடுதலை அரசியலுக்கான களமாக தன் படைப்பை பயன்படுத்துகிறான் பாரதி.இதற்கு ஆண்டாளின் திருப்பாவை, தொண்டரடிப்பொடி யாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி உட்பட பல உத்திகளையும் கைக் கொள்கிறான். திசைகள் எங்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுடர் கின்றன.நட்சத்திரங்களின் ஒளியும் குறைந்து சந்திரனும் மயங்கி விட்டான். விலகிய இருளினூடாக கமுகு மடல்களைக் கீறிக் கொண்டு, சுகந்த காற்று வீசும் அதிகாலைப் பொழுதில் துயில் கலைவாய் திருவரங்கனே என பெருமாளுக்கு வேண்டுகோள் விடுக்கும் மரபைத் தள்ளி வைத்து விட்டு,பெருமாள் இருந்த இடத்தில் சுதந்திரதேவியை முன்வைத்து அவளுக்கான திருப்பள்ளி எழுச்சி பாடுகிறான் பாரதி. இப்பள்ளி எழுச்சியில் வேண்டுகோள் கிடையாது. ஆணை,அதட்டல்,கோபித்தல் என சமயவடிவ ஊடாக சமய மறுமலர்ச்சியையும் விடுதலை உணர்வினையும் முன்னெடுக்கிறான்.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சிக் கவிதை 40 அடிகளில் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் செய்த தவத்தால் இருள் விலகி பொற்சுடர் பரவி பொழுது புலர்ந்த காலையில் பல்லாயிரம் தொண்டர்கள் உன்னை வணங்கக் காத்திருக்கிறோம். பறவைகள் பறக்க,முரசங்கள் ஒலிக்க எங்கும் சுதந்திர சங்கு ஒலிக்கிறது. அறிவாளர்களும்,பெண்களும் உன் பெயர் சொல்லி காத்திருக்க , உன் காலடியில் அணி விக்கும்பொருட்டு எங்கள் இதய மலர் களைக் கொய்து வைத்திருக்கும் எங்கள் ஆவலை நீஅறிவாயா? பலகாலம் பற்பல தவங்கள் செய்து ஏழைகள் நாங்கள் காத்திருக்க இன்னும் உனக்கு உறக்கமா? விதவிதமான பதினெட்டு மொழி பேசும் மாநிலங்களை உடையவளே குழந்தைகள் நாங்கள் எழுப்புகிறோம் பள்ளி எழுந்தருளாயோ? என்பதில் பல செய்திகளையும் விரவித் தருகிறான்
பாரதி.

இந்தக் கவிதையை வாசிக்கிறபோது செய்யுளில் யாத்தக் கவிதை என்பதற்கும் அப்பாற்பட்டு மனத்திரையில் ஒரு பெரிய சித்திரத்தை தீட்டிக் காட்டி ,.தீட்டப்படும் சித்திரத்தின் ஊடாக விடுதலைப் பற்றாளர்களின் மனதை கிளர்ச்சியுறச் செய்து விடுதலைப் போரை மேலும் மூண்டெழச் செய்யும் உத்தி இது. காட்டுவழிப் பயணத்தின் போது விலங்குகள்,திருடர்களுக்கு அச்சத்தை தரும் பொருட்டும் சுய அச்சத்தைத் தணிக்கும் பொருட்டும் பாடப்படும் வழி நடைப்பாட்டு போலவும் ,போர்க் காலங்களில் படைகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு பாடப்படும் படை நடைப்பாட்டு போலவும் இந்த சித்தரிப்பு, வாசிப்பின் போது உற்சாகம் தருகிறது. இது ஒர் அமைப்பாளன் செய்ய வேண்டிய பணி.நம்பிய கொள்கை தழைக்கும் பொருட்டு அணிகளை உற்சாகப் படுத்த வேண்டிய, தரவுகளைச் சொல்லி
போராட்டத்தை கூர் தீட்ட வேண்டிய தலைவனின் பணியைச் செய்தான் பாரதி.

அரசியல் களத்திலும்,பண்பாட்டுக் களத்திலும்(இதன் உட்கூறான கவிதை உட்பட) மாற்றம் நிகழ்த்த இயங்குவோர் கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலம் பற்றிய புரிதலை தன் மாநிலம், தேசம், சமூகம், உலகம் நடந்து வந்த பாதைகளின் ஊடாகவும் அந்தந்த கால கட்டத்திய ஆளுமைகளின் படைப்புகள்,கண்டுபிடிப்புகள், வரலாறுகள் வழியாகவும் திரண்ட அனுபவத்தைப் பெற்று இதன் வழி புதிய பாதையை, புதிய உத்தியைக் கண்டடைவது காலம் தோறுமான மானுடர்களின் பணி. இதைத் தாண்டிய அகமனத் தேடல், எதன் ஒன்றினும் பாதிப்பும் இன்றி சுயம்புவாக உணர்தல்தான் அசல் என்று கதைப்பது, தன்னை சமூகத்திலிருந்து தனியாக பிரித்துப் பார்க்கின்ற எதிரரசியல் போக்கு. வரலாற்றை, அறிவியலை மறுக்கின்ற மாயாவாத, வேதாந்த போக்கு.ஜெயமோகன் வ்ழி மொழியும் இந்தப் போக்கை அன்றே எட்டி மிதித்தவன் தான் மகாகவி பாரதி.

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி கவிதையில் வீதியெல்லாம் அணுகுற்றனர் மாதர் தெள்ளிய அந்தணர் வேதமும், நின்றன் சீர்திரு நாமமும் ஓதி நிற்கின்றார். இதில் அந்தணர் என்பதை இன்றைய அடையாள அரசியல் நோக்கில் பார்க்காமல், அறிவாளிகள் என பார்க்கிறார் பாரதி. நவீன தமிழகத்தின் விழிப்பின் முன்னோடியாக செயற்பட்ட சுதேசமித்திரன், இந்து பத்திரிகை அதிபரும்,பாரதிக்கு உற்ற துணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்த ஜி.சுப்பிரமணிய அய்யர்,வழக்கறிஞர் துரைசாமிஅய்யர்,பெண்விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நீதிபதி சதாசிவ அய்யர் , விடுதலைப்போரில் ஆணுக்கு நிகராய் பெண்களின் பங்களிப்பை உணர்ந்து அமைப்பை முன்னெடுத்த அன்னிபெசண்ட், மங்களாம்பிகை போன்றோர்களை மனதில் கொண்டே மேற்கண்ட வரிகளை
வடிவமைத்திருக்கிறார் பாரதி.

கடைசி அடியில் மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ? மாநிலம் பெற்றவள் இஃதுணராயோவிதமுறு நின்மொழி பதினெட்டும்
கூறி வேண்டியவாறு உனைப் பாடுதும் காணாய் மொழிவாரி மாநிலம் என்ற கோரிக்கையை காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முன்னெடுப்பதற்கு 30 ஆண்டுகள் முன்னரே பாரதி தன் கவிதையில் இதைப் பதிந்திருக்கிறான். மரபுகளிலிருந்து பெற வேண்டியதைப் பெற்று அதன் போதாமைகளை புதிய தேவைகளிலிருந்து நோக்கி தன் காலத்திய அரசியல் களத்தையும், இலக்கிய உலகத்தையும் ஒரு சேர வளர்த்தவன் பாரதி.புதியதும், புதிய மரபும் பழைய மரபின் சாரத்திலிருந்தே தன்னை வளர்த் தெடுக்க இயலும் என்பதை நாம் பாரதி போன்ற வர்களின் கவிதைமரபினூடாக புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்கிறோம்.*

 
பின்னூட்டமொன்றை இடுக

Posted by மேல் ஒக்ரோபர் 24, 2011 in அரசியல்

 

குறிச்சொற்கள்: , ,