மதிப்பெண் சான்றிதழ் மோசடி தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புதுச்சேரி மருத்துவர் மற்றும் அவரது மகனுக்கு முன்ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை, மத்திய அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் நிர்பந்தித்தது குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 180 உறுப்பினர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதியை மிரட்டுகிற அளவுக்கு செல்வாக்குள்ள அந்த மகா மந்திரி யார்? என்று அந்த மனுவில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
ஆனாலும் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை“ என்ற கதையாக முரசொலி ஏடு முந்திக்கொண்டு பெட்டிச் செய்தி ஒன்றை எழுதி கம்யூனிஸ்ட்டுகள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
“கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடும் கம்யூனிஸ்ட்டுகள்“ என்று தலைப்பிட்டு (2.8.2009) கேரளத்தில் பினராயி விஜயனுக்கு ஒரு நீதி, நீதிபதியை மிரட்டிய மந்திரிக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளத்தில் பினராயி விஜயன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் காங்கிரசாரால் பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விரிவான பதிலை பலமுறை தெரிவித்தபோதும், அபாண்டமான குற்றச் சாட்டை அடைகாத்து பொய்க்குஞ்சுகளை அவ்வப்போது பொரித்து வருகிறது முரசொலி ஏடு.
பினராயி விஜயன் ஊழல் செய்தார் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தலைமை தணிக்கை அதிகாரி-உயர்நீதிமன்றம்-சிபிஐ விசாரணைக்குழு-ஆளுநர் என அனைத்துத் தரப்பும் அடித்துச் சொல்லி விட்டதாக அடித்து விடுகிறது முரசொலி.
மின்திட்ட புனரமைப்பு தொடர்பாக லாவாலின் என்ற கனடா நிறுவனத்துடன் உடன்பாடு ஏற்பட்டது கேரளத்தில் காங்கிரசார் ஆட்சியில் இருந்தபோதுதான். பின்னர் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தத் துணை ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக காங்கிரஸ் அரசினாலேயே மாநில அரசின் கண்காணிப்பு (லஞ்ச ஒழிப்பு) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோது பினராயி விஜயன் தரப்பில் எந்தத் தவறும் நேரிடவில்லை என அதன் இயக்குநர் அறிக்கை தந்தார். இந்த ஒரே ‘குற்றத்திற்காக’ அந்த இயக்குநரின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
மத்திய புலனாய்வுத்துறை கூட தன்னுடைய அறிக்கையில் எந்த இடத்திலும் பினராயி விஜயன் பணமோ சொந்த ஆதாயமோ பெற்றதாக குறிப்பிடவில்லை.
பினராயி விஜயன் மீது வழக்குத்தொடர்வதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியதன் அடிப்படையில், மாநில அரசும் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டியதில்லை என ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
ஆனால் காங்கிரசின் கைப்பாவையான ஆளுநர், மாநில அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரித்து, மாநிலத் தலைமை வழக்கறிஞரின் கருத்தையும் புறக்கணித்து, வழக்கு தொடர அனுமதித்தார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரைக்கூட ஆளுநர் கலந்தாலோசனை செய்யவில்லை. யாரோ ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ஆலோசனை பெற்றதாக கேரள ஆளுநர் கூறினார். அவரின் பெயரை தெரிவிக்கக்கூட ஆளுநர் தயாராக இல்லை.
இந்நிலையில் இந்த பொய்வழக்கை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சந்திப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக அறிவித்திருக்கிறது.
இதுதான் முரசொலி நீட்டிமுழக்கும் ஊழல் வழக்கின் சுருக்கம்.
ஆளுநரே கூறிவிட்டார், அதன் பிறகு என்ன என்று முரசொலி முழங்குகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மாநில சுயாட்சி குறித்து முரசொலி மாறனின் கருத்தோவியத்தை முரசொலி ஏடு மறுபதிப்பு செய்து வருகிறது. இதில் மக்களால் தேர்வு செய்யப் பட்ட மாநில அரசின் அதிகாரங்கள் ஆட்டுக்குத்தாடி என அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட ஆளுநரால் எவ்வாறு வெட்டிச்சுருக்கப்படுகிறது என்று விலாவாரியாக விவரிக்கப்படுகிறது.
சந்திரசேகர் ஆட்சிக்காலத்தில் காங்கிரசாரின் தூண்டுதலின் பேரில் திமுக அரசு கலைக்கப்பட்ட தருணத்தை தவிர, மற்ற முறையெல்லாம் ஆளுநரின் அறிக்கையைப் பெற்றே மாநில அரசு கலைக்கப்பட்டது. அப்போது அதை திமுக மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கட்சியும் கண்டித்தது. ஆளுநர் கூறி விட்டால் அதற்கு அப்பீலே இல்லை என்று திமுக தனது நிலையை இப்போது மாற்றிக் கொண்டதா? மாநில சுயாட்சி கோரிக்கையை புதைத்து மலர் வளையம் வைத்துவிட்டார்களா?
இப்போது கேரள ஆளுநரின் முறையற்ற செயலை நியாயப்படுத்தி காங்கிரசாரோடு சேர்ந்து திமுக, “கோவிந்தா! கோவிந்தா!!” என்று குத்தாட்டம் போடுவது ஏன்?
முன்ஜாமீன் வழங்குமாறு தம்மை மிரட்டியதாக உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியே உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது பகிரங்கமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்துதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை நம்பாமல் பிரதமரிடம் நம்பிக்கை வைத்து அவரிடம் மனுக்கொடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறது முரசொலி.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மத்திய அமைச்சர் நேரடியாக பேசவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளபோதும், சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் மத்திய அமைச்சர் பேசும் வகையில் செல்போனில் எண்களை அழுத்தி தொடர்பு கொண்டார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே, அதுகுறித்து விசாரிக்குமாறு கூறுவதில் என்ன தவறு?
உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்தை மட்டும் குரங்குபிடியாக பிடித்துக்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது ஏன் என்றும் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்துவதிலேயே குறியாக இருப்பது ஏன் என்றும் முரசொலி ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. 180 எம்.பி.க்கள் எந்த மத்திய மந்திரியையும் பெயர் குறிப்பிட்டு விசாரணை கோராத போது, முரசொலி இப்படி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த அப்பம் போல குதிப்பது ஏன்?
ஆப்பசைத்த குரங்காக இந்த விவகாரத்ல் மாட்டிக்கொண்டது யார்?
இதை பெரிதாகிவிடாமல் அமுக்கிவிட முயல்வது யார்? என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும்.
மக்களின் பிரதிநிதிகளாக விளங்கும் 180 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனு என்பது வெறும் காகிதமல்ல. பிரதமர் தலையிட்டே ஆக வேண்டிய விவகாரம்.
நீதித்துறை விவகாரத்தில் அரசு எப்படி தலையிட முடியும் என்று மன்மோகன் சிங் ஆணித்தரமாக கூறிவிட்டாரே என்றும் முரசொலி ஏடு கூறியுள்ளது.
போபர்ஸ் வழக்கில் சோனியா காந்தி யின் உறவினர் குவாத்ரோச்சி, சிபிஐயினால் விடுவிக்கப்பட்டபோது “ஒரு அப்பாவியை எவ்வளவு நாள்தான் சித்ரவதை செய்ய முடியும்“ என்று கேட்ட பெருந்தன்மை பெருந்தகையிடமிருந்து அப்போதைக்கு அந்த பதில்தான் வரும். ஆனால் 180 எம்.பிக்களின் கேள்விக்கு பிரதமர் என்ற முறையில் அவர் பதிலளித்துத்தான் ஆக வேண்டும்.


