மத்திய அரசின் பித்தலாட்டாம்

December 15, 2009

மத்திய அரசின் பித்தலாட்டாம்

மத்திய அரசு வாரி வழங்கிய பொருளாதாரச் சலுகைகளால் தொழில்துறை வளர்ச்சி 10.3 சதவீதத்தை எட்டிவிட்டது என்கிறார் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா. நுகர்பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டில் 1.6சதவீதமாக இருந்தது. அது தற்போது 21 சதமாக தாண்டிக் குதித்து வளர்ந்துவிட்டது என்கிறார் அவர்.

நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.5சதவீதமாக இருக்கும் என திட்டக் குழு கணித்திருந்தது. ஆனால் இரண்டாம் காலாண்டில் 7.9சதமாக வளர்ச்சி விகிதம் அதிகரித்ததையடுத்து, முந்தைய கணிப்பை திட்டக்குழு மறுமதிப்பீடு செய்யவுள்ளது என்றும் அலுவாலியா கூறியுள்ளார்.

மறுபுறத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், வெளிநாடுகளிலிருந்து மூலதனம் வந்து குவிவதால் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், இவ்வாறு வரும் மூலதனம் வெறும் நீர்க்குமிழியாகவே இருக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். நாட்டிற்கு தேவையான முதலீடு தான் வந்துகொண்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவில் மூவரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர் அதாவது மொத்த மக்கள்தொகையில் 37 சதவீதத்தினர் ஏழைகளாக உள்ளனர். இது கணிக்கப்பட்டதை விட 10 சதவீதம் அதிகமாகும் என்று டெண்டுல்கர் குழு அறிக்கை கூறியுள்ளது.

மாண்டேக் சிங் அலுவாலியாவோ நுகர் பொருட்களின் தயாரிப்பு 1.6சதவீதத்திலிருந்து 21சதவீதமாக துள்ளிக் குதித்து ஓடுகிறது என்றார். மறுபுறத்தில் டெண்டுல்கர் அறிக்கையில் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம்பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதில் 10 சதவீதம் உயர்ந்து 37 சதவீதம் பேர் பரம ஏழைகளாக உள்ளனர் என்கிறார்.

நுகர்வுப்பொருள் உற்பத்தி அதிகரித்திருந்தால் அது நாட்டு மக்களின் நுகர்வில் பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில்தான் மூன்றில் ஒரு இந்தியர் உள்ளனர். அப்படியென்றால் நுகர்பொருள் சந்தை என்பது யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 41.8சத வீதம் பேரின் சராசரி மாதாந்திர மொத்தச் செலவாக ரூ.447 மட்டுமே உள்ளது. நகர்ப்புற மக்களில் 25.7சதவீதம் பேர், அத்தியாவசியப் பொருட்களுக்காக சராசரியாக மாதம் ரூ.578.8 மட்டுமே செலவு செய்யும் நிலையில் உள்ளனர் என்றும் டெண்டுல்கர் அறிக்கை கூறுகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநரோ அந்நிய மூலதனம் வந்து குவிகிறது, பொருளாதாரம் ஒளிர்கிறது என்கிறார். திட்டக்குழு துணைத் தலைவரோ தொழிற்துறை வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட கடும் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்று கணக்கு காட்டுகிறார்.

ஆனால் அரசினால் நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் குழு அறிக்கை உண்மையை போட்டு உடைத் திருக்கிறது. பிரதமர் துவங்கி திட்டக்குழு துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் வரை கூறுகிற பொருளாதார வளர்ச்சிக்கும் ஏழை இந்தியாவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஏற்கெனவே மூலதனத்தை குவித்து வைத்திருக்கும் முதலாளிகளின் மூலதனம்தான் வளர்ந்துகொண்டே போகிறது. ஏழை மக்கள் மேலும் மேலும் இளைத்துக்கொண்டே போகிறார்கள். இந்த இடைவெளியை தாராளமய துதிபாடிகள் அள்ளிவீசும் புள்ளி விவரங்களால் நிரப்பிவிட முடியாது.

December 13, 2009

மதுரை தினகரன் பத்திரிகை எறிப்பு வழக்கு?

கோப்பு வகை: அரசியல் — குறிச்சொற்கள்: — lightink @ 4:59 பிற்பகல்

“நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா? நீயும் அந்த கொலைக்களத்தில் மாண்டு விட்டாயா?” பூம்புகார் படத்தில் வரும் கோவலன் கொலையுண்ட காட்சியில் ஒலிக்கும் பாடல் இது.

இப்போது மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு 3 ஊழியர்கள் பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை என்ற செய்தியைப் பார்க்கும்போது பூம்புகார் படப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திமுகவின் அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு முடிவு தினகரன் நாளேட்டில் வெளியானதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள அந்த அலுவலகம் தாக்கப்பட்டது. மதுரை மேயர் உள்பட இந்த தாக்குதலில் ஈடுபட்ட காட்சி தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானதோடு சன் தொலைக்காட்சியிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானது. இந்தத் தாக்குதலின் போது அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதில் 3 அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள். அப்போது மதுரைக்கு வந்த சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று சூளுரைத்தார். ஆனால் இன்றைக்கு தினகரன், தமிழ்முரசு பத்திரிகைகளிலோ, சன் தொலைக்காட்சியிலோ தினகரன் எரிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செய்தி கூட வெளியாகவில்லை. கலாநிதி மாறன் கூறிய நீதியை நிலைநாட்டும் விதம் இதுதானோ என்று எண்ணத்தோன்றுகிறது. தினகரன் ஊழியர்கள் கொலை என்பது யாருக்கும் தெரியாமல் நடந்த ஒன்றல்ல. பட்டப் பகலில் நடந்த ஒன்று. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து வீடியோ ஆதாரம் உள்பட விரிவான ஆதாரம் உண்டு. ஆனாலும், சர்வசாதாரணமாக குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 புகார் மனு கொடுத்தவரிலிருந்து, முதல் சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி உள்பட அனைவரும் பிறழ்சாட்சியாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நடத்திய மத்திய புலனாய்வுத்துறை எந்த லட்சணத்தில் அல்லது எத்தகைய உள்நோக்கத்துடன் நடந்து கொண்டுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. தினகரன் எரிப்பைத் தொடர்ந்து முதல்வர் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பதவி பறிக்கப்பட்டது. சுமங்கலி கேபிள் விஷனுக்கு போட்டியாக ராயல் கேபிள் விஷன் உருவாக்கப்பட்டது. திடீரென அரசு கேபிள் டி.வி.யும் துவக்கப்பட்டது.

 இடையில் கண்கள் பணித்திட, இதயம் மகிழ்ந்திட குடும்ப இணைப்பு ஏற்பட்டது. தயாநிதி மாறன் மீண்டும் மத்திய அமைச்சராக்கப் பட்டார். அரசு கேபிள் டி.வி. அறுத்துவிடப்பட்டது என்பதெல்லாம் வரலாறு அல்ல. நேற்றைக்கு நடந்த நிஜம். இதன் தொடர்ச்சியாகவே தினகரன் எரிப்பு வழக்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்போது தினகரன் எரிப்பு வழக்கிற்கும் அதே கதி ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண கொலை வழக்கில் கூட அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். ஆனால், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் எத்தகைய மேல்முறையீடும் செய்யப்படவில்லை. இப்போது தினகரன் எரிப்பு வழக்கில் அரசு என்ன செய்யப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. பதில் சொல்லவேண்டிய பொறுப்பு வழக்கை நடத்திய மத்திய புலனாய்வுத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உண்டு.

http://www.hindu.com/thehindu/holnus/000200705092201.htm

http://www.hindu.com/2007/05/16/stories/2007051610270100.htm

http://www.telegraphindia.com/1070516/asp/nation/story_7783947.asp

http://www.deccanherald.com/content/40500/17-accused-acquitted-dinakaran-attack.html

December 4, 2009

மறக்க முடியாத மரணத்தின் நாள்

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கோர விபத்து- அது ஏற்படுத்திய தாக்கம் அதனால் இன்றைக்கும் பரிதவிக்கும் மக்கள் என பட்டியல் போட்டால் மிக நீளமாக இருக்கும்.

நேற்று-சென்ற மாதம் என சம்பவங்கள் நடந்ததே பெரும்பாலோர் நினைவுகளிலிருந்து அழிந்துவிடுகின்றது. இருபத்தி ஐந்து ஆண்டுகள் என்றால் கால் நூற்றாண்டு காலம். எதை நினைவில் கொள்வது என அலுத்துக்கொள்ளகூட தோன்றும்.

அப்படி புறந்தள்ளிவிட முடியாத- நினைவுகளிலிருந்து அகற்ற முடியாத விபத்து மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்தது. கடந்த 1984 டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி நள்ளிரவில் அங்கிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் உள்ள ஒரு வாயுக் கிடங்கில் இருந்த மிதைல் ஐசோசயனேட் வாயு ளியேறியது.

இவ்வாயு வெளியேற்றத்தால் சுமார் 10,000 பேர் உடனடியாக மடிந்திருக்கக்கூடும். (அரசு எண்ணிக்கை 3787). ஆனால் அவ்வாயுவை உள்வாங்கியதால் கிட்டத்தட்ட 25,000 பேர் மடிந்துள்ளனர்.

இவ்வளவு மனித உயிர்கள் மலிவாக இறந்துபோக காரணம் என்ன?

விபத்து – பின்னணி

1969ம் ஆண்டு போபாலில் நிறுவப்பட்ட பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலை விவசாயத்திற்கு தேவையான பூச்சி மருந்து (கொல்லி)களை தயார் செய்தது. 1979ல் விஷவாயுவான மிதைல் ஐசோசயனேட் வாயு தயாரிக்கும் பகுதியையும் துவக்கியது.

இவ்வாயுவால் எக்காலத்திலும் பிரச்சனை எழக்கூடும் என அறிந்தே நிர்வாகம் உற்பத்தியைத் துவக்கியது. அந்த ஆலையில் விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்த நிபுணர்குழு பின்வரும் காரணங்களை விளக்கியது.

* தயாரிப்பு முறைகள் அனைத்தும் அபாயகரமான பழக்கங்களாக இருந்தவை.

* மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆலையை அமைத்தது.

* பாதுகாப்பு முறைகளில் மற்றும் நடவடிக்கைகளில் இருந்த பலவீனம்

* அந்த ஆலை முழுவதும் மனிதர்களாலே இயக்கப்பட்டது. அதாவது அதிநவீன இயந்திரங்கள் இருந்தும் பயன்படுத்தப்பட வில்லை.

1985ல் இவ்விபத்து பற்றி ஆய்வு நடத்திய மற்றொரு குழு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் மேலும் சில புது தகவல்களை கண்டறிந்து வெளியிட்டது. 1980களிலேயே உற்பத்தியை நிறுத்திய இந்நிறுவனம் 1984ல் எப்படி நச்சு வாயுவை உற்பத்தி செய்ய- சேமிக்க அனுமதிக்கப்பட்டது?

பாதுகாப்பு வசதிகள் தேவையை விடக் குறைவாகவே இருந்தது. பணம் மிச்சப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக, நச்சு வாயுவை சேமிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சேமிப்பு தொட்டிகள் முறையாக பராமரிக்கப் படாமல், மேலும் குளிர்பதன வசதிகள் உருவாக்கப்படாமல் இருந்தது.

ஆக மொத்தத்தில் விபத்துக்குக் காரணம் என பட்டியலிட்டால், முதலில் யூனியன் கார்பைடு நிறுவனம், இந்திய அரசு, மத்தியப் பிரதேசமாநில அரசு என வரிசைப்படி செல்லும். இவ்விபத்து நடப்பதற்கு மேலும் ஒரு காரணம் ஊழியர் பற்றாக்குறை. முழுமையான- தேவையான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படாமல், இருந்தவர்களை வைத்தே பெரும் பணிச்சுமையுடன் வேலை வாங்கியது.

முன்னெச்சரிக்கை குரல்கள்

ஆலை துவங்கப்பட்டு 7 ஆண்டுகளிலேயே, அதாவது 1976-ல் அங்கிருந்த இரு தொழிற்சங்கங்கள் மாசுபடுதல் மற்றும் விஷவாயுக்களின் தாக்கம் பற்றி கேட்டன. நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறியது.

அதன்பின்னர் 8 ஆண்டுகளில் பல சிறு விபத்துகள் நடைபெற்றது. உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலுங்கூட, அந்த ஆலையில் இருந்த விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என அனைவரும் கூறியது வீணாயிற்று.

விபத்தும் – பாதிப்பும்

இரவில் கசிவு ஏற்பட்டதால், பலர் உறக்கத்தில் இருந்தனர். சிலர் என்ன நடக்கின்றது எனத் தெரியாமலேயே மடிந்தனர். கடுமையான இருமல், நுரையீரல் அடைப்பு, கண் எரிச்சல், வாந்தி என அனைத்தும் ஒருசேர தாக்கியது.

சம்பவ இடத்தைவிட்டு தப்பிப்பதற்காக, ஓடியதால் தேவைக்கு அதிகமான மூச்சை உள்வாங்கியதால் உடனடியாக மரணமடைந்தனர். தெருக்களில், காலனி வீடுகளில் ஏற்பட்ட நெரிசலிலும் பலர் இறந்ததாக சொல்லப்படுகின்றது.

அன்றைய நாள் இரவை விட டிசம்பர் 3 அன்று விபத்தின் கொடூரத்தை உலகம் அறிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ மனைகளிலும், வீடுகளிலும் உயிரிழந்தனர். சுமார் 2 லட்சம் மக்கள் அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

இன்றும் தொடரும்

25 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரையில், விஷவாயு தாக்குதல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. சுமார் 2 லட்சம் மக்களுக்கு இவ்விபத்தால் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது தலையிலிருந்து கால் வரை அனைத்து உறுப்புகளிலும் தென்படுகின்றது.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டுமென இந்திய அரசு அறிவித்து, சில நடவடிக்கைகளை எடுத்தது. யூனியன் கார்பைடு நிறுவனம் 350 மில்லியன் அமெரிக்க டாலர்களை தருவதாக அறிவித்து வட்டியுடன் 470 மில்லியன் டாலர் இந்திய அரசால் பெறப்பட்டது.

தன்னிடம் இருக்கும் பங்குகளை நிறுவனம் விற்றது. அந்த வருவாயில் விபத்தில் பாதிக்கப்பட்ட உயிர்காப்பாற்றப்பட்டவர்களுக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது நிறைவேற்றப்பட்டது.

18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இழப்பீடு என அறிவித்தது அரசு. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் குழந்தைகள் தான்.

சில நாட்களுக்கு உணவும்; பின்னர் குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டது. விபத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ.25,000, மரணமடைந்தவர்களுக்கு ரூ.62,000 வழங்கப்பட்டது. சில காலம் ஆண்களை இழந்த பெண்களுக்கு விதவை பென்சனாக ரூ.200ம், பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு ரூ.750ஆக உயர்த்தப்பட்டது.

1986ல் ஆலை முழுவதும் மூடப்பட்டது. ஆனால் சேமிப்பு கிடங்கில், ரசாயன கழிவுகள் சிறு அளவுகளில் இன்றும் இருக்கின்றது என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆலையை சுற்றியுள்ள பகுதிகள் கழிவுகளை கொட்ட பயன்படுத்தப்பட்டது. அது நிலத்தடி நீரை வெகுவாகப் பாதித்துள்ளது. பல ரசாயன கலவை அத்தண்ணீரிலே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாரன் ஆண்டர்சன், கைது செய்யப்பட்டு 3 நாட்களில் விடுதலை ஆனார். (அவ்வளவு செல்வாக்கான மனிதர்).

ஒரு மிகப்பெரிய உயிர்ச்சேதம் விளை வித்த இச்சம்பவம் நடந்து முடிந்து இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக உரிய இழப்பீடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, தொடரும் சுகாதார- உடல் நலக் கேடுகள் என அவதியுறும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. தவறு செய்தவர்களோ உரிய முறையில் தண்டிக்கப்படவில்லை. ஆனால் ஆலை விற்கப்பட்டது. வேறொரு நிறுவனம் இன்றும் தனது உற்பத்தியை செய்து கொண்டிருக்கின்றது.

இப்படி நிலை இருக்க, இன்றும் மூன்றாம் உலக நாடுகளில் தங்கள் ஆலைகளை உருவாக்கி பல பிரச்சனைகளை நம்மீது தள்ளுகின்றது ஏகாதிபத்திய நாடுகள். நமது ஆட்சி யாளர்களும் அந்நிய முதலீடு என மார்தட்டிக் கொள்கின்றனர். எச்சங்களையும், மிச்ச சொச்சங்களையும் நம்மீது தள்ளிவிட அனுமதிக்கக்கூடாது.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற கோர விபத்துகளில், போபால் விஷவாயு கசிவு முக்கியமானது. ஆட்சியாளர்களின் நிர்வாக அவலட்சணத்தை படம் பிடித்துக் காட்டிய சம்பவம் இது!

மீண்டும் ஒரு போபால் ஏற்படா வண்ணம் விழிப்பாக இருப்போம்!

இந்தியாவை பாதுகாப்போம்!

நவம்பர் 22, 2009

சுரங்க அரசியல்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — குறிச்சொற்கள்: — lightink @ 6:07 மு.பகல்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபுலாபுரம் இரும்புத்தாது சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிடு மாறு மத்திய அரசை ஆந்திர அரசு கோரியுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் புயலைக் கிளப்பிய ரெட்டி சகோதரர்கள் தற்போது ஆந்திர அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஓபுலாபுரத்தில் உள்ள இரும்புத்தாது தொழிற்சாலையை கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஜனார்த்தன ரெட்டி குத்தகைக்கு எடுத்ததில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்றும், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களும், ஜெகன்மோகன் ரெட்டியும் தொழில்முறை கூட்டாளிகள் என்றும், ஜெகன் மோகன் ரெட்டியின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் ரெட்டி சகோதரர்கள் முதலீடு செய்துள்ளனர் என்றும் தெலுங்குதேசக் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஓபுலாபுரம் இரும்புத்தாது தொழிற்சாலை குத்தகை குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரியுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார். ஓபுலாபுரம் சுரங்கம் குறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளதை தாம் வரவேற்பதாகவும், சுரங்க முதலாளிகளுக்கு இடையிலான மோதலில் தமது பெயரை தேவையின்றி இழுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். ராஜசேகர ரெட்டி மறைவைத் தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில எம்எல்ஏக்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இல்லையென்றால் ராஜினாமா செய்யப்போவதாகவும் மிரட்டினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் உடனடியாக இதற்கு இசையவில்லை. கர்நாடக மாநிலத்தில் கோஷ்டிப்பூசல் காரணமாக தங்களது சுரங்கக்கொள்ளைக்கு சில முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திய எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று ரெட்டி சகோதரர்கள் கலகம் செய்தனர். எம்எல்ஏக்களை கடத்தி வைத்து, மேலிடத்துடன் பேரம் பேசினர். பாஜக மேலிடம் தலையிட்டு, ரெட்டி சகோதரர்களின் கொள்ளைக்கு தடைவிதிக்க வேண்டாம் என்று பஞ்சாயத்து செய்ததைத் தொடர்ந்து எடியூரப்பாவின் பதவி தப்பியது. ஆனால் அவரது தீவிர ஆதரவாளரான பெண் அமைச்சர் ஷோபாவின் பதவி பறிக்கப்பட்டது. எடியூரப்பாவினால் மாறுதல் செய்யப்பட்ட, ரெட்டி சகோதரர்களுக்கு ஆதவான அதிகாரிகள் மீண்டும் அதே பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இந்த தொழில் அதிபர்களின் செல்வாக்கு மண்டலம் ஆந்திரா வரை பரவியுள்ளதை ஓபுலாபுரம் சுரங்க விவகாரம் உணர்த்துகிறது. அரசியல் என்பது ஜனநாயக முறையில் மக்களுக்கு சேவை செய்யும் பணி என்ற நிலை மாற்றப்பட்டு, முதலாளிகளின் சதுரங்க விளையாட்டு என்ற நிலை உருவாக்கப்படுவது மக்களாட்சியின் மாண்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியதாகும். தேசிய அரசியலிலும் இதன் நிழல் படிகிறது. முந்தைய ஆட்சியின்போது மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசைக் காப்பாற்ற இந்தியப் பெருமுதலாளிகளின் கரன்சி விளையாட்டு நாடாளுமன்ற கட்டிடம் வரை நீண்டதை நாடு பார்த்தது. தேசத்தை நேசிப்போர் கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று இது.

நவம்பர் 10, 2009

கருநாடகம்

கோப்பு வகை: அரசியல், இந்துதுவா — குறிச்சொற்கள்: — lightink @ 4:21 மு.பகல்

ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொள்ளைக் கூட்டத்தோடு உறவாடிய பாஜகவினர் இப்போது ஆப்பசைத்த குரங்காய் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். “பாஜக வித்தியாசமான கட்சி” என்ற அவர்கள் பற்றிய விளம்பர வாசகங்கள் அர்த்தமிழந்து பல்லிளித்து நிற்கிறது கர்நாடகாவில் .

முதன் முதலாக தென் மாநிலத்தில் பாஜக வேரூன்றி விட்டது என கர்நாடக வெற்றியை அவர்கள் வருணித்தார்கள். மதச் சார்பற்ற ஜனதா தளம் செய்த கோமாளித்தனங்களாலும்; காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளாலும் கசந்து போயிருந்த மக்களிடம் பணத்தை அள்ளிவீசி பெறப்பட்ட வெற்றியே அது. அப்போதும் கூட அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் சுயேட்சைகளையும் இதரர்களையும் விலை கொடுத்து வாங்கி (Opreation Loutus) ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தார் எடியூரப்பா. ஆக, கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்ததே பண பலத்தால் தான்.

கர்நாடக அரசியலை ஊன்றிக் கவனிக்கிற யாரும் அங்கே நடப்பது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியென்று கூறமாட்டார்கள். பெல்லாரி ஜனார்த்தன ரெட்டி குடும்ப பிரைவேட் பார்ட்டி என்றே கூறுவார்கள். அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமான கனிம வளத்தை கொஞ்சம் சட்டப் பூர்வமாகவும், மிக மிக அதிகமாக சட்ட விரோதமாகவும் கொள்ளையடித்துவிட்டு, அதில் ஒரு சிறு பகுதியை எலும்புத் துண்டுகளைப் போல மக்களுக்கு வீசுகிற ஸ்டைல்தான் அவர்களுடையது.

தங்கள் வெற்றிக்கும் ஆட்சி அதிகாரப் பசிக்கும் அவர்கள் தயவு தேவை என்பதால் இத்தனை காலம் அந்தக் கொள்ளையை கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. ஆயினும் மக்களிடம் பதில் சொல்ல வேண்டியிருப்பதால் சற்று கட்டணம் உயர்த்தியதும் “பாலூட்டுகிற காம தேனு”வாக பாஜகவுக்கு காட்சியளித்தவர்கள் “பாசக் கயிறை”வீசுகிற எமனாக காட்சியளிக்கத் துவங்கிவிட்டனர்.

ரெட்டி சகோதரர்கள், தங்களுக்கு 71 எம்எல் ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறிவருகின்றனர். இந்த எம்எல்ஏக்களை சென்னை, ஐதராபாத், கோவா ஆகிய இடங்களில் அடைத்து வைத்துள்ளதாக எடியூரப்பா கோஷ்டியினர் கூறுகின்றனர்.

ஆந்திராவில் காங்கிரஸ் தலைவர்களோடும், கர்நாடகாவில் பாஜகவோடும் உறவாடி தங்கள் கனிமக் கொள்ளையை ஜாம் ஜாம் என நடத்திக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம், ஒரு மாநில ஆட்சிக்கு சவால் விட முடியுமென்றால்; பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கொள்கை லட்சணம் அவ்வளவுதான்.

அதிகாரிகளை, பத்திரிகைகளை, நீதிபதிகளை, விலைக்கு வாங்கும் பணத் திமிங்கலங்களால் விலைக்கு வாங்கப்பட்ட கட்சிதானே பாஜக! அவர்களுக்கு கொள்கையைப் பற்றி, நேர்மையைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. மதவெறியும் பணத் திமிங்கலங்களும் சேர்ந்து நடத்தும் அரசியல் வியாபாரத்தை மக்கள் புரிந்து கொண்டு விரட்டியடிக்க வேண்டும். இந்த ‘புனிதக் கூட்டணி’ ஆட்சி தொடருமானால் அது மக்களாட்சி மாண்புக்கே தலை குனிவாகும். மக்கள் நலனையும் மதநல்லிணக்கத்தையும் முன்னிறுத்துகிற புதிய அரசியல் கலாச்சாரத்துக்காக போராட வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் என்பதே கர்நாடகா சொல்லும் சேதி.

அக்டோபர் 22, 2009

ராஜாவின் புதிய ஊழல்

Capture

தகவல் தொலைத் தொடர்புத் துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயனடைந்த யூனிடெக் குழுமத்தைச் சேர்ந்த கம்பெனிகள் தங்கள் பங்குகளில் 74 சதவீதத்தை பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இயங்கிவரும் நார்வே டெலிகாம் நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனத்திற்குத் தந்திட பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக ‘தி பயனீர்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

நார்வே நிறுவனமான ‘டெலினார்’ நிறுவனம் பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இயங்கி வருவதால், யூனிடெக் குழும கம்பெனிகள் தங்களின் பங்குகளை அதற்கு மாற்றிட, மத்திய உள்துறை அமைச்சகமும் புலனாய்வுக் குழுவும் இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ வும் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆயினும், பின்னர் உள் துறை அமைச்சகம், எதிர்ப்புகளுக்கான காரணங்களை நீர்த்துப்போகச் செய்து விட்டது. உள்துறை அமைச்சகத்தின் புதிய நிபந்தனைகளின்படி டெலினார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் பணியாற்றியிருப்பின் அவர்கள் இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும். ஆனால் இந்தியாவில் பணியிலமர்த்தப்படும் ஊழியர்கள் பாகிஸ்தானிலோ வங்க தேசத்திலோ பணியாற்றவில்லை என்பதை எவ்விதம் சோதனை செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

டெலினார் நிறுவனம் மத்திய அரசின் அனுமதியை சிங்கப்பூரில் செயல்படும் தங்கள் கிளையின் வாயிலாக வாங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தமிழக முதல்வர் கருணாநிதியும் கடந்த ஞாயிறு அன்று சந்தித்துக் கொண்டதற்கு மறுதினம், திங்களன்று மத்திய அரசு இந்த முடிவினை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘டெலினார்’ பிரச்சனை, கருணாநிதிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சென்ற ஆண்டு டிசம்பர் 4 அன்று கருணாநிதி புது தில்லி வந்திருந்தபோதே, சோனியா காந்தியிடம் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ‘டெலினார்’ நிறுவனம் தொடர்பான கோப்புகளுக்கு அனுமதி அளித்திட வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அன்றைய தினம் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் ‘‘அவலம்’’ தொடர்பாக அனைத்துக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் தில்லி வந்திருந்தார். காலையில் குழுவினருடன் பிரதமரைச் சந்தித்தபின், கருணாநிதி மட்டும் சோனியா காந்தியின் இல்லமான 10, ஜன்பத் சாலைக்குப் பயணித்திருக்கிறார். சோனியா கா தியுடன் புகைப்படம் எடுக்கும் வைபவம் முடிந்த பின்னர், தன்னுடன் வந்திருந்த டி.ஆர். பாலுவையும் அவர் வெளியேறச் சொல்லி விட்டார். அவரது மகள் கனிமொழி மட்டும் சோனியா காந்தியுடனான சந்திப்பின் போது உடன் இருந்திருக்கிறார்.

சென்ற ஆண்டு, ரியல் எஸ்டேட் கம்பெனியாக இருந்த யூனிடெக் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை 1651 கோடி ரூபாய்களுக்குப் பெற்று, அடுத்து ஒருசில வாரங்களுக்குள் அதில் 60 சதவீத பங்குகளை டெலினார் நிறுவனத்திற்கு 6120 கோடி ரூபாய்க்கு விற்றதைத் தொடர்ந்து பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டன. யூனிடெக் நிறுவனம் பல்வேறு பெயர்களில் டெலிகாம் உரிமங்களுக்காக விண்ணப்பித்திருந்தன. மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றொரு அறிவிக்கையை வெளியிட்டநிலையில், யூனி டெக் நிறுவனங்கள் தாம் பெற்ற அனைத்து உரிமங்களையும் ஒன்றிணைத்து விட்டன. இது தொடர்பாக தற்போது மத்திய கண்காணிப்பு ஆணையம், குற்றப்புலனாய்வுக் குழு ஆகியவை விசாரித்து வருகின்றன.

பின்னர், யூனிடெக் நிறுவனம் மீண்டும் தன்னை யூனிடெக் ஒயர்லஸ் (தமிழ் நாடு), யூனிடெக் ஒயர்லஸ் (வடக்கு), யூனிடெக் ஒயர் லெஸ் (தெற்கு), யூனிடெக் ஒயர்லஸ் (கொல்கத்தா), யூனிடெக் ஒயர்லஸ் (தில்லி), யூனிடெக் ஒயர்லஸ் (கிழக்கு), யூனிடெக் ஒயர்லஸ் (மும்பை), யூனிடெக் ஒயர்லஸ் (மேற்கு) என எட்டு கம்பெனிகளாக பிரித்துக் கொண்டது.

Update: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நேற்று மாலை திடீரென வழக்குப் பதிவு செய்த சிபிஐ இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகிறது.

2008ம் ஆண்டு சில தொலைபேசி நிறுவனங்களுக்கு அலைவரிசை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கப்பட்டதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து நேற்று மாலை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந் நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள சஞ்சார் பவன் கட்டத்தி்ல் உள்ள அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட் நடத்தி வருகிறது.

மேலும் சில தொலைத் தொடர்பு அலுவலகங்களிலும் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.

அக்டோபர் 7, 2009

அவர்களுக்கு இல்லை எந்த நெருக்கடியும்

கோப்பு வகை: அரசியல், டாலர், பங்குச்சந்தை — lightink @ 7:13 மு.பகல்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து பல மாதங்களாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த அமைச்சர்கள் வெளியேறி,அரசு மாளிகைகளில் தங்கத்துவங்கினர். சோனியாகாந்தி உள்ளிட்டோர் விமானத்தில் சாதாரண வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்து நாட்டிற்காக “மகத்தான” தியாகம் செய்து வருகின்றனர்.

நாட்டிற்கு நெருக்கடி வரும்போது,மக்களும் இதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்வதுதான் காங்கிரசாரின் வழக்கம். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவரே நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். அவர் நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கோ, ஆலைத் தொழிலாளர்களுக்கோ, முறைசாரா தொழிலாளர்களுக்கோ அல்ல; மாறாக நாட்டிலுள்ள மிகப்பெரிய முதலாளித்துவ நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் குரல் கொடுத்திருக்கிறார்.

பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். உழைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை முடிந்த வரை குறைக்க நினைக்கும் முதலாளிகள் சங்கம் கூட இந்த ஊதிய உயர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பிக்கி எனப்படும் முதலாளிகள் அமைப்பின் தலைவர் சிங்கானியா, தலைமை நிர்வாகிகளின் ஊதியம் குறைக்கப்படக் கூடாது. மாறாக இப்போதிருப்பதைவிட இன்னமும் கூடுதலாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படாததால்தான் அரிய பெரிய மூளைகளெல்லாம் வெளி நாட்டுக்கு உழைப்பதற்கு சென்றுவிட்டது. ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் முன்பு அப்படியே வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார்கள். இப்போது அவர்களுக்கு ஓரளவு நியாயமான ஊதியம் கிடைப்பதால்தான் இந்தியாவில் பணியாற்ற “பெருந்தன்மையோடு” முன்வந்துள்ளனர் என்றும் சிங்கானியா கூறியுள்ளார்.

ஐஐஎம், ஐஐடி போன்ற மத்திய அரசு நிறுவனங்களில், முழுக்க முழுக்க அரசு செலவில் படிப்பவர்கள் வெளிநாட்டுக்கு பறந்து செல்வதை தடுக்க கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று முதலாளிகள் சங்கம் கூறவில்லை. மாறாக அவர்களை இங்கேயே தக்கவைக்க உரிய சம்பளம் கொடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது.

உலக வங்கியின் தலைவரே, பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமாகும் என்று அவ்வப்போது அபாயச் சங்கு ஊதுகிறார். ஆனால் அவர் தனது ஊதியத்தை குறைத்துக்கொள்ள முன் வரவில்லை. மாறாக, தனது ஊதியத்தை மேலும் உயர்த்திக்கொண்டுள்ளார்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மேல் மட்டத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை. பொருளாதார நெருக்கடியின் மொத்த சுமையும் கிராமப்புற எளிய மக்கள், நகர்ப்புற உழைப்பாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதுதான் சுமத்தப்படுகிறது. ஊருக்குத்தான் உபதேசம், நமக்கு இல்லை என்பதுதான் முதலாளிகளின் சித்தாந்தம்.

செப்டம்பர் 30, 2009

துப்பு கெட்ட ஜம்மு & காஷ்மீர் அரசாங்கம்

கோப்பு வகை: அரசியல், டாலர் — குறிச்சொற்கள்: — lightink @ 7:56 மு.பகல்

துப்பு கெட்ட அரசாங்கம் என்றால் ஜம்மு & காஷ்மீர் அரசை உதாரணம் காட்டலாம். ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத அரசுக்கு வேறு என்ன பட்டம் சூட்ட முடியும்? ஐந்து மாதமாக சம்பளம் போடாததால் அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் ஆகஸ்ட் 26ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

850 பஸ்கள் ஓடவில்லை. டெல்லி, ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் போக்குவரத்து கழக பணிமனைகளும் அலுவலகங்களும் மூடிக் கிடக்கின்றன. ‘ஃபீஸ் கட்ட முடியாததால் எங்கள் பிள்ளைகளை பள்ளியில் இருந்து துரத்தி விட்டார்கள்; நாங்களும் பட்டினி கிடக்கிறோம்; சம்பள பாக்கியை தாருங்கள்’ என்று கோஷமிட்டு குடும்பத்தினருடன் ஊர்வலம் போக முயன்ற ஊழியர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீஸ் தடியடி நடத்தியிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் காயம் அடைந்திருக்கின்றனர். காஷ்மீரில் அரசு போக்குவரத்து கழகம் 1976ல் தொடங்கப்பட்டது.

சாதாரண மக்களுக்கு இன்றும் அந்த பஸ்கள்தான் உதவுகின்றன. ஆனால் மோசமான நிர்வாகம், அரசியல் தலையீடு காரணமாக தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. இன்றைய தேதியில் அது 400 கோடியை எட்டியுள்ளது. 15 ஆண்டுகள் பணி செய்தவர்கள் தாமாக விலக விரும்பினால் நல்ல தொகை தருகிறோம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கழகம் அறிவித்தது. இதுவரை 271 பேர் அப்படி விலக கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு கணக்கு முடிக்க சில கோடிகள் வேண்டும் என்று அரசுக்கு கழகம் கோரிக்கை வைத்தது. லாபம் ஈட்ட முடியாத நிறுவனத்துக்கு சம்பள பணம் தருவதே தண்டம் என்று அரசு அதையும் நிறுத்திவிட்டது. வசதியானது, பாதுகாப்பானது, நம்பகமானது என்று காஷ்மீர் மக்கள் வர்ணிக்கும் அரசு பஸ்கள் இப்போது பேரீச்சம் பழத்துக்கு விற்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளன. இதே காலகட்டத்தில் தனியார் பஸ்கள் நூற்றுக் கணக்கில் ஓடி நல்ல லாபம் ஈட்டுகின்றன. வேறு வேறு கட்சிகள் ஆட்சி அமைத்தாலும் நிர்வாகத்தின் அனைத்து அடுக்குகளிலும் ஊழல் செழித்து வளர்ந்ததால் நேர்மையான அதிகாரிகளும் கையாலாகாதவர்கள் ஆனார்கள். பயங்கரவாதத்தை விட கொடிய நோயால் மூச்சுத் திணறுகிறது அழகான காஷ்மீர் மாநிலம்.

செப்டம்பர் 25, 2009

ஒபாமாவை எதிர்நோக்கியுள்ள சவால்கள்

கோப்பு வகை: அரசியல், டாலர், பகுக்கப்படாதது — குறிச்சொற்கள்: — lightink @ 5:02 மு.பகல்

அமெரிக்க அதிபர் ஒபாமா தன் நாட்டிலுள்ள, எந்த வாய்ப்பும் வசதியுமில்லாத 46 மில்லியன் அமெரிக்க மக்களின் உடல் நலத்துக்கானதோர் காப்பீட்டுத்திட்டம் சம்பந்தமாக ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய உள்ளார். அந்த மசோதாவின் மூலமாக அவர் ஜனநாயகக் கட்சியிலுள்ள கன்சர் வேடிவ்கள் மற்றும் குடியரசுக்கட்சியிலுள்ள மிதவாதிகள் ஆகியோரது ஆதரவைப் பெற்றிடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஈரான் நாட்டை ஒரு தீண்டத்தகாத நாடு என்று ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் அதிபர் ஒபாமா ஈரான் நாட்டுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்திட விரும்புகிறார். அந்த அடிப்படையில் அவர் ஈரான் நாட்டுத் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டு கடிதங்களும் எழுதியுள்ளார். ஆனால் டெஹ்ரான் அரசு அவற்றையெல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.

அதிபர் ஒபாமா ஈரான், வடகொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தோல்விமேல் தோல்வியடைந்து வருவதாகக் குடியரசுக் கட்சியினரும், ஏனைய வலதுசாரி விமர்சகர்களும் கண்டனக் கணைகளை எய்து கொண்டேயுள்ளனர்.

டெஹ்ரான் எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் வருவதற்கு இணங்கவில்லை என்றால், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு அமெரிக்க ஆட்சியாளர்கள் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்திட முன்வரலாம். அவ்வாறு செய்தால் ஈரான் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தப்பட்ட தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்படும்.

ஆனால் மேற்படி பிரச்சனையில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்குமா என்பது சந்தேகமே.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் இரண்டும் தங்களுக்கிடையே அமைதிப் பேச்சுக்களைத் தொடங்கிட வேண்டும் என்று அதிபர் ஒபாமா விரும்புகிறார். அதிபர் ஒபாமா இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாகு, பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் ஆகிய இருவரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதன் மூலமாக உலக அரங்கில் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இருநாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாமே தவிர ஜெருசலேம் பிரச்சனை, பாலஸ்தீன அகதிகளின் மறுவாழ்வு பற்றிய பிரச்சனை, எல்லைப்பிரச்சனை ஆகியவற்றில் சுமூகமான தீர்வுகளைக் கண்டிட இயலாது. இஸ்ரேலியப் பிரதமர் நெடன்யாகு தன் நாட்டிலுள்ள வலதுசாரி சக்திகளுடன் கொஞ்சிக் குலவுகிறார். மேலும் பாலஸ்தீனத் தலைமையும் மிகவும் பலவீனமாக உள்ளது. அதிபர் ஒபாமாவால் கடந்த ஜூன் மாதம் சட்டமன்றத்தில் தன் நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் அதிக அளவில் கரியமில வாயு வெளியேற்றப்படுவதைத் தடைசெய்வது சம்பந்தமானதோர் மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றிட முடிந்தது. ஆனால் நிலக்கரி, எரிவாயு ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள பெரிய பெரிய அமெரிக்க நிறுவனங்கள் மேற்படி மசோதாவுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன.

ஜனநாயகக் கட்சியினரும் ஒருசில சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த வருடத்திற்குள்ளாவது மேற்படி மசோதாவைச் செயல் படுத்திட இயலுமா என்று சந்தேகப்படுகிறார்கள். அமெரிக்கா மேற்படி பிரச்சனையை தனது நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றினால்தான் தாங்களும் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு எதிரான மசோதாவில் கையெழுத்திடுவோம் என்று சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.

அதிபர் ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது இராக் யுத்தத்திற்கு ஒரு முடிவு கட்டப்போவதாகவும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் முழுவீச்சுடன் ஈடுபடப்போவதாகவும் மேடைகள் தோறும் முழங்கினார். அதன்படி ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மேலும் 21,000 அமெரிக்கப் படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். இன்றைக்கு ஆப்கன் நாட்டில் 68,000 அமெரிக்கப் படைவீரர்கள் உள்ளனர். மேலும் மிகத்திறமையான ராணுவ நிபுணரான ஜெனரல் ஸ்டான்லி மெக்ரிஸ்டல் என்ற ராணுவ அதிகாரி புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தலிபான்களை ஒடுக்கிட விரும்பும் அமெரிக்கத் திட்டங்களுக்குப் பாகிஸ்தானின் ஆதரவு கிடைக்கவில்லை. தான் தலி பான்களை ஆதரித்தால்தான் இந்தியாவின் செல்வாக்கைத் தடுத்திட இயலும் என்று பாகிஸ்தான் நினைக்கிறது. தன் நாட்டில் நிலவிடும் பொருளாதாரப் பின்னடைவானது அதிபர் ஒபாமாவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அமெரிக்க நாட்டில் 10 சதவீதம் பேர் வேலையின்றி வாடுகிறார்கள். இது அரசாங்கம் தரும் புள்ளி விவரம்தான். நாட்டில் இதைவிட அதிகமான நபர்கள் வேலையற்று தெருக்களில் அலைகிறார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு உயிரூட்டுவதற்காக 787 பில்லியன் டாலர்கள் உதவித்தொகையாக அளிக்கப்பட்டது. மேலும் அது மாதிரிப்பட்ட நிதியுதவிகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகின்றன. ஆனால் அதிபரின் பொருளாதார ஆலோசகரான கிறிஸ்டினா ரோமர் அந்தப் பிரச்சனை பற்றி எதுவும் பேசத் தயாராயில்லை.

இவ்வாறு ஒபாமா உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அவர் மேற்படி சவால்களைச் சமாளிப்பாரா என்பதை இனிவரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்.

ஆதாரம் : இந்து 10.9.2009

செப்டம்பர் 23, 2009

அத்வானி ஊசிப்போன ஊறுகாய்

பாஜக கூடாரத்துக்குள் உள்குத்து அதிகரித்து வரும் நிலையில், அத்வானி மீது மேலும் ஒரு முக்கியத்தலைவர் தாக்குதல் தொடுத்துள்ளார். அத்வானி ஒரு ஊசிப் போன ஊறுகாய், அவரது ஆட்டம் முடிந்துவிட்டது என்று கோவா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்வானியின் காலம் முடிந்து விட்டது. அடுத்த இரண்டாண்டு காலத்திற்கு அவர் கட்சியின் கார்டியனாக வேண்டுமானால் செயல் படலாம் என்று பாரிக்கர் கூறினார்.

பாரிக்கர், அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ராஜ்நாத் சிங்கிற்கு பிறகு இவர் தலைவராக்கப் படலாம் என்று யூகங்கள் எழுந்த நிலையில், அத்வானி மீது அவர் கடும் தாக்குதல் தொடுத்துள்ளது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்வானி என்னுடைய மதிப்புமிக்க தலைவர், அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவரது ஆட்டம் முடிந்து விட்டது. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகத்திலிருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்று, அத்வானியும் அரசியலிலிருந்து விலக வேண்டிய தருணம் இது என்று பாரிக்கர் கூறினார்.

ஊறுகாய் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊற வேண்டியது அவசியம். ஆனால் அதே நேரத்தில் அது ஆண்டுக்கணக்கில் ஊறிக்கொண்டிருந்தால் ஊசிப்போய் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும் என்று பாரிக்கர் கூறினார்.

நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவர் கட்சிக்கு தலைவராக வரவேண்டும் என்று அவர் கூறினார். அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் மீது ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பாரிக்கரும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.

பழைய இடுகைகள் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.