தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கன் பகுதிகளில் அபின் விளைவிக்கும் விவசாயிகளிடம் பத்து சதவீத மதவரி மூலம் 2007ம் ஆண்டில் தலிபான்கள் 5 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர் என்று போதை மருந்து மற்றும் குற்றம் குறித்த ஐ.நா. அமைப்பின் தலைவர் அன்டோனியோ மரியா டி கோஸ்டா கூறியுள்ளார்.
மதவரி தவிர மேலும் இரண்டு வழிகளில் தலிபான்கள் பணம் திரட்டுகின்றனர். பாப்பி செடிகளில் இருந்து விளையும் விதைகளில் இருந்து அபின் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் அபின் மூட்டை களை எல்லைகளைத் தாண்டி அனுப்புவதற்கும் தலிபான்கள் கட்டணம் பெறுகிறார்கள் என்று டி கோஸ்டா தகவல் அளிக்கிறார்.
உலகின் தேவையை விட உபரியாக ஆப்கனில் அபின் விளைகிறது. கடந்த சில ஆண்டுகளில் 4 ஆயிரம் டன் அபின் உலகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் ஆப்கனில் 8000 டன் அபின் விளைந்துள்ளது. உபரி விளைச்சல் யாரிடம் உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், இவை பல நூறு கோடி டாலர்களை பெற்றுத் தரக்கூடியது.
நாளாக நாளாக அபின் கெடுவதில்லை. மாறாக அதன் மதிப்பு கூடுகிறது. பதுக்கப்பட்டிருக்கும் அபின் பயங்கரவாதிகளிடம் இருந்தால் அது அவர்களின் எதிர் கால நடவடிக்கைகளுக்கு பயன்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிட்டன் 25 கோடி பிரிட்டிஷ் பவுண்டு களை செலவழித்து போதை எதிர்ப்பு நிறுவனங்கள், சிறப்பு நீதிமன்றங்கள், காவல்துறை மற்றும் சட்டக் குழுக்களை அமைத்து வருகிறது.