அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், காய்கறிகள், பயறுவகைகள், என அன்றாடம் பயன்படுத்தும் சகல பொருட்களின் விளைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த பொருட்களை வாங்க மளிகைக் கடைக்குச் செல்வோர், இவ்வளவு கொள்ளை லாபம் அடிக்கிறாரே என கடைக்காராரை சபிப்பது உண்டு. ஆனால் விலையை எப்படி உயர்த்துவது, அதுவும் விற்பனை குறையாமல், விலை உயர்வை திட்டாமல், நுகர்வோரை சிரித்துக் கொண்டே பொருளை வாங்க வைப்பது என கற்றுக் கொடுப்பதற்காகவே பெரிய நிறுவனங்கள் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இங்கல்ல……. அமெரிக்காவில்!
உணவு தானியங்களின் பற்றாக்குறைக்கும், பதுக்கலுக்கும், அதன் மூலம் மிகக்கடுமையான விலை உயர்வுக்கும் காரணகர்த்தா அமெரிக்காவே என்பது அம்பலப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் விலையை எப்படி உயர்த்துவது என்பதற்காகவே பள்ளிக்கூடம் நடத்தி வருவது இப்போது அம்பலம் ஆகியுள்ளது. நுகர்வோரின் மனம் நோகாமல் விலையை உயர்த்துவதற்கு எளிமையான 46 வழிகள், விலையை உயர்த்தி உங்கள் லாபத்தை பல மடங்கு பெருக்க 52 வழிகள் என பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் அமெரிக்காவில் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மெர்லின் ஜென்சென் என்ற பெண்மணி விலைஉயர்வை ஏற்க வைப்பதற்கான உளவியல் என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் 11 பாகங்கள் உள்ளன. இவரது நூல் அமெரிக்காவில் வர்த்தகர்களிடையே பிரபலமாகியுள்ளது. இவரை மார்க்கெட் குரு என்று அழைக்கிறார்கள். இந்த குருவை பின்பற்றி இந்தியாவிலும் பல்வேறு பிசினஸ் குருக்கள் உருவாகி வருகிறார்கள்.
உங்களது உற்பத்ிப் பொருளின் தற்போதைய விலையில் ஒரு சதவீதம் அதிகரித்தால், 12 சதவீதம் லாபம் கிடைக்கும்; 5 சதவீதம் அதிகரித்தால் 60 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றும், அதற்கான வழிகளையும் பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு இவர்கள் கூறுகிறார்கள். ஒரு பொருளின் விலையை அச்சிடுவதிலும் கூட நுகர்வோரை ஏமாற்ற முடியும் என்று இவர்கள் பகிரங்கமாக புத்தகம் அடித்து விற்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு பொருளின் விலை 9.90$ என்று குறிப்பிட்டிருக்கும்; அடுத்த பேட்ச்சில் அதே பொருளின் விலையை 9.98$ என்று குறிப்பிடலாம்;
அதற்கடுத்த பேட்ச்சில் 9.99$ என்று குறிப்பிடலாம். அச்சிடப்படும் இந்த நுண்ணிய எழுத்துகள் பொதுவாக
நுகர்வோர் கவனிப்பதில்லை. பல லட்சக்கணக்கான மக்கள் வாங்கும் பொருட்களில் 0.9 சதவீதம் அளவிற்கு விலையை அதிகரித்து விற்றல் கூட பல கோடி டாலர் கூடுதல் லாபம் பெரும் நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன.
இப்படித்தான் படிப்படியாக அனைத்து விதமான பொருட்களின் விளையும் திட்டமிட்டு அதிகரிக்கப்படுகிறது. அதை வாங்க வேண்டிய மனநிலையும் கட்டாயமும் நுகர்வோரிடம் உருவாக்கப்படுகிறது. முதலாளித்துவ மூலதனம் லாபத்தை தேடித்தேடி வெறியோடு அலைக்கிறது. அந்த லாபவெறிக்கு துணையாக இத்தகைய அமெரிக்க நிறுவனங்களும், முதலாளித்துவ பிசினஸ் குருக்களும் இடைவிடாமல் வேலை செய்கிறார்கள்.


