பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து நாளை தமிழகத்தில் பந்த் நடத்த இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்துக்கு சிஐடியுவுடன் இணைந்த ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பதால் தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஆட்டோக்கள் ஓடாது.
அதே போல சென்னை கோயம்பேடு மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோக்களும் நாளை இயங்காது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பந்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஊழியர் சங்கங்களும் பங்கேற்கவுள்ளனர். ஆனாலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக உள்ளிட்ட பிற கட்சிகளின் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பந்த்தில் பங்கேற்கவில்லை.
இதற்கிடையே மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்துக் கொண்டே மறுபக்கம் இடதுசாரிகள் பந்த் நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறுகையில்,
கேள்வி: மத்திய அரசுக்கு ஒரு பக்கம் ஆதரவு அளித்து கொண்டு மறுபக்கம் அரசை எதிர்த்து `பந்த்’ நடத்துவது சரியா?
பதில்: அதுதான் எங்கள் வழி. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். எங்கள் வழி தனி வழி.
கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உங்கள் கட்சி நிலைப்பாட்டை கண்டித்துள்ளாரே?
பதில்: அவர் எங்களுக்கு வழி காட்டி அல்ல.
கேள்வி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் விமர்சித்துள்ளாரே?
பதில்: அவரிடம் பாடம் கற்கும் அளவுக்கு நாங்கள் குழந்தைகள் அல்ல என்றார்.