கர்நாடகாவில் சங் பரிவாரங்கள் தேவாலயங்களைத் தாக்கின அதிகாரிகளும் உடந்தை: விசாரணைக்குழு அறிக்கை

கர்நாடகாவில் 13 மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களை 2008-ம் ஆண்டில் சங் பரிவாரங்கள் தாக்கின. அதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் உடந்தையாய் இருந்தனர் என்று நீதிபதி பி.கே. சோமசேகரா தலைமையிலான குழு குற்றம் சாட்டி யுள்ளது.

மங்களூரிலும், பிற மாவட்டங்களிலும் தேவாலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் தாக்கப்பட்டதற்கு பஜ்ரங்தள், ஸ்ரீராம சேனை, விஎச்பி மற்றும் பல மதவெறி அமைப்புகளின் உறுப்பினர்களே காரணம் என்று நீதிபதி சோமசேகரா குழு கூறியுள்ளது. பல தேவாலயங்கள் தாக்கப்பட்டதும் உண்மையே என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் தாக்கப் பட்ட சம்பவங்களில் ஈடுபட்ட பஜ்ரங்தள், ஸ்ரீராம சேனை ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு மூத்த காவல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர் உடந்தையாய் இருந்தனர் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

காவல்துறை அத்துமீறல்

தேவாலயங்கள் தாக்கப்பட்டதை எதிர்த்துப் போராடிய கிறிஸ்தவர்கள் மீது, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் கூறிக் கொண்டு தடியடி நடத்திய காவல்துறை, அத்துமீறி நடந்து கொண்டது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களை காவல் துறை காயப்படுத்தியது என்றும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

கிறிஸ்தவ மதமாற்றங்கள் பெருமளவில் நடை பெற்றதற்கு கட்டாய வற்புறுத்தல்கள் காரணம் இல்லை. மாறாக மத மாற்றங்களுக்கு சூழ் நிலையும் பணம் உள்ளிட்ட தூண்டுதலுமே காரணம் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றில் 90 சதவீதம் மட்டுமே செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்று நீதிபதி பி.கே.சோமசேகரா கூறினார். அறிக்கையின் சுருக்கக் குறிப்பை செய்தியாளர்களிடம் அவர் அளித்தார்.

நுட்ப உணர்வு கொண்ட பல அம்சங்கள் இதில் இடம் பெறவில்லை என்றும், இறுதி அறிக்கை மார்ச் 31-க்குள் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் சென்னை ஆடிட்டர் அலுவலகத்தில் சிபிஐ சோதனை

அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சென்னை ஆடிட்டர் அலுவலகத்திலும், ஊழியர் வீட்டிலும் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொலை தொடர்புத்துறையின் சில அதிகாரிகள் மற்றும் சில தனியார் அமைப்புகள் ஊழல் மற்றும் ரகசிய ஆலோசனை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தையும், ஊழியர் வீட்டையும் முற்றுகையிட்டு சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.

இந்த சோதனை குறித்து சிபிஐ புலனாய்வுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், எம்.கெவின் என்ற ஊழியர் வீட்டையும், ஆடிட்டர் கணபதியின் அலுவலகத்தையும் சிபிஐ சோதனை நடத்தியது என்றார்.

சென்னையை மையமாக கொண்ட க்ரீன்ஹவுஸ் புரமோட்டர் நிறுவனத்தின் ஆலோசகராக இருப்பவர் எம்.கெவின். இந்த நிறுவனத்தின் கணக்குகளை ஆடிட் செய்பவர் கணபதி. இந்த சோதனை குறித்து கம்பெனி தரப்பில் கூறுகையில், இவ்வழக்கு தொடர்பாக கருத்துக்கூற விரும்பவில்லை. இரு தனிநபரின் தனி விவகாரம் என தெரிவிக்கப்பட்டது. கம்பெனியின் நிர்வாக அதிகாரி காயத்ரி கூறுகையில், இந்த இருநபர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும் என்றார். கெவின் மற்றும் கணபதியுடன் குறிப்பிட்ட சென்னை புரமோட்டர் நிறுவனத்திற்கு உள்ள தொடர்பு குறித்த விவரங்களை அந்நிறுவனம் தரவில்லை. சிபிஐ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தில்லி, மும்பை, சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர், குர்கான், மொகாலி, நொய்டா ஆகியவற்றில் தொலைபேசி நிறுவனங்கள் மற்றும் தொலைதொடர்புத் துறையிலும் அதிரடி சோதனை நடத்தியது. 2வது சந்ததியினர் மொபைல்போன் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் (அலைகற்றை) ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடந்தது. கடந்த ஆண்டு தொலைதொடர்புத் துறையின் கீழ் உள்ள வயர்லெஸ் திட்டப் பிரிவு, தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் (பயன்பாட்டு சேவை) துணைத் தலைவர் அலுவலகம் ஆகியவற்றில் சிபிஐ சோதனை நடந்தது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனியார் தொலைபேசி நிறுவனங்களுடன் அதிகாரிகள் வைத்திருந்த ரகசிய தொடர்பை கண்டறிய இந்த சோதனை நடந்தது.

புதிய கல்வி கொள்ளை

கட்டுக்கடங்காமல் தறிகெட்டு அரங்கேற்றப் படும் கல்விக் கொள்ளைக்கு மத்திய அரசின் தற்போதைய முடிவு கொம்பு சீவி விடும் வேலையை செய்கிறதோ? என்ற அச்சம் கல்வியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இனிமேல் தொழிற்கல்வி நிலையங்களுக்கு புதிய முறையில் அங்கீகாரம் அளிக்கப்படும் என சில விதிமுறைகளை கோடிட்டுக் காட்டியிருக்கிறது. இதுவரை பெரு நகரங்களில் தொழில்நுட்பக் கல்லூரி துவக்க வேண்டும் என்றால், குறைந்தது 3 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, 2.5 ஏக்கர் நிலம் இருந்தாலே போதும். மெட்ரோ நகரங்களில் 5 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, 4 ஏக்கர் நிலம் இருந்தாலே கல்வி நிலையங்களை துவக்கலாம் என அறிவித்திருக்கிறது.

அதே போல் ஒவ்வொரு பொறியியல் கல்லூரியும் முதல் ஆண்டில் 240 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்பதை தகர்த்து 300 மாணவர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம். நிர்வாகவியல் கல்லூரிகளில் அதிகபட்ச மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 60 ல் இருந்து 120 ஆக உயர்த்திக் கொள்ளலாம். முதுகலை பட்டய வகுப்பில் மாணவர் சேர்க்கையில் 25 சத விகிதம் வரை மாறுதல்களை கல்வி நிறுவனங்களே செய்து கொள்ளலாம் என பட்டியல் நீள்கிறது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் ( ஏ.ஐ.சி.டி.இ ) கீழ் இயங்கி வந்த தொழில்நுட்பக் கல்வி நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வாரியம் ( என்.பி.ஏ ) வெளிநாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இனி தனித்தே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போன்று வந்து கொண்டே இருக்கின்றன. நஷ்டத்தில் இயங்கிய ரைஸ் மில்கள் எல்லாம் தற்போது பொறியியல் கல்லூரிகள் என்ற பெயரில் உருமாறி நிற்கிறது. எந்த விதிவிலக்கும் இன்றி, காசு உள்ளோருக்கே கல்வி என்பதை தாரகமந்திரமாகக் கொண்டு கொள்ளை லாபம் கொழிக்கும் தொழிலாக இன்று தனியார் கல்வி நிலையங்களின் ஆட்சி கொடிகட்டி பறக்கிறது. ஆயினும் பல தனியார் கல்லூரிகளில் ஏஐசிடிஇ விதிகளின்படி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. இதனை கண்காணிக்கும் ஏற்பாடே இல்லை என்பதுதான் உண்மை. இந் நிலையில் மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு அரசின் கொஞ்சநஞ்ச கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டு கல்வி விற்பனைக்கு அங்கீகாரம் அளிப்பதாக உள்ளது.

அதுமட்டுமின்றி இன்னொரு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு முறையால் உயர் கல்வியில் மிகக்குறைந்த அளவில் சாதாரண மாணவர்களுக்கு இடம் கிடைத்து வந்தது. அதற்கும் உலைவைத்துவிட்டது மத்திய அரசு. முது நிலை கல்வி சேர்க்கையில் 25சதவிகிதம் கல்வி நிறுவனங்களே மாறுதல்களைச் செய்யலாம் என்றால், முதலில் காணாமல் போவது இடஒதுக்கீடாகத்தான் இருக்கும். ஒரு பொறியியல் கல்லூரிக்கு தேவையான அளவு இடத்தின் அளவை குறைத்து, அதிக அளவில் மாணவர்களை சேர்க்க அனுமதிப்பது எந்த வகையில் பொருத்தமானதாக இருக்க முடியும்? நிர்வாக வியல் கல்லூரிகளில் இதுவரை 60 பேர் படித்த இடத்தில் 120 பேரை அமரவைப்பது என்பது கல்வியின் பெயரில் பணத்தை கறக்கவே உதவும். மாணவர்கள் கல்வி கற்க இந்த ஏற்பாடு ஒரு போதும் உதவாது. இதுவெல்லாம் அறிந்தே மத்திய அரசு மாணவர்களின் கல்வியைப்பற்றி கவலைப்படாமல், கல்வி முதலாளிகளுக்கு கரிசனம் காட்டுவது ஏனோ?

கருணாநிதியின் துரோகம் – தா. பாண்டியன்

இலங்கையில் நடந்து முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் போர், இரண்டு நாடுகளுக்கிடையில் நடந்த போர் அல்ல. முழுக்குடியுரிமை பெற்ற தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக, பல நாட்டுப் படை, போர்க்கருவிகள், அரசியல், நிதியுதவியுடன், அரசு அதிகாரத்தை கையில் வைத்துள்ள இலங்கை அரசு நடத்திய கொடூரமான போர் என்பதை – மீண்டும் நினைவுறுத்தும் அவசியம் எழுந்துள்ளது. 

2009-மே மாதத்தில் தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்து ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன் மகிழ்ச்சிக்காக விழாவையும் கொண்டாடிக் கொண்டது. இந்திய அரசும் இதைப் பாராட்டி, போரினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்து கொள்ள நிதியுதவி செய்வதாக அறிவித்தது. தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக் கூடங்களில் சிக்குண்டு கிடக்கிறார்கள். 

இந்தக் காலத்தில்தான், தமிழக முதல்வர் கருணாநிதி, நம் மெüனம் யாருக்குத் தெரியப் போகிறது என்ற தலைப்பிட்டு, கட்டுரையை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் “”நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை” என்று எழுதியுள்ளார். நானும் அவரிடம் குற்றம் காணவோ, அவர் மீது குறை கூறவோ இதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனாலும் இதனை ஆராய்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு எழுந்துள்ளது. 

தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய்விட்டார்களே, என்ற ஆதங்கத்தில்தான் எழுதுகிறேன். “”வாழவேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் எழுதுகிறேன்” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாகக் கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ்மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகித் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது? ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து, விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருணாநிதி எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மட்டும் நடந்த போராக மட்டும் கருணாநிதி இதைக் கூறுகிறார். இந்தியப் பேரரசும் இலங்கைப் போரில் பங்கெடுத்தது. இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியுமா? தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக 1956 முதல் ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து போராடியதையும் பதிவு செய்து, அன்று முதல் இன்று வரை தனது கட்சி நடத்திய போராட்டங்கள், சட்டமன்றப் பதவிகளைத் துறந்தது, இருமுறை ஆட்சியை இழந்தது, தி.மு.க திரட்டிய நிதி, அது மதிக்கப்படாதது, மதுரையில் பழ.நெடுமாறனால் கூட்டப்பட்ட டெசோ மாநாடு, இந்தியா திரும்பிய அமைதிப்படையை வரவேற்க மறுத்தது என நீண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு ரணில் விக்கிரமசிங்க தந்த பேட்டியையும் ஆதாரம் காட்டியுள்ளார். 

இதற்குப் பின் இவர் குறிப்பிட்டுச் சொல்வதுதான் மிகவும் முக்கியமானதாகும். என்னையும், தம்பி மாறனையும் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தில்லிக்கு அழைத்து – விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப்பிரச்னை குறித்தும், இரண்டு நாள் உரையாடி – அது பற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்குத் தெரிவித்து – நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு, பிரபாகரனுடன் இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ, அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை இங்கிருந்து செய்து தருகிறேன்.  

அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் – இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். என்று கூறி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி, இந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். இதனால், ஈழ விடுதலைப் போராட்டத்தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்றும் எழுதியுள்ளார். அந்தப் படுகொலைக்குப் பின்னர் பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு என பொங்கியெழுந்த ஆதரவு வெள்ளம் வற்றிய ஓடையாகியது என்பதும் உண்மை தான். 

நம்முடைய கேள்வி என்னவென்றால் இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ள இந்த முக்கியத் தகவல்கள், இதற்கு முன்னர், இவரால் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதுதான். பிரதமர் ராஜீவ் காந்தி, கருணாநிதியுடனும் முரசொலி மாறனுடனும் தில்லியில், பேசியது 1989-ம் ஆண்டில். ù காலையுண்டது 1991 மே 21-ம் நாளன்று. கொல்லப்பட்ட போது இவர் முன்னாள் பிரதமர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டும்தான். 1989-க்கும் 1991,மே மாதத்துக்கும் இடையிலான காலத்தில், ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டபடி, கருணாநிதி பிரபாகரனைச் சந்தித்தாரா?  ராஜீவ் காந்தி உறுதியளித்த உதவி பற்றி பிரபாகரனுக்குக் கூறப்பட்டதா? இந்தியப் பேரரசு உதவிக்கரம் நீட்டியதை பிரபாகரன் உதறித் தள்ளினாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கூறி விளக்கம் தர வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு இருக்கிறது.நன்றி: தினமணி  

ஏனெனில், 1989 பிப்ரவரியில் தில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி, முதல்வர் கருணாநிதியை அழைத்துப் பேசியபோது உடனிருந்தவர் முரசொலி மாறன் மட்டுமே. உறுதிமொழி தந்த ராஜீவ் காந்தியும் இப்போது இல்லை, உடனிருந்து கேட்ட மாறனும் இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற, ஒரே ஒருவர் மட்டும் தான் உள்ளார். அவர் தான் கருணாநிதி. ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக இருந்த பெரியவர் மூப்பனாரிடமோ, வாழப்பாடி ராமமூர்த்தியிடமோ இந்தப் பணியை ஒப்படைக்காமல், கருணாநிதியை அழைத்துச் சொன்னது ஏன்? இவர் கூறினால் தான் பிரபாகரனும், போராளிகளும் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் தான். இந்தப் பணி நிறைவேற்றப்பட்டதா? கிடைத்த பதில் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டதா? இவை எல்லாம் இதில் தொடரும் கேள்விகள். 1989 முதல் 1991 மே வரை இந்தச் செய்தியைத் தமிழ் மக்களுக்கு ஏன் தெரிவிக்காமல், அதன் பிறகும் 2009 வரை இது குறித்து மெüனமாக இருந்து இன்று முரசொலியில் கடிதம் ஏன் எழுத வேண்டும்? ராஜீவ் காந்தி கருணாநிதியிடம் தந்த வாக்குறுதி, பிரபாகரனை எட்டியதாகவும் தெரியவில்லை. 

பிரபாகரன், ராஜீவ் காந்தி தந்த வாக்குறுதியை நம்பவும் இல்லை, ஏற்கவும் இல்லை இதில் வேறு சந்தேகம் கலைஞருக்கு இருக்கிறது என்றால், 1991-ல் அமைந்த, தி.மு.க.  ஆதரவு வி.பி.சிங் அரசிடம் அதைக் கூறி, ராஜீவ் காந்திக்குப் பாதுகாப்பு ஏற்பாட்டை இவர் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை தான் நடந்தது. இன்னொரு முக்கிய அரசியல் விளக்கத்தையும் தர வேண்டுகிறேன். 1956 முதல் தந்தை செல்வாவின் குரலோடு சேர்ந்து முழங்கத் தொடங்கிய அந்த இனச்சிக்கல் 2009 வரை தீர்க்கப்படவே இல்லை. இதற்கு யார் காரணம் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாகி, புலம் பெயர்ந்து ஓடுவது தொடங்கி விட்டது. 

இந்திய அரசு, தொடக்க காலத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு இடம் தந்து உதவியது. இலங்கை அரசைக் கண்டித்தது. தீர்வு காண வற்புறுத்தியது. 1956-ம் ஆண்டிலேயே கருணாநிதி தி.மு.க. வின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அவர் தான் இன்று ஆட்சிக்கும் தலைவர். கட்சிக்கும் தலைவர். பா.ஜ.க.வுடனும் தி.மு.க. கூட்டாட்சி நடத்தியது. காங்கிரசுடனும் கூட்டாட்சி நடத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மத்திய கூட்டாட்சியில் பங்கேற்று வருகிறது. தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கு பெறாமல் இருந்த போது, காங்கிரஸ் ஆட்சி, இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு நிலையை எடுத்தது. ஆனால், தி.மு.க. மத்திய மந்திரி சபையில் சேர்ந்த பின்னர், மத்திய காங்கிரஸ் ஆட்சி இலங்கை அரசுக்கு ஆதரவு நிலையையும், போராளிகளை ஒழிக்க ஆயுத உதவி செய்வதும் ஏன்? இந்தக் கொள்கை நிலை – மாற்றத்துக்குக் காரணம் என்ன? 

÷விடுதலைப்புலிகள் தந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் நிராகரித்தனர் எனக் குறை சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஆனால், தி.மு.க. பங்கேற்றுள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் கூடி நிறைவேற்றிய தீர்மானம், சட்டசபைத் தீர்மானம். பிரதமரை நேரில் சந்தித்துத் தந்த வேண்டுகோள் – ஆகியவை பயனற்று குப்பைக் கூடை காகிதமாகிவிட்டதே ஏன்? அது பற்றிய சுய விமர்சனம் இல்லாமல், போராளிகள் தவறாக மதிப்பிட்டுச் செயல்பட்டதை மட்டும் பட்டிலிட்டுள்ளது ஏன்? 

1990 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாலும், 1991 மே மாதம் 21-ம் நாளன்று ராஜீவ் காந்தி வெடிகுண்டுக்கு ஆளான போது அதே இடத்தில் நானும் ரத்தம் சிந்தியவன் என்பதாலும், தமிழ் மக்களை மிகவும் நேசித்தவர், அவர்களது உரிமைகளை ஈட்டித்தர உறுதியுடன் முயன்றவர் ராஜீவ் காந்தி என்பதைத் தெரிந்தவன் நான். அவர் மீது சுமத்தப்பட்டுவரும் களங்கத்தைத் துடைக்க வேண்டியோர் துடைக்கவில்லை. அவருடைய இந்த உள்ளுணர்வைத் தெரிவிக்க விரும்புகிறேன். ÷நானறிந்த வரையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு எல்லாம் பல காரணங்கள் உண்டு. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் குழப்பியதும் காரணமாகும். 

ஆனால் இலங்கைத் தமிழர்கள் தன்னம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை, இலங்கைத் தமிழரின் அரசியல் மனித உரிமைகளை மீட்டு நிலை நாட்டப்பட வேண்டுமெனில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது நட்புக்குரிய நாடு அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும். 

இலங்கைத் தமிழர்களே அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். இறுதி அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர்களால் ஏற்கப்படதக்கதாக அமைய வேண்டும். இதைத் தவிர்த்து தமிழக அரசியலுக்காக இலங்கைத் தமிழர்களின் உயிரைப் பணயம் வைத்து விளையாடுவ தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இறுதியில் அறம் வெல்லும், நம்புவோம். 

மாதம் மும்மாரி பொழிகிறதா?

 

புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அரண்மனையின் அந்தப்புரத்தை விட்டு வெளியே வராத அந்தக்காலத்து மாமன்னர்கள், மந்திரிமார்களைப் பார்த்து “மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்று கேட்ட கதையாகத் தான் இருக்கிறது நம்முடைய பிரதமரின் பேச்சு.

புவனேஸ்வரத்தில் இந்திய பொருளாதார சங்கத்தின் 92வது ஆண்டு மாநாட்டில் பேசும் போது பிரதமர் தன்னுடைய புதிய கண்டு பிடிப்பை வெளியிட்டுள்ளார். புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறிய அதே நேரத்தில், வறுமையை ஒழிப்பதில் நமது இலக்கை இதுவரை எட்டமுடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

வறுமை ஒழிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி நேரு காலத்திலிருந்தே கோஷம் கொடுத்து வருகிறது. இந்திரா காந்தி அவசரநிலைக் காலத்தின் போது, ‘வறுமையே வெளியேறு’ என்று கூட கோஷம் கொடுத்தார். ஆனால் வறுமை வெளியேறியபாடில்லை. மாறாக வறுமையில் வாடும் மக்கள் தொகை எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

பொருளாதார புள்ளிவிவரங்களில் பல்வேறு மோசடிகளை செய்துவரும் மத்திய ஆட்சியாளர்கள் வறுமைக்கோட்டை தீர்மானிப்பதிலும் மோசடி செய்து வருகின்றனர். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காகவே வறுமைக் கோட்டு அளவுக்கான மதிப்பீட்டை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். இந்த அடிப்படையில் தான் பிரதமர் மன்மோகன் சிங் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல குறைந்து வருகிறது என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்தவர் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங். அப்போதுதான் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற பளபளப்பான வார்த்தை விளையாட்டுகளோடு புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்தைநோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பணக்காரர்களின் சொத்து மதிப்பு, புதிய பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக வெகுவாக அதிகரித்து, அவர்கள் உலக பணக்காரர்கள் வரிசைப் பட்டியலை அலங்கரிக்கத் துவங்கியுள்ளனர். மறுபுறத்தில் கடன் சுமை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதை ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் நடத்திய ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங், தன்னுடைய அரசு பின்பற்றி வரும் கேடுகெட்ட பொருளாதாரக் கொள்கையை நியாயப்படுத்துவதற்காக ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படவில்லையென்று நெஞ்சாரா பொய் உரைக்கிறார். அதிகரித்து வரும் வேலையில்லாப் பட்டாளம், பட்டினிச் சாவுகள் என கண்முன்னால் தெரிகிறது இவரது புதிய பொருளாதாரக் கொள்கையின் லட்சணம்.

புத்தாண்டில் பொதுச் சொத்து விற்பனை

நிதி ஆதாரத்தை திரட்டுவது என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மிகப் பெரிய அளவில் தனியாருக்கு தாரைவார்க்கும் திருப்பணியில் மன்மோகன் சிங் அரசு ஈடுபட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் பங்கு விற்பனை மூலம் ரூ.32 ஆயிரத்து 500 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய அனல் மின் கழகம்(என்டிபிசி) மற்றும் என். எம்.டி.சி. ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடியை அரசு திரட்ட உள்ளது. பொதுத்துறை பங்குகளை எளிதாக விற்பதற்கு வழி செய்வதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் விதிமுறைகளும் தளர்த்தப்பட உள்ளது.

இதன் அடிப்படையில் மின் உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் என்டிபிசி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகள் ரூ.11 ஆயிரம் கோடிக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்.எம். டி.சி. நிறுவனம் கனிமங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை அமைப்பாகும். இதன் பங்குகள் 8.38 சதவிகிதத்தை தனியாருக்கு விற்றுத் தீர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரூ.14 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உருக்கு உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தை வகிப்பது ‘செயில்’ நிறுவனமாகும். இதில் அரசின் பங்கு மூலதனத்தில் உள்ள 5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘செயில்’ நிறுவனத்தில் பங்குகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.97 ஆயிரத்து 300 கோடியாகும். படிப்படியாக இந்தப்பங்குகளை தனியாரிடம் விற்பதில் அரசு முனைப்பாக உள்ளது.

நீர்மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.எச்.பி.சி. பங்குகளை ரூ.2013 கோடிக்கும், ஆயில் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை ரூ.2247 கோடிக்கும் விற்க அரசு திட்டமிட்டுள்ளது. தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பைச் சரிகட்ட பெருமுதலாளிகளுக்கு மத்திய அரசு பல சலுகைகளை வாரி வழங்கியது. இதனால் அரசின் நிதிப்பற்றாக் குறை மேலும் அதிகரித்தது. பெரு முதலாளிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக எடுத்த நடவடிக்கைகளால் அரசின் செலவினக் கணக்கு அதிகரித்துள்ளது. இதைச் சரிகட்டு வதற்காக மக்களின் பொதுச் சொத்துக்களை சூறையாடும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் லாபம் தரும் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற நிறுவனங்களின் பங்குகளை விற்கமாட்டோம் என்று மத்திய அரசு வாக்குறுதி தந்திருந்தது. அந்த வாக் குறுதிகளையெல்லாம் தற்போது அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது.

மத்திய அரசின் பித்தலாட்டாம்

மத்திய அரசு வாரி வழங்கிய பொருளாதாரச் சலுகைகளால் தொழில்துறை வளர்ச்சி 10.3 சதவீதத்தை எட்டிவிட்டது என்கிறார் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா. நுகர்பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டில் 1.6சதவீதமாக இருந்தது. அது தற்போது 21 சதமாக தாண்டிக் குதித்து வளர்ந்துவிட்டது என்கிறார் அவர்.

நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 6.5சதவீதமாக இருக்கும் என திட்டக் குழு கணித்திருந்தது. ஆனால் இரண்டாம் காலாண்டில் 7.9சதமாக வளர்ச்சி விகிதம் அதிகரித்ததையடுத்து, முந்தைய கணிப்பை திட்டக்குழு மறுமதிப்பீடு செய்யவுள்ளது என்றும் அலுவாலியா கூறியுள்ளார்.

மறுபுறத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர், வெளிநாடுகளிலிருந்து மூலதனம் வந்து குவிவதால் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், இவ்வாறு வரும் மூலதனம் வெறும் நீர்க்குமிழியாகவே இருக்கும் என்ற அச்சம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். நாட்டிற்கு தேவையான முதலீடு தான் வந்துகொண்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் டி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தியாவில் மூவரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர் அதாவது மொத்த மக்கள்தொகையில் 37 சதவீதத்தினர் ஏழைகளாக உள்ளனர். இது கணிக்கப்பட்டதை விட 10 சதவீதம் அதிகமாகும் என்று டெண்டுல்கர் குழு அறிக்கை கூறியுள்ளது.

மாண்டேக் சிங் அலுவாலியாவோ நுகர் பொருட்களின் தயாரிப்பு 1.6சதவீதத்திலிருந்து 21சதவீதமாக துள்ளிக் குதித்து ஓடுகிறது என்றார். மறுபுறத்தில் டெண்டுல்கர் அறிக்கையில் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம்பேர்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதில் 10 சதவீதம் உயர்ந்து 37 சதவீதம் பேர் பரம ஏழைகளாக உள்ளனர் என்கிறார்.

நுகர்வுப்பொருள் உற்பத்தி அதிகரித்திருந்தால் அது நாட்டு மக்களின் நுகர்வில் பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில்தான் மூன்றில் ஒரு இந்தியர் உள்ளனர். அப்படியென்றால் நுகர்பொருள் சந்தை என்பது யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புற மக்கள் தொகையில் சுமார் 41.8சத வீதம் பேரின் சராசரி மாதாந்திர மொத்தச் செலவாக ரூ.447 மட்டுமே உள்ளது. நகர்ப்புற மக்களில் 25.7சதவீதம் பேர், அத்தியாவசியப் பொருட்களுக்காக சராசரியாக மாதம் ரூ.578.8 மட்டுமே செலவு செய்யும் நிலையில் உள்ளனர் என்றும் டெண்டுல்கர் அறிக்கை கூறுகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநரோ அந்நிய மூலதனம் வந்து குவிகிறது, பொருளாதாரம் ஒளிர்கிறது என்கிறார். திட்டக்குழு துணைத் தலைவரோ தொழிற்துறை வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட கடும் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என்று கணக்கு காட்டுகிறார்.

ஆனால் அரசினால் நியமிக்கப்பட்ட டெண்டுல்கர் குழு அறிக்கை உண்மையை போட்டு உடைத் திருக்கிறது. பிரதமர் துவங்கி திட்டக்குழு துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் வரை கூறுகிற பொருளாதார வளர்ச்சிக்கும் ஏழை இந்தியாவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஏற்கெனவே மூலதனத்தை குவித்து வைத்திருக்கும் முதலாளிகளின் மூலதனம்தான் வளர்ந்துகொண்டே போகிறது. ஏழை மக்கள் மேலும் மேலும் இளைத்துக்கொண்டே போகிறார்கள். இந்த இடைவெளியை தாராளமய துதிபாடிகள் அள்ளிவீசும் புள்ளி விவரங்களால் நிரப்பிவிட முடியாது.

மதுரை தினகரன் பத்திரிகை எறிப்பு வழக்கு?

“நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா? நீயும் அந்த கொலைக்களத்தில் மாண்டு விட்டாயா?” பூம்புகார் படத்தில் வரும் கோவலன் கொலையுண்ட காட்சியில் ஒலிக்கும் பாடல் இது.

இப்போது மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு 3 ஊழியர்கள் பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை என்ற செய்தியைப் பார்க்கும்போது பூம்புகார் படப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திமுகவின் அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு முடிவு தினகரன் நாளேட்டில் வெளியானதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள அந்த அலுவலகம் தாக்கப்பட்டது. மதுரை மேயர் உள்பட இந்த தாக்குதலில் ஈடுபட்ட காட்சி தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியானதோடு சன் தொலைக்காட்சியிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பானது. இந்தத் தாக்குதலின் போது அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதில் 3 அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள். அப்போது மதுரைக்கு வந்த சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று சூளுரைத்தார். ஆனால் இன்றைக்கு தினகரன், தமிழ்முரசு பத்திரிகைகளிலோ, சன் தொலைக்காட்சியிலோ தினகரன் எரிப்பு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செய்தி கூட வெளியாகவில்லை. கலாநிதி மாறன் கூறிய நீதியை நிலைநாட்டும் விதம் இதுதானோ என்று எண்ணத்தோன்றுகிறது. தினகரன் ஊழியர்கள் கொலை என்பது யாருக்கும் தெரியாமல் நடந்த ஒன்றல்ல. பட்டப் பகலில் நடந்த ஒன்று. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து வீடியோ ஆதாரம் உள்பட விரிவான ஆதாரம் உண்டு. ஆனாலும், சர்வசாதாரணமாக குற்றம் சாட்டப்பட்ட 16 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 புகார் மனு கொடுத்தவரிலிருந்து, முதல் சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி உள்பட அனைவரும் பிறழ்சாட்சியாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நடத்திய மத்திய புலனாய்வுத்துறை எந்த லட்சணத்தில் அல்லது எத்தகைய உள்நோக்கத்துடன் நடந்து கொண்டுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. தினகரன் எரிப்பைத் தொடர்ந்து முதல்வர் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பதவி பறிக்கப்பட்டது. சுமங்கலி கேபிள் விஷனுக்கு போட்டியாக ராயல் கேபிள் விஷன் உருவாக்கப்பட்டது. திடீரென அரசு கேபிள் டி.வி.யும் துவக்கப்பட்டது.

 இடையில் கண்கள் பணித்திட, இதயம் மகிழ்ந்திட குடும்ப இணைப்பு ஏற்பட்டது. தயாநிதி மாறன் மீண்டும் மத்திய அமைச்சராக்கப் பட்டார். அரசு கேபிள் டி.வி. அறுத்துவிடப்பட்டது என்பதெல்லாம் வரலாறு அல்ல. நேற்றைக்கு நடந்த நிஜம். இதன் தொடர்ச்சியாகவே தினகரன் எரிப்பு வழக்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இப்போது தினகரன் எரிப்பு வழக்கிற்கும் அதே கதி ஏற்பட்டுள்ளது. ஒரு சாதாரண கொலை வழக்கில் கூட அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். ஆனால், தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் எத்தகைய மேல்முறையீடும் செய்யப்படவில்லை. இப்போது தினகரன் எரிப்பு வழக்கில் அரசு என்ன செய்யப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. பதில் சொல்லவேண்டிய பொறுப்பு வழக்கை நடத்திய மத்திய புலனாய்வுத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உண்டு.

http://www.hindu.com/thehindu/holnus/000200705092201.htm

http://www.hindu.com/2007/05/16/stories/2007051610270100.htm

http://www.telegraphindia.com/1070516/asp/nation/story_7783947.asp

http://www.deccanherald.com/content/40500/17-accused-acquitted-dinakaran-attack.html

மறக்க முடியாத மரணத்தின் நாள்

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கோர விபத்து- அது ஏற்படுத்திய தாக்கம் அதனால் இன்றைக்கும் பரிதவிக்கும் மக்கள் என பட்டியல் போட்டால் மிக நீளமாக இருக்கும்.

நேற்று-சென்ற மாதம் என சம்பவங்கள் நடந்ததே பெரும்பாலோர் நினைவுகளிலிருந்து அழிந்துவிடுகின்றது. இருபத்தி ஐந்து ஆண்டுகள் என்றால் கால் நூற்றாண்டு காலம். எதை நினைவில் கொள்வது என அலுத்துக்கொள்ளகூட தோன்றும்.

அப்படி புறந்தள்ளிவிட முடியாத- நினைவுகளிலிருந்து அகற்ற முடியாத விபத்து மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்தது. கடந்த 1984 டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி நள்ளிரவில் அங்கிருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் உள்ள ஒரு வாயுக் கிடங்கில் இருந்த மிதைல் ஐசோசயனேட் வாயு ளியேறியது.

இவ்வாயு வெளியேற்றத்தால் சுமார் 10,000 பேர் உடனடியாக மடிந்திருக்கக்கூடும். (அரசு எண்ணிக்கை 3787). ஆனால் அவ்வாயுவை உள்வாங்கியதால் கிட்டத்தட்ட 25,000 பேர் மடிந்துள்ளனர்.

இவ்வளவு மனித உயிர்கள் மலிவாக இறந்துபோக காரணம் என்ன?

விபத்து – பின்னணி

1969ம் ஆண்டு போபாலில் நிறுவப்பட்ட பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலை விவசாயத்திற்கு தேவையான பூச்சி மருந்து (கொல்லி)களை தயார் செய்தது. 1979ல் விஷவாயுவான மிதைல் ஐசோசயனேட் வாயு தயாரிக்கும் பகுதியையும் துவக்கியது.

இவ்வாயுவால் எக்காலத்திலும் பிரச்சனை எழக்கூடும் என அறிந்தே நிர்வாகம் உற்பத்தியைத் துவக்கியது. அந்த ஆலையில் விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்த நிபுணர்குழு பின்வரும் காரணங்களை விளக்கியது.

* தயாரிப்பு முறைகள் அனைத்தும் அபாயகரமான பழக்கங்களாக இருந்தவை.

* மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆலையை அமைத்தது.

* பாதுகாப்பு முறைகளில் மற்றும் நடவடிக்கைகளில் இருந்த பலவீனம்

* அந்த ஆலை முழுவதும் மனிதர்களாலே இயக்கப்பட்டது. அதாவது அதிநவீன இயந்திரங்கள் இருந்தும் பயன்படுத்தப்பட வில்லை.

1985ல் இவ்விபத்து பற்றி ஆய்வு நடத்திய மற்றொரு குழு ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் மேலும் சில புது தகவல்களை கண்டறிந்து வெளியிட்டது. 1980களிலேயே உற்பத்தியை நிறுத்திய இந்நிறுவனம் 1984ல் எப்படி நச்சு வாயுவை உற்பத்தி செய்ய- சேமிக்க அனுமதிக்கப்பட்டது?

பாதுகாப்பு வசதிகள் தேவையை விடக் குறைவாகவே இருந்தது. பணம் மிச்சப்படுத்தப்படவேண்டும் என்பதற்காக, நச்சு வாயுவை சேமிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சேமிப்பு தொட்டிகள் முறையாக பராமரிக்கப் படாமல், மேலும் குளிர்பதன வசதிகள் உருவாக்கப்படாமல் இருந்தது.

ஆக மொத்தத்தில் விபத்துக்குக் காரணம் என பட்டியலிட்டால், முதலில் யூனியன் கார்பைடு நிறுவனம், இந்திய அரசு, மத்தியப் பிரதேசமாநில அரசு என வரிசைப்படி செல்லும். இவ்விபத்து நடப்பதற்கு மேலும் ஒரு காரணம் ஊழியர் பற்றாக்குறை. முழுமையான- தேவையான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படாமல், இருந்தவர்களை வைத்தே பெரும் பணிச்சுமையுடன் வேலை வாங்கியது.

முன்னெச்சரிக்கை குரல்கள்

ஆலை துவங்கப்பட்டு 7 ஆண்டுகளிலேயே, அதாவது 1976-ல் அங்கிருந்த இரு தொழிற்சங்கங்கள் மாசுபடுதல் மற்றும் விஷவாயுக்களின் தாக்கம் பற்றி கேட்டன. நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறியது.

அதன்பின்னர் 8 ஆண்டுகளில் பல சிறு விபத்துகள் நடைபெற்றது. உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலுங்கூட, அந்த ஆலையில் இருந்த விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் என அனைவரும் கூறியது வீணாயிற்று.

விபத்தும் – பாதிப்பும்

இரவில் கசிவு ஏற்பட்டதால், பலர் உறக்கத்தில் இருந்தனர். சிலர் என்ன நடக்கின்றது எனத் தெரியாமலேயே மடிந்தனர். கடுமையான இருமல், நுரையீரல் அடைப்பு, கண் எரிச்சல், வாந்தி என அனைத்தும் ஒருசேர தாக்கியது.

சம்பவ இடத்தைவிட்டு தப்பிப்பதற்காக, ஓடியதால் தேவைக்கு அதிகமான மூச்சை உள்வாங்கியதால் உடனடியாக மரணமடைந்தனர். தெருக்களில், காலனி வீடுகளில் ஏற்பட்ட நெரிசலிலும் பலர் இறந்ததாக சொல்லப்படுகின்றது.

அன்றைய நாள் இரவை விட டிசம்பர் 3 அன்று விபத்தின் கொடூரத்தை உலகம் அறிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ மனைகளிலும், வீடுகளிலும் உயிரிழந்தனர். சுமார் 2 லட்சம் மக்கள் அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

இன்றும் தொடரும்

25 ஆண்டுகளுக்கு பிறகும் இன்று வரையில், விஷவாயு தாக்குதல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. சுமார் 2 லட்சம் மக்களுக்கு இவ்விபத்தால் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது தலையிலிருந்து கால் வரை அனைத்து உறுப்புகளிலும் தென்படுகின்றது.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டுமென இந்திய அரசு அறிவித்து, சில நடவடிக்கைகளை எடுத்தது. யூனியன் கார்பைடு நிறுவனம் 350 மில்லியன் அமெரிக்க டாலர்களை தருவதாக அறிவித்து வட்டியுடன் 470 மில்லியன் டாலர் இந்திய அரசால் பெறப்பட்டது.

தன்னிடம் இருக்கும் பங்குகளை நிறுவனம் விற்றது. அந்த வருவாயில் விபத்தில் பாதிக்கப்பட்ட உயிர்காப்பாற்றப்பட்டவர்களுக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது நிறைவேற்றப்பட்டது.

18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே இழப்பீடு என அறிவித்தது அரசு. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் குழந்தைகள் தான்.

சில நாட்களுக்கு உணவும்; பின்னர் குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டது. விபத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ.25,000, மரணமடைந்தவர்களுக்கு ரூ.62,000 வழங்கப்பட்டது. சில காலம் ஆண்களை இழந்த பெண்களுக்கு விதவை பென்சனாக ரூ.200ம், பின்னர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு ரூ.750ஆக உயர்த்தப்பட்டது.

1986ல் ஆலை முழுவதும் மூடப்பட்டது. ஆனால் சேமிப்பு கிடங்கில், ரசாயன கழிவுகள் சிறு அளவுகளில் இன்றும் இருக்கின்றது என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆலையை சுற்றியுள்ள பகுதிகள் கழிவுகளை கொட்ட பயன்படுத்தப்பட்டது. அது நிலத்தடி நீரை வெகுவாகப் பாதித்துள்ளது. பல ரசாயன கலவை அத்தண்ணீரிலே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வாரன் ஆண்டர்சன், கைது செய்யப்பட்டு 3 நாட்களில் விடுதலை ஆனார். (அவ்வளவு செல்வாக்கான மனிதர்).

ஒரு மிகப்பெரிய உயிர்ச்சேதம் விளை வித்த இச்சம்பவம் நடந்து முடிந்து இன்றோடு இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக உரிய இழப்பீடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, தொடரும் சுகாதார- உடல் நலக் கேடுகள் என அவதியுறும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. தவறு செய்தவர்களோ உரிய முறையில் தண்டிக்கப்படவில்லை. ஆனால் ஆலை விற்கப்பட்டது. வேறொரு நிறுவனம் இன்றும் தனது உற்பத்தியை செய்து கொண்டிருக்கின்றது.

இப்படி நிலை இருக்க, இன்றும் மூன்றாம் உலக நாடுகளில் தங்கள் ஆலைகளை உருவாக்கி பல பிரச்சனைகளை நம்மீது தள்ளுகின்றது ஏகாதிபத்திய நாடுகள். நமது ஆட்சி யாளர்களும் அந்நிய முதலீடு என மார்தட்டிக் கொள்கின்றனர். எச்சங்களையும், மிச்ச சொச்சங்களையும் நம்மீது தள்ளிவிட அனுமதிக்கக்கூடாது.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற கோர விபத்துகளில், போபால் விஷவாயு கசிவு முக்கியமானது. ஆட்சியாளர்களின் நிர்வாக அவலட்சணத்தை படம் பிடித்துக் காட்டிய சம்பவம் இது!

மீண்டும் ஒரு போபால் ஏற்படா வண்ணம் விழிப்பாக இருப்போம்!

இந்தியாவை பாதுகாப்போம்!

சுரங்க அரசியல்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஓபுலாபுரம் இரும்புத்தாது சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிடு மாறு மத்திய அரசை ஆந்திர அரசு கோரியுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் புயலைக் கிளப்பிய ரெட்டி சகோதரர்கள் தற்போது ஆந்திர அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஓபுலாபுரத்தில் உள்ள இரும்புத்தாது தொழிற்சாலையை கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஜனார்த்தன ரெட்டி குத்தகைக்கு எடுத்ததில் பெரும் முறைகேடு நடந்துள்ளது என்றும், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. கர்நாடக அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களும், ஜெகன்மோகன் ரெட்டியும் தொழில்முறை கூட்டாளிகள் என்றும், ஜெகன் மோகன் ரெட்டியின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் ரெட்டி சகோதரர்கள் முதலீடு செய்துள்ளனர் என்றும் தெலுங்குதேசக் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஓபுலாபுரம் இரும்புத்தாது தொழிற்சாலை குத்தகை குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரியுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார். ஓபுலாபுரம் சுரங்கம் குறித்து சிபிஐ விசாரணை கோரியுள்ளதை தாம் வரவேற்பதாகவும், சுரங்க முதலாளிகளுக்கு இடையிலான மோதலில் தமது பெயரை தேவையின்றி இழுப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். ராஜசேகர ரெட்டி மறைவைத் தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆந்திர மாநில எம்எல்ஏக்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். இல்லையென்றால் ராஜினாமா செய்யப்போவதாகவும் மிரட்டினர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் உடனடியாக இதற்கு இசையவில்லை. கர்நாடக மாநிலத்தில் கோஷ்டிப்பூசல் காரணமாக தங்களது சுரங்கக்கொள்ளைக்கு சில முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திய எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று ரெட்டி சகோதரர்கள் கலகம் செய்தனர். எம்எல்ஏக்களை கடத்தி வைத்து, மேலிடத்துடன் பேரம் பேசினர். பாஜக மேலிடம் தலையிட்டு, ரெட்டி சகோதரர்களின் கொள்ளைக்கு தடைவிதிக்க வேண்டாம் என்று பஞ்சாயத்து செய்ததைத் தொடர்ந்து எடியூரப்பாவின் பதவி தப்பியது. ஆனால் அவரது தீவிர ஆதரவாளரான பெண் அமைச்சர் ஷோபாவின் பதவி பறிக்கப்பட்டது. எடியூரப்பாவினால் மாறுதல் செய்யப்பட்ட, ரெட்டி சகோதரர்களுக்கு ஆதவான அதிகாரிகள் மீண்டும் அதே பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இந்த தொழில் அதிபர்களின் செல்வாக்கு மண்டலம் ஆந்திரா வரை பரவியுள்ளதை ஓபுலாபுரம் சுரங்க விவகாரம் உணர்த்துகிறது. அரசியல் என்பது ஜனநாயக முறையில் மக்களுக்கு சேவை செய்யும் பணி என்ற நிலை மாற்றப்பட்டு, முதலாளிகளின் சதுரங்க விளையாட்டு என்ற நிலை உருவாக்கப்படுவது மக்களாட்சியின் மாண்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியதாகும். தேசிய அரசியலிலும் இதன் நிழல் படிகிறது. முந்தைய ஆட்சியின்போது மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசைக் காப்பாற்ற இந்தியப் பெருமுதலாளிகளின் கரன்சி விளையாட்டு நாடாளுமன்ற கட்டிடம் வரை நீண்டதை நாடு பார்த்தது. தேசத்தை நேசிப்போர் கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்று இது.