ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொள்ளைக் கூட்டத்தோடு உறவாடிய பாஜகவினர் இப்போது ஆப்பசைத்த குரங்காய் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். “பாஜக வித்தியாசமான கட்சி” என்ற அவர்கள் பற்றிய விளம்பர வாசகங்கள் அர்த்தமிழந்து பல்லிளித்து நிற்கிறது கர்நாடகாவில் .
முதன் முதலாக தென் மாநிலத்தில் பாஜக வேரூன்றி விட்டது என கர்நாடக வெற்றியை அவர்கள் வருணித்தார்கள். மதச் சார்பற்ற ஜனதா தளம் செய்த கோமாளித்தனங்களாலும்; காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளாலும் கசந்து போயிருந்த மக்களிடம் பணத்தை அள்ளிவீசி பெறப்பட்ட வெற்றியே அது. அப்போதும் கூட அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் சுயேட்சைகளையும் இதரர்களையும் விலை கொடுத்து வாங்கி (Opreation Loutus) ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தார் எடியூரப்பா. ஆக, கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்ததே பண பலத்தால் தான்.
கர்நாடக அரசியலை ஊன்றிக் கவனிக்கிற யாரும் அங்கே நடப்பது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியென்று கூறமாட்டார்கள். பெல்லாரி ஜனார்த்தன ரெட்டி குடும்ப பிரைவேட் பார்ட்டி என்றே கூறுவார்கள். அரசுக்கும் மக்களுக்கும் சொந்தமான கனிம வளத்தை கொஞ்சம் சட்டப் பூர்வமாகவும், மிக மிக அதிகமாக சட்ட விரோதமாகவும் கொள்ளையடித்துவிட்டு, அதில் ஒரு சிறு பகுதியை எலும்புத் துண்டுகளைப் போல மக்களுக்கு வீசுகிற ஸ்டைல்தான் அவர்களுடையது.
தங்கள் வெற்றிக்கும் ஆட்சி அதிகாரப் பசிக்கும் அவர்கள் தயவு தேவை என்பதால் இத்தனை காலம் அந்தக் கொள்ளையை கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. ஆயினும் மக்களிடம் பதில் சொல்ல வேண்டியிருப்பதால் சற்று கட்டணம் உயர்த்தியதும் “பாலூட்டுகிற காம தேனு”வாக பாஜகவுக்கு காட்சியளித்தவர்கள் “பாசக் கயிறை”வீசுகிற எமனாக காட்சியளிக்கத் துவங்கிவிட்டனர்.
ரெட்டி சகோதரர்கள், தங்களுக்கு 71 எம்எல் ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறிவருகின்றனர். இந்த எம்எல்ஏக்களை சென்னை, ஐதராபாத், கோவா ஆகிய இடங்களில் அடைத்து வைத்துள்ளதாக எடியூரப்பா கோஷ்டியினர் கூறுகின்றனர்.
ஆந்திராவில் காங்கிரஸ் தலைவர்களோடும், கர்நாடகாவில் பாஜகவோடும் உறவாடி தங்கள் கனிமக் கொள்ளையை ஜாம் ஜாம் என நடத்திக் கொண்டிருக்கும் ஒரு குடும்பம், ஒரு மாநில ஆட்சிக்கு சவால் விட முடியுமென்றால்; பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கொள்கை லட்சணம் அவ்வளவுதான்.
அதிகாரிகளை, பத்திரிகைகளை, நீதிபதிகளை, விலைக்கு வாங்கும் பணத் திமிங்கலங்களால் விலைக்கு வாங்கப்பட்ட கட்சிதானே பாஜக! அவர்களுக்கு கொள்கையைப் பற்றி, நேர்மையைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. மதவெறியும் பணத் திமிங்கலங்களும் சேர்ந்து நடத்தும் அரசியல் வியாபாரத்தை மக்கள் புரிந்து கொண்டு விரட்டியடிக்க வேண்டும். இந்த ‘புனிதக் கூட்டணி’ ஆட்சி தொடருமானால் அது மக்களாட்சி மாண்புக்கே தலை குனிவாகும். மக்கள் நலனையும் மதநல்லிணக்கத்தையும் முன்னிறுத்துகிற புதிய அரசியல் கலாச்சாரத்துக்காக போராட வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் என்பதே கர்நாடகா சொல்லும் சேதி.
